Skip to main content

போர்ப் பட்டாளங்கள்

மேசையில் ஊர்வலம் போகும்

குதிரைப் பட்டாளங்களைப் பார்த்திருந்த சிறுவன்

உறங்கிப் போயிருந்தான்

சிப்பாய்களிறங்கி தப்பித்து வந்த

முற்றத்தில் யானைகளின் நடனம்


தூரத்து மேகங்களிடையிருந்து

திமிங்கிலங்கள் குதித்திட

பாய்மரக் கப்பல்களின் பயணம்

கைகொட்டிச் சிரிக்கும் குழந்தையின் காலடியில்

படை வீரர்களின் வாட் போர்

கதை சொல்லும் தங்கையின் மொழியில்

கடற்குதிரை நடை


சிங்க வேட்டை சுவர்ப்படத்தின் கீழே

சிறுவனிடம் கதை கேட்கும் கிழச் சிங்கம்

விளக்கின் நிழலில் குள்ளநரி

கூடையில் இரட்டைக் குழந்தைகள்

தாலாட்டும் அம்மாவின் புத்தகத்தில்

கதைமாந்தர்களின் உறக்கம்


செதுக்கிய மரச் சிற்பங்களிடையிருந்து

எழுந்து நிற்கும் புதுச் சிலை

அப்பாவின் கை தொட்டு

உரத்துப் பேச ஆரம்பிக்கிறது

நிலவிலிருந்து இறங்கிவரும் பாலம்

யன்னல் கதவிடையில் முடிய

கட்டிலுக்கு இறங்கி வருகின்றனர்

தேவதைகளும் சாத்தான்களும் ஒருசேர


படுக்கையில் எழுப்பிய மாளிகை உச்சிகளில்

கொடிகள் பறக்கின்றன

வழமை போலவே

கீற்றுப்படைகளோடு வந்த ஒளி

மூடியிருந்த கண்ணாடி யன்னலோடு போரிட

சிதறிய வெளிச்சம் அறை நிரப்பி

என் கனவு கலைத்திற்று

Comments

மிக அருமை.முதன் முதலாக
வெளிச்சத்தின் வரவுக்காக வருத்தப்பட்டேன்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
தாலாட்டும் அம்மாவின் புத்தகத்தில்

கதைமாந்தர்களின் உறக்கம்

இதோடு நிறுத்தியிருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது ...கவிதை மிக வித்தியாசமாக அருமையாக இருக்கிறது