Skip to main content

சாராசரிக்கு​ம் சராசரி

இந்த அறை
இதற்கு முன்பு எத்தனை பேரைப்
பார்த்திருக்கும்

பேத்தியின்
அந்தரங்கங்களைத் தடவிப்பார்த்த
ஒருவன்

சுருக்குக் கயிற்றின்
முனையில்
காதலை முடித்துக் கொண்ட
ஒருவன்

சாராசரிக்கும் சராசரியில்
உறக்கத்தில்
இறந்த ஒருவன்

மற்றும்
இந்த அறையைப்போல்
வாழ்க்கை இறைஞ்சும்
உங்களுக்குத் தெரிந்த
ஒருவன்.

0

மரமொன்று நகரத் தொடங்குகிறது
இலைகளைச் சலசலத்தபடி

வேர்களின் நீளத்தை
அளந்தபடி

நிழல் குறித்த
பெருமிதங்களுடன்

கனிகளை வேடிக்கைபார்ப்பவன்
முகத்தில் எறிந்தபடி

நகரும் மரங்கள்
மரங்களாய் அறியப்படுவதில்லை
என
மரத்திற்கு தெரிவதில்லை.

0

பிறந்த குழந்தையை
ஏந்தும்
இன்னொரு குழந்தையின்
வாஞ்சையுடன்
இந்தக் கவிதையைச்
சுமந்து திரிகிறேன்.

இறக்கிவிடும்
இடம் நெருங்கும்போது
பாரமாகிறது கைகள்.

0

ஒரு கவிதைக்கு
எப்படிக் கவனித்தாய்
என்றான் நண்பொருவன்
எப்படி
யாரும் இதைக்கவனிப்பதில்லை
என்பதுதான்
எனது ஆச்சர்யம்.

0

பாலைவனத்தைச்
சுமக்கக் கொடுத்தீர்கள்
பிறகு கடலையும்
ஒரு சுடரை
என்னிடம் அளித்தது
உங்களுக்கு நினைவில் இல்லை
மண்ணைக் கிளறிப்போடும்
கோழியின் பாவனையில்
அடுக்கினீர்கள் எதைஎதையோ.
வைப்பதற்கு இடமில்லாத
நேரத்தில் தான் இந்தக் கவிதையை
அறிமுகம் செய்தீர்கள்

என்னைமீறி எல்லாம்
அடைகிறது இதில்.
oOo

Comments

இந்தக் கவிதையை கவனிக்காது மட்டும் இல்லை
ரசிக்காது போவதும் தான் ஆச்சரியம்
தனித் தனி படைப்பாக கொடுத்திருக்கலாமோ?
மிகவும் அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
மதி said…
ஒரு கவிதைக்கு
எப்படிக் கவனித்தாய்
என்றான் நண்பொருவன்
எப்படி
யாரும் இதைக்கவனிப்பதில்லை
என்பதுதான்
எனது ஆச்சர்யம்.
Excellent