Skip to main content

அங்கும் இங்கும்........

அழகியசிங்கர்



பத்மஸ்ரீ விருதை தவிர்ப்பதாக ஜெயமோகன் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.  இதைக் காரணமாக வைத்துக்கொண்டு சிலர் ஜெயமோகனை தாக்கியும் இன்னும் சிலர் அவரை வாழ்த்தியும் வலைதளத்தில் தங்கள் கருத்துகளை எழுதி உள்ளார்கள்.  இந்தப் பரிசை ஏற்பதால் அவருக்கு என்ன அவமதிப்புகளும், புறகணிப்புகளும் உருவாகும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.  

இதனால் ஜெயமோகனுக்கு எதிர்காலத்தில் யாரும் பரிசு தர யோஜனை செய்வார்கள்.  ஒரு பரிசு என்பது ஒருசிலரின் முயற்சியால்தான் கிடைக்கிறது.  இதை யாரும் பெறுவதற்கு பெரிய சிபாரிசு செய்யக் கூடாது.  அது தானாகவே கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் விட்டுவிட வேண்டும. ஜெயமோகனுக்கு இந்த விருது தானாகவே கிடைத்துள்ளது.  அதற்கு ஏன் வேண்டாம் என்று அவர் மறுக்கிறார் என்பது புரியவில்லை.  ஜெயமோகனுக்கு இந்த விருதை இந்த அரசு கொடுக்கவில்லை என்றால் வேற யார் பின்னால் அவருக்குக் கொடுப்பார்கள் என்பது கேள்விக்குறியே?

'இந்து மெய்யியல்மேல் எனக்கிருக்கும் அழுத்தமான நம்பிக்கையை முன்வைத்தே எழுதி வருகிறேன்,' என்று குறிப்பிடுகிறார்.  அப்படியிருக்கும்போது இந்த விருதை வாங்க ஏன் தயங்க வேண்டும்.  ஜெயமோகன் எது எழுதினாலும் அவரைத் தாக்க சிலரும், அவரை கொண்டாட சிலரும் இருந்துகொண்டே இருப்பார்கள்.  மனதில் படுவதை வெளிப்படுத்துவார்.  எழுத்தாளர் அகிலன் பெயரில் நடந்த நாவல் போட்டியில் தேர்வு செய்யப்பட்டு ஜெயமோகனின் ரப்பர் நாவலுக்குப் பரிசு கிடைத்தது. புத்தகத்தை நாவலுக்குப் பரிசு தரும் அமைப்பே அடித்து, அந்த நாவலுக்கான பரிசையும் கொடுத்தது.  ஜெயமோகன் பேசும்போது அகிலனை நாவலாசிரியராக தான் ஏற்கவில்லை என்று குறிப்பிட்டார்.  அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எனக்கு அவர் பேசியதைக் கேட்டு திகைப்பாக இருந்தது.

அவ்வாறு பேசியதால் என்ன ஆயிற்று என்றால் ஒவ்வொரு ஆண்டும் அகிலன் பெயரில் நடக்க வேண்டிய நாவல் போட்டி அந்த வருடத்துடன்  விடை பெற்று கொண்டது.  புதியதாக நாவல் எழுதுபவருடைய நாவலையும் பிரசுரம் செய்வதோடு, பரிசும் கொடுப்பதும் அத்துடன் நின்று விடடது.  இது புதியதாக எழுதுபவர்களுக்கு நஷ்டம்.   ஜெயமோகன் எதுவும் சொல்லாவிட்டால் ஒன்றும் நடந்திருக்காது.  

பரிசு அல்லது விருது பெறுவதற்கு தமிழ் நாட்டில் இன்னும் பல எழுத்தாளர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.  நமக்கு இந்த வாய்ப்பு கிடைக்காதா என்று ஏக்கத்துடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.   இதில் ஒரு விருதை வேண்டாமென்று மறுப்பவர்களுக்கு இனிமேல் க்யூவில் நிற்க வேண்டுமென்றால் கடைசியில்தான் போய் நிற்க வேண்டி வரும்.  இந்தக் க்யூவில் கடைசி ஆளாக நானும் நின்று கொண்டிருக்கிறேன்.

                                                                                     ********

இன்னும் சில தினங்களில் விருட்சம் இதழின் 99வது இதழை அச்சுக்குக் கொண்டு வந்து விடுவேன்.  போன இதழ் தயாரிக்கும்போது இதழ் செலவு கொஞ்சம் அதிகமாகி விட்டது.  இது குறித்து அச்சகத்தாருடன் பேச வேண்டும். மொத்தமாக ஒரு இதழை அச்சடிக்க இவ்வளவு கொடுத்து விடுங்கள் என்கிறார்கள்.  இதில் காகிதத்தின் விலை என்ன? பைன்டிங் விலை என்ன? ஒரு பாரம் அடிக்க எவ்வளவு ஆகும் என்பதெல்லாம் சொல்வதில்லை. திரும்பவும் நான் பழையபடி ஆரம்பிக்க வேண்டுமென்று நினைக்கிறேன். பேப்பர் விற்பவரிடம் சென்று பேப்பர் வாங்க வேண்டும்.  பைன்டரிடம் சென்று ஒரு பாரம் மடிக்க எவ்வளவு என்று பேரம் பேச வேண்டும். இப்போதெல்லாம் நெகடிவ் கிடையாது.  அதனால் பாரம் தயார் செய்ய எவ்வளவு என்று கேட்க வேண்டும்.  

ஆனால் ஒரு இதழ் விருட்சம் கொண்டு வர போதும் போதுமென்று ஆகிவிடும்.   எழுதுபவர்களே கிடையாது. இப் பத்திரிகையில் எழுதினால் யாருக்கும் சன்மானம் கிடையாது.  எழுதுபவர்களுக்கு எந்த நிச்சயமும் இல்லை.  பத்திரிகை எப்போது வரும் என்று சொல்ல முடியாது. நான் ஒருவனே நினைத்தால் எல்லாப் பக்கங்களையும் எழுதி விடலாம்.  ஆனால் அது தர்மம் இல்லை.  படிப்பவர்களை இப்படியெல்லாம் கஷ்டப் படுத்த விரும்பவில்லை. இப்படித்தான் 99 இதழ்கள் வந்து விட்டன.  100வது இதழ் ஏப்ரல் மாதம் வர உள்ளது.
                                                                               *****

இந்தப் பத்திக்கு நான் வைத்தத் தலைப்பைப் பற்றி ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.  முதலில் ஒரு சொல் கேளீரோ என்ற தலைப்பை வைத்தேன். அதை யாரோ பயன்படுத்துவதாக தோன்ற, வேண்டாம் என்று முடிவு எடுத்தேன். அடுத்தது அக்கம் பக்கம் என்ற பெயரை யோசித்தேன். அது கசடதபறா வில் நா கி பயன்படுத்திய தலைப்பு,  அங்கும் இங்கும்தான் பொருத்தமாக இருக்கும் என்று வைத்துள்ளேன்.
                                                                              (இன்னும் வரும்)

Comments