Skip to main content

இது 25வது கவிதைக் கூட்டம்

அழகியசிங்கர் 




வழக்கம்போல் இன்று எல்லோரும் திறமையாக கவிதை வாசித்தார்கள்.  இது 25வது கவிதைக் கூட்டம்.  திரு பிரவீண் பஃறுளி அவர்கள்  'நவீன கவிதையில் அறிவியல் ஓர்மை'  என்ற தலைப்பில் சிறப்பாகப் பேசினோர். அவர் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பேசினார்.  அதன் பிறகு கவிதை வாசிப்பு நடந்தது.  நான் 'தீபாவளி' என்ற தலைப்பில் பேசினேன்.  அதை இங்கு அளிக்க விரும்புகிறேன்.




தீபாவளி ---


அந்த வருடம்
தீபாவளி போது ஒரே மழை
வெள்ளம். தண்ணீர் வீட்டிற்குள்
நுழைந்து எல்லாவற்றையும் 
எடுத்துக்கொண்டு போயிற்று 
பாத்திரங்கள் தெருவில்
மிதக்கத் தொடங்கின
ஓடிப்போய் எடுத்தோம்.

செத்துப்போன அம்மாவின் ஞாபகமாய்
தவசம்.  தீபாவளிக்கு அடுத்தாள்.
வாத்தியார்கள் நனைந்தபடி வந்து சேர்ந்தார்கள்
நாங்கள்
ஈரமான வேஷ்டிகளைக் கட்டிக்கொண்டு
தவசம் செய்தோம்.

அம்மா புகைப்படத்தைப் 
பார்த்தேன். புன்னகைத்தபடி இருந்தாள்
என்றுமில்லாத அன்று அலாதியாய் தெரிந்தாள்
மாடியில் பிண்டத்தை எடுத்துக்கொண்டு
காக்கையைக் கூப்பிட்டோம்..

காக்காய் வரவில்லை
ஆனால் மழை ரூபமாய் அம்மா வந்தாள்

மறக்க முடியாத தீபாவளி
13.11.2020  (வெள்ளி)

Comments

Popular posts from this blog