Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 118


அழகியசிங்கர் 


 புராதனக்குடுவை


பா ராஜா




மிக அழகான வேலைப்பாட்டுடன் கூடிய
புராதனக்குடுவையன்று எனக்குக்கிடைத்திருக்கிறது
அதனைக்கொண்டு
பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றலாம்
நிதி திரட்ட உண்டியல் குலுக்கலாம்
கள்ளருந்தப் பயன்படுத்தலாம்
கழிப்பறையின் குவளையாக்கலாம்
திரியன்றுப் போட்டு விளக்காக்கலாம்
காகங்களுக்கு நீர் வைக்கலாம்
அரிசியளக்கும் படியாக்கலாம்
படுக்கையில் கிடக்கும் தகப்பனின் மூத்திர டப்பாவாக்கலாம்
பூஜையறையில் வைத்துப் பூஜிக்கலாம்
உள்ளே பூதமிருப்பதாய் கோகுலிடம் பயம் காட்டலாம்
மண்ணை நிரப்பி டேபிள் ரோஜா செடி வளர்க்கலாம்
அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கலாம்
இனப்பெருக்கஞ்செய்யத் தோதாய் பறவைக்கூட்டின் மூலையில்
பொருத்தலாம்
நாட்டாமைகள் எச்சியுமிழ் சினிமாவில் நடிக்க வைக்கலாம்
அல்லது
இறுதிச்சடங்கில் அஸ்தியெடுப்பதற்கென பத்திரப்படுத்தலாம்
எவ்விதமதனைப் பயன் படுத்துவதென்ற பெருங்குழப்பத்தால்
சிரம் வெடித்துச்சிதற
கழுத்தின் மேல் அமர்ந்திருக்கிறது அப்புராதனக்குடுவை
சற்றே சிதிலமடைந்து.


நன்றி : மாயப்பட்சி - பா ராஜா  - மணல்வீடு, ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல். மேட்டூர் வட்டம், சேலம் மாவட்டம் - தொலைபேசி : 0989460571 பக்கங்கள் : 64 - விலை : ரூ.60


Comments