Skip to main content

“மிஞ்சியவன்”

அந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் சின்னையனுக்குத் தனது வண்டி ஸ்டான்ட்தான் ஞாபகத்திற்கு வருகிறது. தினமும் ஒரு வேளையாவது அந்தப் பக்கமாக வந்து போகவில்லையென்றால் அவனுக்கு மனசு ஆறாது. வர, வண்டியை ஓரமாக நிறுத்த, அந்த இடத்தையே பார்த்துக் கொண்டிருக்க என்று பொழுது கழியும். பல நாட்களில் அங்கிருந்து கிளம்பவே மனசு வந்ததில்லை அவனுக்கு. நெஞ்சில் ஆழப் பதிந்து விட்ட சோகம் அது. நகரத்தின் எல்லாப் பகுதிக்கும் கால் கடுக்கக் கடுக்க ரிக்ஷாவை மிதிக்கிறான். இப்பொழுது இன்ன இடம் என்று குறிப்பிட்டு அவனுக்கு எதுவும் இல்லை. எல்லா இடமும் அவன் இடம்தான். எங்கெங்கு நிறுத்துகிறானோ அதெல்லாம் அவன் இடம்தான். ' யாரோ போவட்டும்” என்று எல்லோரும் விட்டு விடுகிறார்கள் அவனை. ஆனால் ஒன்று. எல்லோரும் அவனை ஒரு பார்வை பார்த்து விடுகிறார்கள். அவனைப் பார்க்கிறார்களா அல்லது அவன் வண்டியைப் பார்க்கிறார்களா? ரெண்டையும்தானோ? எதைப் பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன? கொட்டியா கொடுக்கப் போகிறார்கள், தான் முடிந்துகொண்டு போவதற்கு? அப்படிப் பரந்த மனசோடு இன்றைக்கெல்லாம் யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே? ஏன் இப்படி ஆகி விட்டார்கள் எல்லோரும்?

காலம் எல்லோரையும் அப்படி மாற்றிவிட்டதா? அட, இன்றிருப்பவர்களைச் சொல்லி என்ன பயன்? தனக்குப் பழக்கமான பழைய முகங்களே திருப்பிக் கொண்டல்லவா போகிறது? என் வண்டிக்கு உயிர் இருக்குமானால் அது வாய்விட்டு அழுமே? என் மேல திங்கு திங்குன்னு உட்கார்ந்து எத்தனைவாட்டி போயிருப்பே? சொகுசாச் சாய்ஞ்சிக்கிட்டுப் போனதையெல்லாம் மறந்திட்டியா? உனக்குச் சூடு படக்கூடாதுன்னு என்னை நா தளர்த்திக்கிட்டு, நெளிஞ்சிக்கிட்டு,

எத்தனைவாட்டி உனக்குச் சொகமும், சொகுசும் கொடுத்திருப்பேன்? இன்னைக்கு நான் இத்தனை நசிஞ்சுபோய்க் கிடக்குறேனே அது கொஞ்சமாவது உன் கண்ணுல படுதா? அத்தனை ஒதுக்கமாவா போயிட்டேன்? ஏதேர் தீண்டத்தகாதவன் மாதிரிப் போறீகளே எல்லாம்? திடீரென்று வண்டியிலிருந்து இறங்கி, சீட்டை ஓங்கி ஓங்கித் தட்டுகிறான் சின்னையன்.படலமாய் அப்பிக்கொண்டு தூசி பறக்கிறது. க்க்கூங்...க்க்கூங்...என்று மூக்கால் ;விடுவித்துக்கொண்டு துண்டால் வாயையும், மூக்கையும் பொத்திக்கொள்கிறான். ஓங்கி ஒரு உதை விட்டு, நாலு உருட்டு உருட்டி விடலாம் போல் ஒரு கோபம். அந்த உரிமையும் அவனுக்குத்தானே உண்டு! நினைத்ததையெல்லாம் செய்துவிட முடிகிறதா என்ன? என்னதான் உதவாக்கரையாய்ப் போனாலும், இன்றைக்கும் பொழுது கூடி ஒரு ஐம்பது ரூபாயாவது சம்பாதித்துக் கொடுத்து விடுகிறதே? உதையைக் கொடுத்து உருட்டிவிட்டு, உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா என்று கையை விரித்து நிற்கவா?

பிறகு எந்த வேலைக்கென்று செல்வது? என்ன வேலை தெரியும் தனக்கு? முதுகை வளைத்து மூட்டை தூக்க முடியுமா தன்னால்? வண்டியிழுக்க முடியுமா? Nஉறாட்டலில் போய்த் தண்ணீர் எடுத்து விட முடியுமா? விறகு தூக்கி அடுக்க முடியுமா? எச்சில் இலை அள்ளிக் கொட்ட முடியுமா? கண்டா முண்டா வேலை என்று எதுவும் பழகவில்லையே? பிறந்ததிலிருந்து தனக்குத் தெரிந்தது இந்த ரிக்ஷா ஓட்டும் வேலை ஒன்றுதானே? அப்பனுக்குப் பிறகு தப்பாமல் பிழைத்தது இதுதானே?

ஒடம்ப வேணுங்கிற அளவுக்குக் கெடுத்துக்கிட்டாச்சு! எம்புட்டோ சொன்னா செல்லாயி...நா கேட்டனா? எதுதான் புத்தில ஏறிச்சு? அன்னைக்கெல்லாம் வந்த வருவாய்க்கு எத்தனை திமிராத் திரிஞ்சேன்?

“யே...சும்மாக் கெடடி நசு நசுன்னுக்கிட்டு...ஐம்பதாயிரம், அறுபதாயிரம்னு ஆட்டோ லோனை வாங்கிப்புட்டா, எவன் அடைக்கிறது? அதுக்கு வட்டி என்னவாகும்னு தெரியுமா உனக்கு? காலம் ப+ராவும் கடனுக்கு அழுதுக்கிட்டேயிருங்கிறியா? வேறே ஆளப் பாரு...வண்டிய எடுத்தமா, நாம பாட்டுக்கு ஓட்டினமா, காசப் பார்த்தமான்னு இருக்கணும்...அதிலெல்லாம் போய் தலயக் கொடுத்துட்டு மாட்டிட்டு முழிக்கிறதுக்கு நா ஆளுல்ல பார்த்துக்க...”

“நா சொல்றதக் கேளுய்யா...ஒன் நன்மைக்குத்தான் எல்லாம்....இப்பவே ஒனக்கு முப்பத்தியேழு ஆகிப் போச்சு...நாப்பதத் தாண்டிட்டன்னு வச்சிக்க...வண்டி மிதிக்க முடியாதய்யா...உன் ஒடம்பப்பத்தி எனக்குத்தான் தெரியும்...உனக்குத் தெரியாதாக்கும்...ஆட்டோ ஓட்டக் கத்துக்க...ஒரு லைசன்சை வாங்கிக்க...அது ஒதவும்...” “போடீ...பொட்டச்சி நீ சொல்றதயெல்லாம் கேட்கணும்னு என் தலைல எழுதி வச்சிருக்கா என்ன? இப்போ எனக்கிருக்கிற வாடிக்கையே இன்னும் பத்து வருஷத்துக்குத் தாங்கும்டீ புரியாதவளே!.ஊரு ஒலகமென்ன ரொம்பச் சின்னதுன்னு நினைச்சியா? பரந்து கெடக்குடி...பரந்து கெடக்கு...இந்த ஏரியா இல்லன்னா இன்னொண்ணு...அதுவும் இல்லன்னா வேறொண்ணுன்னு போய்க்கிட்டேயிருப்பேனாக்கும்...பொழைக்க எடமாயில்லேன்னு நினைச்சே? “ அன்றைக்கெல்லாம் எத்தனை மெத்தனமாய்க் கிடந்தான் சின்னையன். காலையில் ஆறு மணிக்கு வண்டியை எடுத்தான் என்றால் மின்நகரில் மூன்று நான்கு தெருக்கள் அவனுடையதுதான்.

அந்தப் பிள்ளைகளையெல்லாம் பள்ளியில் கொண்டு விட்டுவிட்டு சேக்கியாதோப்புக்கு வருவான்...அங்கு ரொட்டிக்கடை வாசலில் காத்துக் கொண்டிருக்கும் சின்னஞ்சிறுசுகளை ஏற்றிக்கொண்டு பாலத்துக்கு அந்தாண்டை இருக்கும் கிறிஸ்டியன் பள்ளியில் இறக்கிவிடுவான். அப்படியே சந்தைக்குச் செல்லும் வழக்கமான ஒரு சவாரியையும் கவனித்துவிட்டு, அங்கேயே பாண்டியம்மாள் ஆப்பக்கடையில் நாலு ஆப்பத்தை வாங்கி முழுங்கிவிட்டு ஸ்டான்டுக்கு வந்தானானால் மணி பத்து பத்தரை ஆகும். வண்டியில் படுத்தமேனிக்கு அப்படியே ஒரு தூக்கம். பிறகுதான் மாலை நாலு மணிவரை கிடைக்கும் சவாரிகள். அன்றைக்கெல்லாம் மாதாந்திரச் சவாரிகள் என்று இருந்தவையே கணிசமாய்த்தான் கிடந்தன.

வெளிச் சவாரிகளை எத்தனையோ முறை மற்றவர்களுக்குத் தள்ளிவிட்டிருக்கிறான் சின்னையன். “சுகவாசிய்யா நீ...எங்கள மாதிரியா நாய் பட்ட பாடு ஒனக்கு?” “டேய்...பார்த்துப் பேசுங்கடா...இந்த ஏரியா ஒங்களுக்கு இல்லன்னா இதுவும் இருக்காதுடியோவ்...ஒங்களுக்கு முன்னாடி எத்தன வருஷமாக் கெடக்குறேன் தெரியுமா? அப்டி எடம் பிடிச்சதுனாலதான் இன்னைக்கு நீங்கல்லாம் இங்க குப்ப கொட்ட முடியுதாக்கும்!

- “இந்தா எதிர்த்தாப்ல தெரியுதே வீடுக...அது ப+ராவும் வெறும் காடாக் கெடந்திச்சாக்கும்...நரி ஊளையிடும் ஒரு காலத்துல...பெறவு பன்னி மேய்ஞ்ச எடமாப் போச்சு...கருவேலங்காடா மாறி கொல கொள்ளைன்னு நடக்குற எடம்...குத்திக் கொன்னுப்புட்டு பாடியத் தூக்கி மறைவா எறிஞ்சிட்டுப் போயிடுவானுக...என்ன எடம்னு கணக்கிருக்கு இப்ப...சுடுகாட்டுக்குப் பக்கத்துலயே வாங்கி வீடுகட்டிருக்காக...ராத்திரி ரெண்டாம் ஆட்டம் முடிஞ்சு சனம் ப+ராவும் அதத்தான் கடந்து போகுது...ஒரு காலத்துல சாமக் கோடாங்கி அங்க ப+ச போட்டுட்டு வருவான்னு தெருவுல பகல்லயே அவனப் பார்க்கப் பயப்படுவாங்க...இப்ப அப்படியா? எல்லாம் மாறிப்போச்சு...அப்பல்லாம் ராத்திரி பகல்னு வித்தியாசமில்லாம பொணம் எறிஞ்சிக்கிட்டேயிருக்குமாக்கும்...தெனம் ரெண்டு பாடி எப்டியும் வந்துடும்...நா ஒத்த ஆளா வண்டிய நிப்பாட்டிக்கிட்டு எவனாவது வர மாட்டானான்னு அரக்கப் பரக்கக் கெடப்பேன்...ஆளுக்குப் பதிலா பொணந்தான் வரும்...தண்ணியப் போட்டுட்டு சலம்பிட்டு வருவானுங்க...எவனாவது நெல தடுமாறி விழுந்தா அவனக் கொண்டு வீட்டுல விடச் சொல்வானுக...அதுதான் சவாரி அப்பல்லாம்...அவிங்ஞகிட்டப் பேரம் பேச முடியுமா? வண்டிய அடிச்சி நொறுக்கிட்டுப் போயிட்டானுகன்னா? ஒன்ன எவன்டா இங்க நிக்கச் சொன்னது மயிருன்னு ஒரு தடவ சண்ட வந்திச்சு பாத்துக்க...அன்னைக்குத் தப்பிச்சதுதான்...ரெண்டாவது கொலயப் பண்ண வைக்காதடான்னு சலம்புறானுக...? என்னா பண்ணுவ? கொடுத்தத வாங்கிட்டு கொண்டு விட்டமா, பொழச்சமான்னு கெடக்குறதுதான்...அப்டியெல்லாம் கஷ்டப்பட்டுப் பிடிவாதமாப் பிடிச்சதுதான் இந்த எடம்... இங்கருந்து மூணு கிலோ மீட்டர் கடந்து ஒரு பொட்டல் கெடக்கு...அங்ஙனதான் ஒரு பஸ்ஸ_ எப்பவாவது வந்து திரும்பும். பக்கத்துல ஏகப்பட்ட ப்ளாட்டுக... அங்கனக்குள்ள பஸ்-ஸ்டான்டு வரப்போவுதுன்னு சொல்லிச் சொல்லியே அந்த எடத்தப் ப+ராவும் வித்துப் புட்டானுக...ஒரு டீக்கடை கூடக் கெடயாது அங்க...பதிலா ஒரு தியேட்டர்தான் வந்திச்சு...அதுவும் கொஞ்சநாளக்கு ஓடிச்சு...இப்போ அதுவும் கோடவுனாக் கெடக்கு...ஏதோ டயர் கம்பெனி...அன்னைக்கு இந்த எடத்தவிட்டு நா ஓடியிருந்தன்னா இன்னைக்கு ஒங்களுக்கெல்லாம இத்தன சுளுவா ஒரு பிடி கெடைக்குமா? -சின்னையனின் பேச்சில் வாயடைத்துத்தான் போனார்கள் எல்லோரும். அன்றைக்கு அங்கு நின்ற ஏழெட்டு வண்டிகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்துக்கொண்டவனே அவன்தான். தனக்குச் சவாரி போய்விடும் என்று நினைத்திருந்தால் இது சாத்தியமா? அவனுக்குத்தான் நிரந்தரச் சவாரி என்று பிடிமானம் கிடைத்திருந்ததே? வீடுகள் பெருகப் பெருகத்தானே தன்னால் மட்டும் இனி முடியாது என்கிற எண்ணமே வந்தது. அவர்களெல்லாம் கூட இன்று தன்னோடு இல்லை. எங்கே போனார்கள் என்ன ஆனார்கள்? என்று கூடக் கண்டுகொள்ளவில்லை இவன். ஓரிருவர் மட்டும் டவுனில் ஆட்டோ ஓட்டுவதை அறிவான் இவன். அவர்கள்கூட வெறும் ஆட்டோவைத்தான் ஓட்டிச் செல்கிறார்கள். சவாரியோடு பார்ப்பது அப+ர்வம்தான்.

“குறைஞ்சது முப்பது நாப்பது ஆட்டோவாவது பஸ்ஸ்டான்டுல சும்மா நிக்குதுண்ணே...எந்தச் சவாரியும் இல்லாம வெட்டிக்கு....விடிகாலம்புற ரெண்டுலேர்ந்து அஞ்சு வரைக்கும் சவாரிபுடிச்சாத்தான் உண்டு. தெனசரி அப்டித் தூக்கம் முழிக்க முடியுமா? அப்டிச் சவாரி புடிச்சி எங்கயாவது போய் முட்டுறதுக்கா? பெறவெல்லாம் பகல்ல அவிங்ஞ ராஜ்யந்தான்...இந்தப் பக்கம் நீதிமன்றத்துலேர்ந்து iஉறவேஸ்ல நெட்டுக்க எவனும் எந்தச் சவாரியும் பிடிக்க முடியாது...அந்தப் பக்கம் வண்டியே சும்மாவாச்சுக்கும்கூடக் கொண்டு போக முடியாதுன்னா பார்த்துக்கயேன்...வண்டி ஆக்ஸிடென்ட் அது இதுன்னா எதுவும் கேட்டுக்க முடியாது...ஒடனே கூடிடுவானுங்க...கேசப் போடட்டும் பார்த்துக்குவம்னு மொறப்பாப் பேசுவானுங்க...இல்லன்னா அடிபட்டவன் கொடுத்தத வாங்கிட்டுக் கம்னு போகணும்...இதான் நெலம இன்னைக்கு...” நிற்க நேரமில்லாமல் போகிற போக்கில் நோ பார்க்கிங் ஏரியாவில் வண்டியை ஆஃப் செய்யாமல் ராமலிங்கண்ணன் அன்றொரு நாள் பேசிவிட்டுப் போனார். எதிலும் உள்ளே நுழைந்து பார்த்தால்தான் தெரியும் கஷ்ட நஷ்டங்கள்! இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல் புலம்புகிறாள் செல்லாயி. வாடகைக்கு எடுத்து கொடுக்க முடியாமல் திணறும் ஆசாமிகளையும் பார்க்கத்தான் செய்கிறான் அவன். எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து யோசனையிலேயே ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொள்வதும் தள்ளித் தள்ளிப் போயாயிற்று. இனிமேல் தன்னால் கண்டிப்பாக முடியாது. ஆட்டம் கண்டு போச்சு ஒடம்பு. அன்றொரு நாள் சிக்னலில் போதையில் நிலை தடுமாறி வண்டியிலிருந்து எகிறி விழுந்த போது உயிர் தப்பித்தது தம்பிரான் புண்ணியம். பின்னால் வந்த பஸ் எப்படி சடனாய் நின்றது. ஒரு கணம் உயிர் போயல்லவா வந்தது? அன்று இறந்திருந்தாலும் மூர்ச்சையில் அப்படியே உயிர் பிரிந்திருக்கும். எல்லாம் செல்லாயி தாலி பாக்கியம். ஆனால் அவள் பாடு பெரும்பாடாய்த்தானே போய் விட்டது இன்று? “நா சொல்றதையும் நீ கேட்கல...நீயாவும் எதுவும் செய்யல...வறட்டுப் பிடிவாதத்துல காலத்தக் கழிச்சிட்ட...அப்புறம் இந்த ரெண்டு புள்ளைகள வச்சிக்கிட்டு நா எத்தன நாளைக்குய்யா லோல் படுறது? நா என் ஆத்தா வீட்டுக்குப் போறேன்...தெனம் அவளோட கூலி வேலைக்குப் போனா ஏதாச்சும் கெடைக்காதா? ஏதோ ஊருணி தோண்ட,வாய்க்கா கட்டன்னு தெனம் நூறு ரூபா கொடுக்குறாகளாமுல்லய்யா...அதுவேணா கெடக்குதான்னு பார்ப்பம்...ஆனா ஒண்ணு நா போயிட்டனேன்னு நீ ஜாலியா இருந்துப்புடலாமுன்னு மட்டும் நெனச்சிப்புடாத...தெனம் ஏதாச்சும் துட்டு வந்தாகணும் பார்த்துக்க...அப்புறம் நா மனுஷியா இருக்க மாட்டேன் ஆம்மா...உன்னக் கட்டின பாவத்துக்கு இன்னும் என்னென்ன சகிச்சிக்கிட்டுப் போகணுமோ?” - சபதம் போட்ட மாதிரில்ல போயிட்டா?

ஆனா ஒண்ணு என் செல்லாயி செல்லாயிதான்...உன்னோட வாழ மாட்டேன்னு மட்டும் இன்னைக்கு வரைக்கும் அவ வாய்லேர்ந்து வரல்ல...அதுக்காகவாவது அவளையும் எம்புள்ளைகளையும் நா காப்பாத்தியாகணும்...இல்லன்ன நா மனுஷனேயில்ல...” காலையிருந்து ஒரு சவாரிகூட வந்து சேராத சின்னையா ரொம்பவும் மன வேதனையில் உழன்று போனான். அன்று அந்தத் தாங்க முடியாத வேதனைதான் தன்னை இந்தப் பழைய இடத்திற்கு சற்று சீக்கிரமே கொண்டு வந்து சேர்த்துவிட்டதா என்று தோன்றியது அவனுக்கு. தலைக்கு மிஞ்சிப் போச்சு...இனி என்னத்தச் செய்றது? முட்டிக்கிட்டுச் சாகட்டும் என்பதுபோல் போக்குவரத்தைச் சரி செய்து சரி செய்து ஓய்ந்து போயிருந்த அந்தக் கான்ஸ்டபிள் ஓரமாய் நின்று அனுபவித்துப் புகையை விட்டுக் கொண்டிருந்தார். பொது இடத்தில் புகை பிடிக்கக்கூடாது என்பதை அறிந்தவன்தான் என்பதைப்போல் யாரும் பார்க்கும் முன் ஊதித் தீர்த்துவிடுவோம் என்பதான அவசரம்...விரல் நுனிக்கு வரும்வரை இழுத்து விட்டால்தான் கொடுத்த காசுக்குப் பலிதம்...அதற்குள் உயரதிகாரிகள் யாரும் வந்து விடக்கூடாதே என்கிற பதை பதைப்பு .... அந்த நேரம் கிடைத்த இடைவெளியோ என்னவோ, சின்னையனையும் அன்று ஏனோ ஒன்றும் சொல்லவில்லை அவர். அவனையே அவர் கவனித்த மாதிரித் தெரியவில்லை.

“உற_ம்...உற_ம்...அநியாயம்...அநியாயம்...இப்படி வசதியுள்ளவங்களெல்லாம் லட்ச லட்சமாய்க், கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்து இப்படி இடத்தையும் மடத்தையும் பிடித்துக்கொண்டால் தன்னை மாதிரி ஓட்டாண்டிகள் என்ன செய்வது? எங்கு போவது? செத்துப் போ என்கிறார்களா? ரோட்டை அடைத்துக் கொண்டு மொக்கை மொக்கையாய் கார்களை வா ங்கிக் கொண்டு...ஒரு முட்டு...அம்புடுதே...ஆள் சட்னி...என்கிற கதையாய் அப்படியானால் நடப்பவர்களுக்கு என்னதான் பாதுகாப்பு? ஏன்ய்யா ரோட்டுக்கு வர்றீங்க? சாகறதுக்கா? சாலையில் நடப்பவர்கள் ஏற்கனவே கணிசமாய்ய் குறைந்து போய்க் கிடக்க, ஒதுங்கி, ஒதுங்கி, கைகளை இடுக்கிக் கொண்டு, ஒருக்களித்துக் கொண்டு,

5

பக்கவாட்டிலே இடத்தை விலக்கிக் கொண்டு நுழைந்து நுழைந்து, பயந்து பயந்து போய்க் கொண்டிருக்கிறார்களே? எதுக்கு வம்பு? என்று இனி வீட்டில் கிடக்க வேண்டியதுதானா? ஒழுங்காய் போயிரு...இல்லன்னா இடிச்சுத் தள்ளிப்புடுவேன்...ஆம்ம்ம்மா...என்று உயிருக்கு விலையற்றுப்போய் வாகனங்கள் கண்ணு மண்ணு தெரியாமல் பறக்கின்றன. அம்மாடி...இம்புட்டுக் கூட்டத்துல, சன நெருக்கடில ஆட்டோவ ஓட்டுறதாவது? தப்பிச்சண்டா சாமி...எனக்கிருக்கிற நடுக்கத்துக்கு என்னைக்கோ போய்ச் சேர்ந்திருப்பன் போலிருக்கே? போறதப்பாரு...முன் சக்கரம் நுழைஞ்சாப் போதும்னு...அப்டியெல்லாம் நாமளும் பழகியிருக்க முடியுமா? இந்த நெருக்கடிலதான என்னோட ரிக்ஷாவ ஓட்டிட்டு வர்றேன்...தெனம் ஒரு ரவுண்டாவது வந்துடறேன்ல...பெறவு நா ஏன் பயன்படணும்? மனசு பயப்படுதே...உடம்பு நடுங்குதே...அது சரி, இப்ப நெனைச்சு என்ன பண்ண? எல்லாமும் முன்னமயே செய்திருக்கணும்...விட்டாச்சு....கண்கெட்டபெறவு சூரிய நமஸ்காரம்ங்கிறது எனக்குத்தான் பொருந்தும் போல... தனது வண்டி ஸ்டான்ட் இருந்த இடத்தில் எந்த ஒரு துளி அடையாளம் கூட இன்று கண்டுபிடிக்க முடியாத வகையில் வரிசையாய்த் தலையெடுத்திருந்த நகைக் கடைகளும் ஜொலிக்கும் அலங்காரங்களும் அந்தப் பகுதிக்கே கண்ணை கூசச்செய்யும் பளீர் வெளிச்சத்தையும், ஒரு பணக்கார டாம்பீ மிடுக்கையும், சோபையையும், கொடுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்து பிரமித்துப்போய் வாயடைத்து நிற்கிறான் சின்னையன். என்னென்னவோ நினைப்பெல்லாம் இன்று ஏனோ கச்சை கட்டிக்கொண்டு வரிசையாய் நின்று தொந்தரவு செய்கின்றன! “எங்கூட இருந்தவனெல்லாம் எவனுமே இல்லை இன்னைக்கு. நா ஒருத்தன்தான் கிறுக்கன் மாதிரி அலைஞ்சிக்கிட்டுக் கெடக்கேன்...ஏதாச்சும் சவாரி கெடைச்சிருந்திச்சா நாம்பாட்டுக்குப் போயிட்டிருப்பேன்...இந்த வேண்டாத நெனப்பெல்லாம் வராதுல்ல? கெடக்குறது கெடக்கட்டும் கெழவியக் கொண்டு மனைல வைங்கிற கதையால்ல இருக்கு இன்னைக்குப் பாடு...ஆம்மா இன்னைக்கு என்னா கௌம? நாங்கெடக்குற கெடப்புல எதுதே ஞாபகம் இருக்கு? ஐயய்யோ...மாமி சவாரில்ல இன்னைக்கு? அடப் பாவமே....சாயங்காலம் சீக்கிரமுல்ல வரச் சொல்லிச்சு...கோவிலுக்குல்;ல கூட்டிட்டுப் போகணும் அவுகள? நாம்பாட்டுக்குக் கெடக்கேன்...? மாமி, மன்னிச்சிக்கிடுங்க மாமி...இதோ வந்திட்டேயிருக்கேன்...பறந்து வந்திடறேன்....அஞ்சு நிமிஷத்துல....” “வந்திட்டயா...சின்னையா...ஏண்டாப்பா இன்னைக்கு இத்தனை தாமசம்? நாந்தான் நேத்தைக்கே சொன்னனேல்லியோ? நாளைக்குப் பிரதோஷம்னு...சித்த சீக்கிரம் வரமாட்டியோ? கூட்டம் வந்திடுத்துன்னா நன்னா தரிசனம் கிடைக்காதுடாப்பா...அதுக்கு நீதான் உதவணும் நேக்கு...சரி...சரி...வண்டியை எடு....விடு சீக்கிரம்...” “நீங்க ஒண்ணுத்துக்கும் கவலைப்படாதீங்க மாமி...நானாச்சு கொண்டு சேர்க்கிறதுக்கு? நேரா பிராகார வாசலுக்கே உங்களக் கொண்டு எறக்கிடுறேன் போதுமா? அங்க நிக்கிற போலீசு நமக்கு வேண்டியவுகதான்...உங்களப் பார்த்தாலே அவருக்கு வாயடைச்சுப் போகுமாக்கும்...விழுந்து கும்பிடாம இருந்தாச் சரி...நானாச்சு பேசாம வாங்க...” “நீ இருக்கிறவரைக்கும் எனக்கு உன்னோட ரிக்ஷாதாண்டாப்பா...தப்பித் தவறிக் கூட ஆட்டோலயோ, பஸ்லயோ போயிடமாட்டேன்...எத்தன வருஷமா உன் வண்டில வந்திண்டிருக்கேன்? சொச்ச காலத்தையும் இப்டியே ஓட்டிடறேன்...உலகம் எப்டியோ மாறிட்டுப் போறது? யாருக்கு வேணும் இந்த டாம்பீகமெல்லாம்...? உன் வாகனம்தான் சுகம் எனக்கு...!” .........6.................. - 6 - பொன்னகரம் பிச்சு மாமி வாய்விட்டுப் புகழும் ஆத்மார்த்தமான வார்த்தைகளின் சுகானுபவத்தை காது குளிரக் கேட்டு அனுபவித்துக் கொண்டே, தாமதமாகி விட்டதே என்கிற குற்ற உணர்ச்சியின்பாற்பட்டு கிடைக்கிற புண்ணியத்தில் தனக்குக் கொஞ்சமேனும் மாமியின் மூலம் வந்து சேரட்டுமே என்ற ஆதங்கத்தில் பெடலை அழுத்தி அழுத்தி மிதித்துப் பாய்ந்து கொண்டிருக்கிறான் சின்னையன். அவனுக்குச் சற்று முன்னே இன்னும் எஞ்சிப் போன அடையாளங்களின் சாட்சியாய் “Nஉற...Nஉற...” என்கிற ராக லயத்தோடு, “டொக்கடிக்கு...டொக்கடிக்கு” என்கிற சீரான காலடிக் குளம்பு ஒலியோடு, ஒரேயொரு குதிரை வண்டியும் சிட்டாய்ப் பறந்து கொண்டிருக்கிறது

Comments