Skip to main content

முதற்சான்றிதழ் !


 
டாக்டர் ஜெ.பாஸ்கரன்
 
 
பண்டாரம், சங்கு, தட்டு மணி ஏதுமின்றி அந்த சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. ஈரத்தலை, ஈர உடையுடன், உடல் பூரா திருநீறு பூசி, கையில் தீச்சட்டியுடன் முதியவர் ஒருவர் முன்னே செல்ல, முகத்தில் எவ்வித சலனமும் இன்றி நான்கைந்து பேர் அவருடன் மெதுவாக நடந்து கொண்டிருந்தனர்....
 
அலங்காரம், ஜோடனைகள், கட்சிக் கொடிகள், பட்டாசு வெடிகள், குத்தாட்டங்கள் ஏதுமின்றி புதிதாக வேய்ந்த பச்சைப் பாயில், அந்தப் பாட்டி – இப்போது வெறும் பிரேதம் – நெற்றியில் ஒரு ரூபாய்க் காசோடு, கண் மூடிக் கிடந்தது..
 
மூலை திரும்பி, இடுகாட்டுக் கப்பி சாலையின் ஏற்ற இறக்கங்களில் மூங்கில் தூக்கிகள் சென்ற போது, பாட்டியின் உடல் லேசாக ஆடியது – அப்போதுதான் எதிர்பாராத அந்த நிகழ்ச்சி நடந்தது. பாட்டி திடீரென்று கண்களைத் திறந்து உருட்டிப் பார்த்தாள். ‘ கட்டேல போறவங்களா…. எங்கெடா என்னெ தூக்கிட்டுப் போறீங்க ? ‘ என்றபடி கையையும் காலையும் உதைக்க, நெருப்புச் சட்டியை தடாலென போட்டுவிட்டு திருநீறு சட்டைக்காரர் ஓடி வர, மூங்கில் தூக்கிகள் தொப்பென்று பாயுடன் பாட்டியை சாலையில் இறக்கி விட்டு, திசைக்கொருவராய் ஓட, பாட்டி மெதுவாய் எழுந்தமர்ந்து, என் முகத்தருகே முழித்து, கழுத்தில் கை வைத்து ‘ நீயெல்லாம் ஒரு டாக்டராடா ? ஒரு டெத் சர்டிபிகேட் கொடுத்து, என்னைக் கொனுட்டயேடா, பாவி ‘ என்றபடி என் கழுத்தை உலுக்கினாள் !
 
திடுக்கிட்டுக் கண் விழித்தேன் – கனவு ! வியர்த்திருந்தது.
இரவு அகாலத்தில் டாக்டர் வீட்டுக் காலிங் பெல் சத்தம் எப்போதுமே சங்கு மாதிரிதான் ஒலிக்கும் ! அரைத் தூக்கத்தில், பாதிக் கதவைத் திறந்தேன் – பக்கத்து வீட்டு முதியவர் நின்று கொண்டிருந்தார் – முகத்தில் கவலையா, எரிச்சலா என்று உறுதியாய்த் தெரியவில்லை.
 
‘ டாக்டர், என்னோட அம்மா, தொண்ணூறு வயசாகிறது ‘ தயங்கினார் ..
 
‘சரி, ஆகட்டும், இப்பொ என்ன ?’ என்றேன் தூக்கம் கலைந்த வெறுப்பில்.
 
‘இல்லே.. மூச்சு பேச்சில்லாம இருக்கா அரை மணி நேரமா… என்னமோ மாதிரி இருக்கு.. நீங்க கொஞ்சம் வந்து பாத்தீங்கன்னா தேவலை’ இழுத்தார்.
முடியாதுன்னு நெனச்சாலும், சொல்லமுடியாத ஒரு தர்ம சங்கடமான ப்ரொஃபஷன் ! ஹவுஸ்சர்ஜன்சி முடித்து, தனியார் நர்சிங்ஹோம் டியூட்டி  டாக்டராகி ஒரு வாரம் கூட ஆகலை – அதுக்குள்ள இது என்ன சோதனை ?
உள்ளுக்குள்ள பயம் – வெளியில் காட்டிக்கொள்ளாமல் ‘என்ன ப்ராப்ளம் பாட்டிக்கு ‘ என்றேன். ( சொன்னா மட்டும் வெளங்கிடறா மாதிரி – ஆயிரம் பேரக் கொன்னாத்தான் அரை டாக்டர்; நீ இன்னும் காலேஅரைக்கால் டாக்டரா கூட ஆகலை என்றது உள்ளுக்குள்ள சாத்தான் !).
 
“ ஒண்ணுமில்லே, நேத்தி வரைக்கும் நல்லாத்தான் இருந்தா – காலைல ரெண்டு தரம் லூஸ் மோஷன் ஆச்சு – மோர் குடிச்சிட்டு ஒன்பது மணிக்கே தூங்கப் போய்ட்டா – பத்து நிமிஷம் முன்னாலெ ஏதோ இருமினாப்போல இருந்தது. போய்ப் பார்த்தா மூச்சு பேச்சில்லே “ என் பதட்டத்தில் பாதி கூட இல்லாமெ பொறுமையாய்ச் சொன்னார்.
 
அவசரமா ஒரு சட்டைய மட்டும் மாட்டிக் கொண்டு, டார்ச், ஸ்டெத் சகிதம் பக்கத்து வீட்டுக்குள் பாய்ந்தேன் – தேவை இல்லாமெ பாதி ராத்திரிலெ வெள்ளைக் கோட் போட்டுகிட்டு ஹவுஸ் விசிட் பண்ற சினிமா டாக்டர் மனத்துக்குள் வந்து போனார் !
 
ஆஸ்பத்திரிக்கு வெளியில் நான் பார்க்கப் போகிற முதல் எமர்ஜென்சி கேஸ் இது – தொண்ணூறு வயசுப் பாட்டிக்கு என்னவாயிருக்கும் – மோருன்னு பினாயில் குடிச்சிருக்குமோ ? பாத்ரூம்ல வழுக்கி விழுந்திருப்பாளோ ? வலிப்பு ? ஸ்ட்ரோக் ? ஹார்ட் அட்டாக் ? ஆஸ்பிரேஷன் ? குழம்பியவாறே நடந்தேன் – பாட்டிக்கு நேரம் சரியில்லைன்னு மட்டும் நிச்சயமாய் நம்பினேன் !
ஹாலில் ரெடாக்ஸைட் போட்ட தரையில் பாட்டியைத் தெற்குப் பார்த்தவாறு கிடத்தியிருந்தார்கள் – சிறிது அபசகுனமாய்ப் பட்டது. இரண்டு வெண்பஞ்சுத் தலைக் கிழவர்களும், ஒரு கூன்விழுந்த குண்டு அம்மணியும், சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தார்கள்.
 
‘ஒண்ணுமே இல்லெ டாக்டர்; எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நினைக்கிறேன். நீங்க பாத்து சொல்லிட்டீங்கன்னா….’ முடிவே செய்து விட்டிருந்தார்கள் – கட்டைவிரலில் ரிப்பன் கட்டுவதுதான் பாக்கி !
 
ஒரு சுமாரான பாயில் பாட்டி கிடந்தாள். மெல்லிய புடவை மெலே போர்த்தியிருந்தது. மூச்சு விடுகிறாளோ ?  - அருகில் சென்று மெதுவாகத் தட்டாம்பூச்சி பிடிப்பவனைப் போல குத்துக்கால் இட்டு உட்கார்ந்தேன். பாட்டி ஸ்நேகமாய்ச் சிரிப்பது போலிருந்தது. சீலிங் பேன் காற்றில் மேல்புடவை வேறு மெதுவாகச் சிணுங்கியது. கையில், கழுத்தில், தேடிய இடத்தில் எல்லாம் பல்ஸ் இல்லை.
 
எங்கே ’இன்னும் உயிர் இருக்கிறது’ என்று விபரீதமாக நான் சொல்லி விடுவேனோ என்ற அச்சமோ என்னவோ தெரியாது – மூன்று ஜோடிக் கண்கள் என்னைக் கவலையுடன் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.
நான் என் பயத்தை மறைக்கக் கையில் கட்டிக்கொள்ளாத வாட்சைத் தேடினேன்.
 
‘ ஆ.. இப்பொது பல்ஸ் கையில் தெரிகிறது . டக்..டக்…டக் ’  விரல்களை மேலும் கீழும் உருட்டி, பாட்டியின் மணிக்கட்டில் வீணை வாசித்தேன். ஒரு வினாடி ஒரு யுகமாய்க் கழிந்தது. வியர்த்தது – நெஞ்சு ‘லப்’ டப்’ ’லப்’ ‘டப்’ என்றது. அமைதி – உற்றுக் கவனி… சே...பயத்தில் என் பல்ஸ்தான் பாட்டியின் பல்ஸாய்த் தெரிந்தது ! ஒரு மாதிரி தெளிந்து, கண்களில் டார்ச் அடித்தேன் –ஒரு பக்கம் கரு விழி நட்சத்திரம் போல் கோணலாய் இருந்தது – கேட்ராக்ட் செய்த கண்ணாம். மறு கண்ணில் கரு விழி அகன்று, அணைந்த லாரி ஹெ.ட் லைட் மாதிரி சலனமற்றிருந்தது
 
ஸ்டெத் வைக்கும் முன்பே ‘லப் டப்’ என் காதில் கேட்டது – வேறென்ன, என் இதயத் துடிப்புதான் ! பாட்டிக்கு இதயம் நின்று சில மணி நேரங்கள் ஆகியிருந்தது – லேசாக விரைத்திருந்தாள், ரைகர் மார்டிஸ் !
எழுந்து, இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு தலையை இரண்டு முறை பக்கவாட்டில் அசைத்தேன் – சினிமா பாணியில்.
 
‘என்ன டாக்டர், போய்ட்டாளா ?’ சோகத்தை விட, எதிர்பார்ப்பும், அவசரமுமே அதிகமாகத் தெரிந்த தொனியில் கேள்வி வந்தது !
 
‘ஆமாம், மஸ்ட் ஹேவ் ஹாட கார்டியாக் அரெஸ்ட்’ என்றேன். எங்கிருந்துதான் இக்கட்டான சமயத்துல இப்படி இங்க்லீஷ் வருமோ ?
மெதுவாகத் திரும்பிப் பார்த்தேன். பாட்டியின் புடவை மேலும் கீழும் அசைந்தது – “ மூச்சு விடுகிறாளோ ? “ பயந்தவாறே மேலே சீலிங்கைப் பார்த்தேன் – ‘ மூச்சுக் காத்தே நின்னுபோச்சு, இன்னும் எதுக்குய்யா மேல பேன் காத்து ?’ நான் கேட்கவில்லை !
 
 “ வயதின் காரணமாய், இதயம், நுரையீரல்கள் வேலை செய்வதை நிறுத்தி விட்டதால் இயற்கையில் மரணம் – நேரம், இடம், பெயர், வயது இத்தியாதி எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தேன் “  முதல் சான்றிதழ், மரணச் சான்றிதழ் !
வீட்டுக்கு வந்து, அரைத்தூக்கத்தில் கண்ட கனவில்தான் பாட்டி என் கழுத்தை நெறிக்க வந்தாள் ! ஜன்னல் வழியே அடுத்த வீட்டு ஹாலில் பாட்டி – தலை மாட்டில் அகல் விளக்கு; அழுகை ஓய்ந்து தூக்கம். பாட்டியும் தூங்குகிறாளோ ? பொல்லாத பாட்டி !
 
மறு நாள் காலை அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது - வேலை முடிந்து வருவதற்குள் இரவாகி விட்டது. நாள் முழுதும் செல்போன் பயமுறுத்தியவாறே இருந்தது. ‘ டாக்டர், உங்களுக்கு போன் ‘ என்று யார் அழைத்தாலும், பாட்டியின் முகம் என்னை மிரட்டியது. ஒவ்வொரு முறையும் பாட்டியே கூப்பிடுவதைப் போல இருந்தது !
 
இரண்டாம் நாள் இடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற பால் சொம்பு பார்த்த பிறகுதான் என் வயிற்றில் பால் வார்த்ததைப் போல் இருந்தது !

Comments

Excellent! டாக்டரின் உணர்வுகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டும் கதை!