Skip to main content

அறுபதாம் தோட்டத்து மரண ஊர்வலம்

மொழிபெயர்ப்புக் கவிதை


கரங்களைக் கோர்த்து இரு வரிசையில்
முகத்துக்கு முகம் பார்த்தபடி
ஏழெட்டு வீடுகளையேனும் ஒழுங்காகக்
கட்டிட முடியாத நிலமொன்றில்
நெருங்கியடித்துத் தம்மை நுழைத்துக் கொண்ட
அறுபது வீடுகள்

அவற்றின் மத்தியால் செல்லும்
முச்சக்கர வண்டியொன்றேனும் பயணித்திட முடியாத
குறுகிய ஒழுங்கையின் இருமருங்கிலும்
இரண்டு வரிசைகளில் போடப்பட்டுள்ளன
ப்ளாஸ்டிக் கதிரைகள்

ஒரே விதமாகத் திறந்தே கிடக்கின்றன
எல்லா வீடுகளின் யன்னல்களும் கதவுகளும்

அமர்ந்திருக்கின்றனர் எல்லா வீட்டு முற்றங்களிலும்
வருபவர்கள் எல்லோரும்

அறுபதாம் தோட்டத்தில் வசித்த மூத்த குடியவள்
எவர்க்குப் பசியெனினும் உண்ண உணவு கொடுத்து
எல்லோரது துயரத்துக்கும் ஒன்றுபோலவே செவிமடுத்தவள்
முழு அறுபதாம் தோட்டத்துக்கும்
அம்மா அவள்
பாட்டியவள்

எண்பத்தைந்து வருடங்களாக
துயரத்தை மட்டுமே அனுபவித்திருந்தாலும்
விழிகளிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் வழியவிடாது
எந்த நோய் நொடியும் தீண்டிடாது
ஒரு மலை, ஒரு பெருவிருட்சம் போன்றிருந்த
"ரத்து மார்கரெட் நோனா"
வீட்டுக்குள்ளே வந்துபோகும்
எவர் குறித்தும் அக்கறையற்று
சிறிய வரவேற்பறையின் மத்தியில்
மாமரப் பலகையால் செய்த
பெட்டியில் உறங்குகிறாள்
தன் பாட்டில் சுதந்திரமாக

ஓரிடத்திலிருந்து
மாஜரீன் பூசப்பட்ட பாண்துண்டுகளைக் கொண்டு வருகையில்
மற்றோர் இடத்திலிருந்து கொண்டுவருவர்
தேனீரையும் பிஸ்கட்டையும்

ஒரே வீடு ஒரே குடும்பமென
எல்லா விழிகளிலும் கண்ணீரேந்தி
ஒன்றாக எல்லோருமே விழித்திருப்பார்கள்
இன்று அறுபதாம் தோட்டத்தில்


மூலம் - சஜீவனீ கஸ்தூரி ஆரச்சி (சிங்கள மொழி மூலம்)


தமிழில் - எம். ரிஷான் ஷெரீப், இலங்கை

Comments

Popular posts from this blog