Skip to main content

Posts

Showing posts with the label எம்.ரிஷான் ஷெரீப்

சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்

பாகங்களாக உடைந்திருக்கிறது அவ் வனத்தின் பட்டுப்போன மரமொன்றினூடு தென்படும் முழு நிலவு விருட்சங்களால் ஈரலிப்போடு உறிஞ்சப்படுகின்றன வனத்தின் எல்லை மர வேர்களை தழுவும் சமுத்திரத்தின் அக் கணத்து அலையில் இருளை ஊடறுத்துச் சிதறும் ஒளிக் கிரணங்கள் காற்று அணைக்கப் பாடுபடும் அந்த ஓடத்து விளக்கினை ஏற்றியவன் கரங்களிலிருந்து விசிறப்படும் வலையினில் சிக்கிக் கொள்கிறது தண்ணீரில் முளைத்த பௌர்ணமி வேட்டைக்காரனுக்குத் தப்பிய தேன்கூடொன்று ஒளிந்திருக்கும் மலைக்குன்று இதுவல்லவோ எந்தப் பாதச் சுவடுகளும் தொட்டிராச் சருகுக் குவியல் சலசலத்து எழுப்பும் இசை தேனீக்களுக்குத் தாலாட்டோ எத்தனையோ நிலவுகளை ரசித்த புத்தர் , சிலையாகித் தனித்திருக்கும் வனத்தின் விகாரைக்கு தூய மலர்களோடு அணிவகுக்கும் வெண்ணிற ஆடை பக்தர்களுக்கு வழிகாட்டும் நிலவின் விம்பம் அவர்கள்தம் நகங்களில் மின்னுகிறது நீரின் மேல் மிதந்த நிலவு அசைந்து அசைந்து மூழ்கும் காலை தீக்குழம்பாய் உருகும் ஆகாயத்தில் தொலைதூரச் செல்லும் பறவைகள் தனித்த புத்தர் சிலையையும் விருட்சமெனக் கொண்டு தரித்துச் செல்லும் அக் கணம் மட்டுமேதான் சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்

கடிகாரத்திலிருந்து உதிரும் காலம்

ஆடையின் நூலிழைகளைக் காற்றசைத்துப் பார்க்கும் காலம் பட்டுத் தெறிக்கும் வெளிச்சப் புள்ளியில் துளித் துளியாய் திணறும் ஓவியம் தீட்டும் தூரத்து மின்னல் ஆகாயம் கிழித்துக் குமுறிட அதிவேக விலங்கொன்றென மழை கொட்டும் பொழுதொன்றில் வனாந்தரங்களைத் திசைமாற்றவென எத்தனிக்கும் அதே காற்று செட்டைகளைத் தூக்கி நகரும் வண்ணத்துப் பூச்சிக்கு ஏரி முழுவதும் குடித்திடும் தாகம் சோம்பலில் கிடத்தியிருக்கும் உடலுக்குள் உணர்த்தப்படும் தூரத்து ரயிலினோசை மழை , காற்று , குளிர் விழிகள் கிறங்கியே கிடக்கும் பணி நாள் காலை கடிகாரத்திலிருந்து உதிர்கின்றன காலத்தின் குறியீடுகள் துளித் துளியாய்

ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா

' ஓ பரமபிதாவே ' துளி நம்பிக்கையும் சிதறிப்போன அன்று ஆச்சியின் அழுகை ஓலம் ஆஸ்பத்திரி வளாகத்தை அதிரச் செய்திருக்கக் கூடும் சளி இறுகிச் சிதைத்த நெஞ்சுக் கூட்டோடு வசதிகள் குறைந்த வவுனியா வைத்தியசாலை பல நூறு கிலோமீற்றர்கள் தொலைவில் அவளை கண்டிக்கு அனுப்பியிருந்தது வானமும் அதிர்ந்த நாளதில் உயர் மருத்துவம் மகளை எப்படியும் காப்பாற்றிடும் நம்பிக்கையும் ஜெபமாலையும் துணையாக ஆச்சியும் வந்திருந்தாள் பார்வையாள விருந்தினராக இருவர் மட்டுமே உள்ளனுப்பப்படும் அவர்களுக்கென்று யாரும் வராத வாயிலையே பார்த்தபடி எப்பொழுதும் கட்டிலருகே மெலிந்த ஆச்சி அமர்ந்திருப்பாள் குழாய்கள் வழியே வரும் உயிர்க்காற்று , மருந்து , கரைசல் உணவு எல்லாவற்றையும் ஏற்றிருக்கும் ஆரோக்கியமேரி வற்றிய உடல் சுவாசத்துக்கு மட்டுமே அசைய கண்களில் மீதமிருக்கும் உயிர் யாரையோ தேடியபடி கண்மணியாயசையும் அவர்களறியாச் சிங்கள மொழியை தமிழுக்கு மாற்றிச் சொல்ல உதவப் போய் அவ்விருவர் துயர் கதையறிந்தேன் பிறப்பிடம் யாழ்ப்பாணத்தினொரு கடற்கரைப் பிரதேசம் தற்பொழுது முகாம் வாசம் மேரிக்கு ஒரே மகன் சென்ற வருடம் ...

அக்கறை/ரையை யாசிப்பவள்

அன்றைய வைகறையிலாவது ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென படிப்படியாயிறங்கி வருகிறாள் சர்வாதிகார நிலத்து ராசாவின் அப்பாவி இளவரசி அதே நிலா , அதே குளம், அதே அன்னம், அதே பூங்காவனம், அதே செயற்கை வசந்தம் அதுவாகவே அனைத்தும் எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை நெகிழ்ச்சி மிக்கதொரு நேசத் தீண்டலை அவள் எதிர்பார்த்திருந்தாள் அலையடிக்கும் சமுத்திரத்தில் பாதங்கள் நனைத்தபடி வழியும் இருளைக் காணும் விடுதலையை ஆவலுற்றிருந்தாள் காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள் அவள் நிதமும் அப் புல்வெளியோடு வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும் அவளது கற்பனையிலிருந்தது இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா ஒரு சிறு ஓடம் போதும் எல்லை கடந்துசென்று சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென அச் சமுத்திரத்தின் அக்கரையில் அவளுக்கொரு குடில் போதும்

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - சிறுகதை

காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன . அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும் . தெருவின் கரண்ட் கம்பிகள் , தொலைபேசிக் கம்பிகளில் , வேலியோரப் பூவரச மரங்களில் , வீட்டுக் கூரைகளில் , மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும் . ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை , திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை , துரத்துவதுமில்லை . அவன் வீட்டுக்குத் திரும்பி , மறுபடியும் வெளியே வரும் சமயம் வந்து கொத்திவிட்டுப் பறக்கும் . அதை அவன் கவனித்திருக்கிறான் . ஒருமுறை கழுத்துப்பகுதியில் சிறகுதிர்ந்த , சற்று சாம்பல் நிறம் கலந்த காக்கை இப்படித்தான் செய்தது . எல்லாக் காக்கைகளும் இப்படித்தானென அதிலிருந்து அவன் புரிந்து கொண்டான் . தங்களுக்குள் முறை வைத்துக்கொண்டு வந்து கொத்துகின்றனவோ என்று கூட ஐயப்பட்டான் . காக்கை கொத்திவிட்டுப் பறக்கும்போதுதான் அவன் ஆதி முதல் கற்றறிந்த வசவு மொழிகளை வெளியில்...