Skip to main content

ஐராவதம் பக்கங்கள்

ஐராவதம் பக்கங்கள்

நண்பனின் தந்தை - சிறுகதைகள், குறுநாவல்கள் - அசோகமித்திரன் - முதற் பதிப்பு-டிசம்பர் 2011 - பக்கம் 144 - விலை ரூ. 100/- நற்றிணை பதிப்பகம், சென்னை 5

தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான (பதிப்பாளர் வரிகள்) அசோகமித்திரனின் சமீபத்திய படைப்புகளை நமக்குத் தருகிறது நண்பனின் தந்தை.  முதலில் பம்பாய் 1944 என்ற குறுநாவல் கல்கியில் தொடர்கதையாக 13 வாரம் வெளிவந்தது.  தொடர்கதை, நாவல் ஆகாது என்ற க.நா.சுவின் ஆட்கொல்லி முன்னுரை வரிகள் உடனடியாக என் நினைவுக்கு வந்தது.  இதில் வேடிக்கை என்னவென்றால் ஆட்கொல்லியே அகில இந்திய வானொலியில் வாரந்தோறும் தொடர்கதையாகப் படிக்கப்பட்டதுதான்.  தொடர்கதைக்கு உரிய லட்சணங்களை பரிபூர்ணமாகக் கொண்டது பம்பாய் 1944.  ஒவ்வொர அத்தியாயம் முடிவிலும் அந்தந்த வாரம் தொடர்ந்து கதையைப் படிக்க தூண்டும்  விதமான வரிகள்.ஆனால் அப்படி வாரப்பத்திரிகையில் வரும் தொடர்கதையை ஆவலுடன் படிக்க வாசகர் கூட்டம் இன்று உள்ளதா என்பது கேள்விக்குரியது.  சென்ற தலைமுறைக்காரர்கள் கல்கியை, அகிலனை, கொத்தமங்கலம் சுப்புவை அப்படி படித்தார்கள்.  இன்றைக்கோ பத்து தமிழ்  தொலைக்காட்சி காலங்களிலும் வாரம் நாற்பது நெடுங் தொடர்கள்.

பம்பாய் 1944ல் மணி, அவன் அண்ணன், மன்னி, அம்மா அடங்கிய சில குடும்பம் மராட்டிய மனிதர்களான விநாயக், அவன் அப்பா, அவன் தங்கை நிர்மலாவுடன் பழக நேருகிறது.  நிர்மலாவை கல்யாணம் செய்துகொள்ள சொல்லி மணியை வற்புறுத்துகிறாள் அவள் அம்மா.  ஆனால் அது நடைபெறவில்லை என்ற கடைசி வரிகளுடன் குறுநாவல் முடிகிறது.  பம்பாய் 1944 பாகம் 2 துவங்க இது சரியான ஆரம்பம்.  ஆனால் அசிரியர் வயதான காரணத்தால் என் கை விரல்கள் பேனாவைப் பிடித்தாலே பின்னிக் கொண்டு விடுகின்றன. எழுதுவது அநேகமாக அசாத்தியமாகிவிட்டது என்று குறிப்பிடுகிறார்.

நாங்கள் முப்பது ரூபாயில் விநாய்க்கின் அப்பாவைக் குழியில் தள்ளி மண்ணை அள்ளிப் போட்டோம் (பக்கம் 57).  இன்றைக்கு நாட்டை ஆளும் பொருளாதார வல்லுநர்கள் மன்மோகன்சிங், ப. சிதம்பரம், மான்டேக் சிங் அலுவாலியா படிக்க வேண்டிய வரிகள் இவை.  

தமிழ் புது வருஷப்பிறப்பைக் கொண்டாடுகிறது மணியின் குடும்பம்.  கடும் ரேஷனில் என்ன பண்டிகை கொண்டாட முடிந்தது.  பஞ்சாங்கத்துக்கு மஞ்சள் குங்குமம் தடவிப் பூஜை செய்தது.  துளி வெல்லம் போட்டு ஒரு பாயாசம் வைத்தது. (பக்கம் 45) ஏழ்மையில் சம்பிரதாயங்களை விட்டுக் கொடுக்காத பிராமணக் குடும்பம்.  இவர்கள் வீட்டுக்கு வந்த நிர்மலா.  செருப்பே போடாமல் வந்திருக்கிறாள்.  ஒருவேளை அவளுக்குச் செருப்பு இல்லையோ? (பக்கம் 73).

அம்மாவிற்கு உதவுவதற்கென்று வெளி மனிதர்கள் யாரும் வரவில்லை.  அவளுடைய அம்மா அண்ணா தம்பிகள்தான் இரு குழந்தைகளை வளர்க்க úவ்ணடியிருந்தது.  ஏன் நம் பெண்கள் ஒரு நொடிப்பொழுதில் நிராதரவாகப் போய் யார்யாரோ தயவிலோ நிற்க வேண்டி வந்து விடுகிறது.  படிப்பு இல்லை என்று சொல்லலாம்.  படித்து விட்டால் மட்டும் எல்லா வசதிகளையும் பாதுகாப்பும் பெற்று விடமுடிகிறது (பக்கம் 63-64).  

அவளுடைய நார்மடியின் கிழிசல்களை தைத்துக்கொள்ளக்கூட ஊசிநூல் கிடையாது (பக்கம் 30).  ஆனால் அப்படி ஒரு விதவையால் வளர்க்கப்பட்ட அண்ணன் சுந்தரம் கடைசி அத்தியாத்தில் டெபுடி மானேஜராகப் பதவி உயர்வு பெறுகிறாள்.  ஒரு வருடம் மேற்பயிற்சிக்காக அமெரிக்கா போகிறான்.

ஹார்மோனியம் என்று இன்னொரு கதை.  கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் பத்தாயிரம் ரூபாய் பரிசு பெற்றது.  இந்தத் தகவல் இந்த நூலில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.  இது சிறுகதைதானா?  ஆங்கில எழுத்தாளர்கள் Charles Lamb, J B Priestly, Ronald Knox, Robert Lynd, G K Chesterton  எழுதும் கட்டுரைகளைப்போல் உள்ளது.  இந்தக் கதையல்லாத கதையில் சைகல், பங்கஜ் மல்லிக், ஜ÷திகாராய், கே.சி.டே வருகிறார்கள்.  ரவீந்திரத் வருகிறார்.  அவருக்கு ஹார்மோனியம் பிடிக்காது. ஜவஹர்லால் வருகிறார்.  அவருக்கும் ஹார்மேனியம் பிடிக்காது.  அவரைப்பற்றி அபாண்டமான குற்றச்சாட்டை முன் வைக்கிறார் ஆசிரியர்.  =எவ்வளவோ விஷயங்களும் தெரியவில்லை.  அவர் இலக்கியவாதி என்று பெயர்.  ஆனால் பக்கம் பக்கமாக எழுதிய அவரால் ஒரு இலக்கிய மேற்கோளைப் பளிச்சென்று கூற முடியாது.  (பக்கம் 128).  அமெரிக்கா கவிஞரின் (Robert Frost) மேற்கோளை தன் மேஜை மீது வைத்திருந்த பண்டித நேருவுக்கு இந்த இழுக்கு தேவையா?  The Woods are lively, dark and deep and I have miles to go before I sleep.  Discovery of India and Glimpses of World History  எழுதிய மேதை அவர்.  காலம் சென்ற பிரதமர் நரசிம்மராவ் தெலுங்கில் மொழி பெயர்த்துள்ளார்.  காலம் சென்ற தமிழ் எழுத்தாளர் ஜெயரதன் தமிழில் தந்துள்ளார்.  

ஆர்.கே நாராயணனுக்கு ஹார்மோனியம் பிடிக்காதாம்.  பாரதிக்கு ஹார்மோனியம் பிடிக்காதாம்.  கதையின் கடைசி வரிகள் கடவுள் ஹார்மோனியத்திலேயே இருக்கிறார். அத்வைதி அசோகமித்திரனுக்கு கல்கி பரிசு கொடுத்தது சரிதான்.

இன்னொரு கதை நண்பனின் கதை.  சீரும் சிறப்பும் நல்லெண்ணமும் உலகுக்கு ஒவ்வாத மனப்போக்கும் கொண்ட அவர் பஸ் ஓட்டினார்.  பெரிய வீட்டைக் கட்டினார்.  ஏராளமானோருக்கு அன்னமிட்டார்.  இப்போது இருண்ட அறையில் எங்கோ மூலையில் கிடக்கிறார். (பக்கம் 132).  பஸ் ஓட்டியவர் எங்கள் பேட்டையிலேயே மிகப்பெரிய பங்களா கட்டியவர்.  ரத்த பேதி வந்து தரையில் ஒர பழைய வேட்டி விரிப்பில் படுத்திருக்கிறார்.  ஒரு மகள்தான் இப்போது பக்கத்தில் இருக்கிறாள். (பக்கம் 37) கூறியது கூறல் என்ற குற்றச்சாட்டுக்கு அமி அளாகிறார்.  இதே கருவை ஐரோப்பிய எழுத்தாளர்கள் 300இ 400 பக்க நாவலாக்கி இருப்பார்கள். 

ஜெயமோகன் அசோகமித்திரன் பற்றி எழுதியுள்ளதை இங்கு நினைவு கூறுகிறேன்.  அசோகமித்திரனின் படைப்புலகம் ஏறத்தாழ முழுமை கொண்டது.  மன நிறைவு தருவது.  நீண்ட காலம் ஒருவர் தன் கலையின் சாத்தியங்களைப் பயன்படுத்தும்போது உருவாகும் பலவிதமான நுட்பமான வண்ண வேறுபாடுகளும் அழகுகளும் கொண்டது.  நவீனத் தமிழ் குறித்து நாம் பெருமிதம் கொள்ளச்செய்யும் படைப்பாளி அசோகமித்திரன்.  பாரதிய ஞானப்பீடப் பரிசுக்கு அவரைச் சிபாரிசு செய்ய வேண்டியது தமிழில் ஈடுபாடுக் கொண்ட அனைவரும் முயற்சி எடுக்க வேண்டியது.

Comments