Skip to main content

மொட்டை மாடியில் தொட்டிப் பூவோரம்.. (காதல் கவிதை)


வித்யாசாகர்


1
மாடி மேலேறி
ஆண்டெனா திருப்ப வருவாய்
நான் கூரை மேலேறி
கோழி தேடுவேன்
கோழியும் கிடைத்ததில்லை
ஆண்டெனாவும் திரும்பியதில்லை
கூரைக்கும் மாடிக்கும் தெரியும்
நாம் யாரை தேட வந்தோமென்று..
-------------------------------------------------------
2
மொட்டைமாடியில்
பூ பூத்திருக்கும்
நான் எட்டிப் பார்ப்பேன்
மழை வரும்
மழையில் நீ நனைந்து ஓடி
கொடியில் போட்ட துணிகளை எடுப்பாய்
உன்னம்மா மேலேறி வந்து
நீ என்ன செய்கிறாய் என்பாள்
நான் பூ பார்க்க
வந்தேனென்பேன்
அவளுக்கு தெரியும் அது
எந்தப் பூவென்று
அசடு நீ தான்
தெரிந்திருக்கமாட்டாய்; நான்
உன்னைப் பார்க்க வந்ததை..
------------------------------------------------------
3
ஒளியும் ஒலியும் பார்க்க
ஓடிப்போய் அமர்வோம்..
முதல் பாட்டு
வரும் நீ என்னையேப் பார்ப்பாய்
இரண்டாவது பாடல் வரும்
நான் உன்னையேப் பார்ப்பேன்
விளம்பரம் மாற மாற
எல்லோரும் மாறி மாறி அமர்வார்கள்
நீயும் நானும் அதே இடத்தில்
அமர்ந்திருப்போம்
நமக்குள் ஒரு பாடல்
ஓயாது ஒலித்துக் கொண்டேயிருக்கும்..
------------------------------------------------------
4
எல்லோரும் கடற்கரைக்குப்
போகையில் அலைமிதித்து
வருவார்கள்
நான் கரையிலமர்ந்து
உனது பேரெழுதி எழுதி அழிப்பேன்
மீண்டும் மீண்டும்
உன் பேரெழுதுவதில்
அவ்வளவு சந்தோஷம் வரும்..
அலைகள் வந்து வந்து
போவதைப்போல
நீயும் போய் போய் வருவாய்..
எனக்குள்
இருந்துக்கொண்டே இருப்பாய்..
------------------------------------------------------
5
மதிய உணவு
கட்டிப்போனால்
திறக்கையில் உன் முகம் தெரியும்
மேலே வானத்தைப்
பார்த்துவிட்டு திரும்பி
காற்றை தொடுவேன்
காற்றில் உன் வாசம்
மணக்கும்
உணவை
மூடிவைத்து விட்டு
ஓடிவந்து
உன் வகுப்பறை ஓரம் நிற்பேன்
நீ சாப்பிட்ட உணவை
பாதியில் மூடி பையில் வைத்துவிட்டு
கைகளை நீட்டி
காற்றை தொடுவாய்
எனக்கு
பசியெல்லாம் பறந்துபோகும்
மனசெல்லாம் நீயே நீயே நிறைவாய்..
------------------------------------------------------
6
எப்போதும் எஸ்எம்எஸ் வரும்
ஏர்டெல் விளம்பரமென்றெண்ணி
விட்டுவிடுவேன்
இப்போது
ஏர்செல் விளம்பரம் செய்தால்கூட
நீயா இருக்குமோ
என்று திறந்துப் பார்க்கிறேன்

Comments