Skip to main content

ரொட்டியும் மீன்களும்



கரையிலிருந்து வெகுதூரம்
கடலுக்குள் சென்றேன்
படகிலிருந்து குதித்து
நீருக்குள் நுழைந்தேன்
கீழே, கீழே இன்னும் கீழே
போய்க்கொண்டே இருந்தேன்
முடிவில் காலில் தட்டுப்பட்டது
தரை என்றுதான் சொல்லவேண்டும்
நிறைய மீன்கள்.
வேறு என்னவெல்லாமோ ஜீவராசிகள்
அவர்கள் என்னை
பார்க்கவில்லை. அல்லது
பார்த்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை.
பொட்டலத்திலிருந்து விடுவித்த ரொட்டியின்
முதல் துண்டை மேலே வீசினேன்
ஆயிரம் மீன்கள் பாய்ந்து வந்தன
அடுத்த துண்டுக்கு இன்னும் இரண்டாயிரம்
இப்போது என்னை சுற்றி
நீங்கள் எல்லாம் பார்க்காத வண்ணங்களில்
சிறியதும் பெரியதும்
அழகுடனும் மேலும் அதி அழகுடனும்
பல்லாயிரம் மீன்கள்
இப்போது அவர்களின் கண்கள்
என்மீது மட்டுமே.
ஒரு தேவகுமாரனைப்போல் உணர்ந்தேன்.
அங்கேயே இருந்துவிட ஆசையுற்றேன்
ஆயினும் எனக்கான ஜூடாஸ்கள்
காத்துக்கொண்டு இருந்ததால்
நீந்தி மேலெழுந்து கரை சேர்ந்தேன்
எனது சிலுவையை
சுமக்கத் துவங்கினேன்

(81வது நவீன விருட்சம் இதழ் செப்டம்பர் மாதம் தயாராகப் போகிறது. இதழுக்குப் படைப்புகளை அனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். படைப்புகளை navina.virutcham@gmail.com மூலம் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறேன். படைப்புகள் navinavirutcham.blogspot ல் பிரசுரமாவதுடன், பத்திரிகையிலும் பிரசுரமாகும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒருவரே எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். இன்னும் நண்பர்களை நவீன விருட்சத்திற்கு துணை சேர்க்கலாம் - ஆசிரியர்)

Comments

அனுஜன்யா இந்தக் கவிதை அருமை


வாழ்த்துக்கள்