Skip to main content

2 கவிதைகள்




தாய்ப் பாசம்

புத்திர வாஞ்சை
அமிதமாகிவிட்டால்
கூனியின் சொல்தானா
தாரகை மந்திரம்
மூத்தவன்
அவதாரமாயினும்
வெறும்
சக்களத்தி மகன்
கொண்ட கணவன்
பார் புகழும்
நல்லரசனின்
மரணம் கூட
திரணமாய்
தோன்றிடுமோ

சீதாயணம்

மாயமான்களின்
கவர்ச்சி லீலைகளின்
பின்னால் செல்லும்
லௌகிக நெஞ்சங்கள்
கொண்டவன்
அவதாரபுருஷனாகலாம்
நாலும் தெரிந்த புருஷோத்தமனாகலாம்
இருந்தும்
'மான் அன்று அது மாயமே'
என சோதரர்கள் வாக்குக்கு
'இவ்வாறு இருத்தல் இயலாதோ'
என தன் சித்தத்தை
குளிர்விக்க
மாய மான்களின் வேட்டைக்கு
விரைந்து செல்ல
பதியைத் தூண்டிடும்
பத்தினிக் கோலங்கள்தான்
இன்றும்
மாய மான்களின்
கபட ஓலங்களின்
சூழ்ச்சிக்குறி அறியாது
வீண்பழிக்கு ஆளாக்கி
நலம்நாடிகளை விரட்டியடித்து
இலக்குவக் கோடுகளையும்
தாண்டி வந்து
யுத்தகாண்டத்திற்கு
வழிவகுக்கும்
கோமளாங்கிகள்

Comments