Skip to main content

இடைவெளி



அப்பா....!

இரவுதூக்கத்தில்

என்

இரண்டு கால்களையும்

இடுப்பில்

சுமந்திருக்கிறீர்கள்

நீங்கள்

கூர் செய்த

பென்சில்கள்

இன்னும்

என்நினைவில்

எழுதிக்கொண்டு

இருக்கின்றன

என் பரீட்ஷை

நேரங்களில்

நீங்களல்லவா

என் விடிகாலை

அலாரம்

உங்கள்

உள்ளங்கை சூட்டிலும்

கைவிரல் ஜவ்வுகளிலும்

என் இளவயது

அச்சங்கள்

தொலைந்து

போயிருக்கின்றன

நான் சைக்கிள்

சவாரி

பழக

நீங்கள்

வேலைக்கு

விடுமுறை சாவாரி

பிரதி மாதம்

முதல் தேதி

நீங்கள்

வாங்கி வரும்

ஜாங்கிரி

நெஞ்சில்

இன்னமும்

ஜீராவாய்

ஒழுகிக் கொண்டு

இருக்கிறது

எங்கு பிசகினோம் ?

யார் கண் திருஷ்டி ?

இமைக்கும் கண்ணுக்கும்

இடையில்

கள்ளி வேலி

எப்படி ?

என் இடுப்பில்

வேட்டி ஏறியதும்

உங்கள் பாசம்

ஏன் அம்மணமாயிற்று ?

நான் கட்டிய

காதல் கோட்டை

நம் உறவிற்கு

பிரமிடாய் போனதேன்?

ஒரே வீட்டில்

இரண்டு

முகாம்களிட்டு

வாழ்கிறோம்

நம் வீட்டில்

வசதிகள்

வளர்பிறையாய்

சூரியனாய் ஒளிர்ந்த

நம் உறவோ...

கிரகணமாய் தேய்ந்துகொண்டு

நீங்கள்

பேசத் தயாராயில்லை

எனக்கோ

பேசத் திராணியில்லை

வருந்த மட்டும்

செய்வதால்

விரிந்துபோன

உறவு

உதடுகளாய் ஒட்டுமா என்ன ?

Comments

Anonymous said…
தொட்டுத் தூக்கித் தோளிலிட்டு வளர்த்த தந்தையிடமிருந்து எந்தப் புள்ளியில் விலகினோம்?

நல்ல கவிதை. ஒவ்வொரு வார்த்தையாக விருப்பது அயர்ச்சியைத் தருகிறது.

Popular posts from this blog