Skip to main content

மூலம் - ஜகத் ஜே.எதிரிசிங்க (சிங்கள மொழியில்)





சுய துரோகம்

நேற்று

நீ நான் காதலில் பின்னிப் பிணையாதிருந்தோம்

காதல் வார்த்தைகளைப் பகராதிருந்தோம்

காதல் கவிதைகளை எழுதாமலிருந்தோம்

காதல் கீதங்களை இசைக்காமலிருந்தோம்

எதிர்கால இனிய கனவுகளைக் காணாதிருந்தோம்

நேற்று

நாங்கள் சந்திக்காதிருந்தோம்

இரு கரங்களையும் கோர்த்துக் கொள்ளாமலிருந்தோம்

காதலுடன் அரவணைத்துக் கொள்ளாமலிருந்தோம்

பெருமூச்சொன்றின் உஷ்ணத்தை

அனுபவிக்காதிருந்தோம்

நேற்று

நான் கண்ட அதே நிலவை

நீ காணாதிருந்தாய்

நான் அனுபவித்த தென்றலின் தழுவலை

நீ அனுபவிக்காதிருந்தாய்

நேற்று

நீயென்று ஒருவர் இருக்கவில்லை

நான் மாத்திரமே இருந்திருக்கக் கூடும்

இன்றும் அவ்வாறே

நான் மாத்திரமே

பாதம் பதிக்க இடமற்ற

வெற்று வெளியொன்றில்

புவியொன்றா பிரபஞ்சமொன்றா

பொருளொன்றா

சக்தியொன்றா

எண்ணமொன்றா

உணர்வொன்றா

இவை ஏதுமற்ற

வெற்று வெளியொன்றில்

வெறுமனே தரித்திருக்கிறேன்

நேற்று

சூரியன் உதித்திடவில்லை

நிலவும் நட்சத்திரங்களும் கூட இருக்கவில்லை

அதுவுமன்றி

நேற்றென்றோர் நாள் கூட இருக்கவில்லை

எல்லாமே வெறுமையாய்...



Comments