Skip to main content

மொழிப்பெயர்ப்புக் கவிதைகள்



நவீன விருட்சம் இதழில் பல மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் பிரசுரமாகி உள்ளன. அவற்றைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வரும் எண்ணம் உள்ளது. சில கவிதைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.


நார்மன் மேக்கே


கவிஞன்

சம்பவங்கள்

அவனை

நெருக்கடியான நிலையில்

தள்ளித்

துன்புறுத்தின.

வறுமை, சமூகம், நோய் -

எல்லாப் பக்கங்களிலிருந்தும்

அவனைத் தாக்கின.

அவற்றால்

அவனை மெளனமாக்க முடியவில்லை.

கல்லெறிபட்ட காக்கை

முன்பு ஒரு போதும் நினைத்தேயிராத

வகையில் எல்லாம்

தப்பிப் பிழைக்க வழிகாண்பது போல

முன்னைவிட

மேலும் பல கவிதைகள்

அவன் எழுதினான்

எல்லாம் வெவ்வேறாக

இப்போது

சிரமமில்லாது

சமநிலையில் பறப்பதைத்

தொடருமுன்

மக்களின் தலைகளுக்கு மேலே

அவர்கள் வீசியெறியும் கற்கள்

தன்மீது படாத உயரத்தில்

சில சமயங்களில்

திடீர் என

அவன்

தடுமாறுகிறான்.

தடைப்பட்டு நிற்கிறான்.

பக்கவாட்டில் சுழல்கிறான்

இதில் என்ன ஆச்சரியம்!....


மூலம் : ஆங்கிலம்
தமிழில் : கன்னி


(நார்மன் மேக்கே ஒரு பிரபல ஸ்காட்லாந்து கவிஞர். தனது 75வது வயதில் 26.02.1986 ல் காலமான இவர் 13 கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். இத் தொகுதிகளிலிருந்து பல கவிதைகளும் இதுவரை வெளியிடாதிருந்த நூறு கவிதைகளையும் கொண்ட ஒரு கவிதைத் தொகுதியை 1985ல் வெளியிட்டார். இதற்கு இங்கிலாந்து அரசின் தஙகப் பதக்கம் அளிக்கப்பட்டது. ராபர்ட்கிரேவ்ஸ், டபூள்யூ.எச். ஆடன், ஸீக்ஃபிரட ஸஸரன், ஸ்டிஃபன் ஸ்பென்டர் முதலியவர்கள் இப் பரிசை முன்பு பெற்றுள்ளார்கள்.)

Comments