Skip to main content

ஏழு வரிகளில் கதை கதையாம்...காரணமாம்.



அழகியசிங்கர்



இன்னும் கொஞ்ச நாட்களில் முகநூலில் ஏழு வரிகளில் கதைகளை அள்ளி நிரப்பி விடுவார்கள் எல்லோரும்.  கதை என்பது வேறு; கவிதை என்பது வேறு.  மிகக் குறைவான வரிகளில் ஒரு கதையைப் படிப்பதுபோல் ஒரு திரில் வேற எதிலும் கிடைக்கப் போவதில்லை. இதில் கொஞ்சம் யோசித்தால் போதும் ஒரு கதை எழுத வந்துவிடும்.  தொடர்ந்து எழுதுங்கள். முகநூலிலும், பிளாகிலும் பதிவு செய்கிறேன். புத்தகமாகப் போடுவதற்கும் முயற்சி செய்கிறேன்.

படிக்கட்டில் ஏறிவந்த கர்ப்பணி பெண்ணிடம் கேட்டேன்.  'ஏழு வரிகளில் ஒரு கதை சொல்லேன்,' என்று.  'எனக்குக் கதையே சொல்ல வராது,' என்றாள்.  ஆனால் வயிற்றில் உள்ள குழந்தை, 'நான் பிறந்த பிறகு கதை சொல்கிறேன்,' என்றது.


1.  என் செல்வராஜ் , சிதம்பரம்


பிரிந்து செல்லும் உயிர்


          மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அவனுக்கு மனைவி வரமாக வந்தவள் இல்லை. அவனோடு வாழாமல் போனவள். இருந்தாலும் மனம் நினைக்கும் போது  கைப்பேசியில் அவளோடு பேசுவான். பல தடவை அது சண்டையில் முடிவதுண்டு. சமாதானம் செய்ய கடவுளா வரமுடியும்? ஒரு நாள் அவள் சொன்னாள் , " செத்துத் தொலையேன்"  என்று. அவனுக்கு தெரிந்ததெல்லாம் டாஸ்மாக் கடை மட்டுமே. வாங்கினான் மதுவை . ஒரே மூச்சில் ஒரு பாட்டிலைக் குடித்தான்.  செத்துப்போ என்று சொன்ன மனைவி ஞாபகம் வந்தது. வாழச் சொல்லி கெஞ்சும் அவன் தங்கைகள் ஞாபகம் வரவில்லை.
அவனுக்காகவே உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழும் அம்மா ஞாபகம் வரவில்லை. வயலுக்கு அடிப்பதற்காக என்று சொல்லி வாங்கிய பூச்சி மருந்து அவன் வயிற்றுக்குள் போனது. வீட்டின் அருகில் வரும்போது அவன் உயிர் அவனை விட்டு  பிரிந்து சென்றது. 


2. பாஸ்கரன் ஜெயராமன்


ஆசீர்வாதம் !


ஆசையாய் வளர்த்த ஒரே பெயர்த்திக்குத் திருமணம். பாட்டிக்கு வர முடியவில்லை. கழுத்தில் தாலி ஏறியவுடன் பெற்றோருக்குக் கண்ணீர் –பாசமாக வளர்த்த பெண்ணென்றாலும் ஒருநாள் திருமணமாகிப் போக வேண்டியது தானே முறை என்றனர் விருந்தினர். சாப்பாடு முடிந்தகையோடு மணமக்கள் பாட்டியைக் காணச் சென்றனர். அருகிலிருந்த மருத்துவ மனையில், நினைவின்றி வெண்டிலேடர் சுவாசத்தில் பாட்டி – இரண்டு நாள் முன்பு ஸ்ட்ரோக் - ஆசீர்வாதம் செய்தவுடன் வெண்டிலேடரிலிருந்தும் விடுதலை !


காதல் !

”எனக்கு உன்னைப் பிடித்திருக்கிறது. திருமணம் செய்து கொள்ளலாமா?” என்றாள் லதா. “எனக்கும் உன்னைப் பிடிக்கும், ஆனால் நான் உமாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்” என்றான் விஷால். உமாவோ, விஷாலை எனக்குப் பிடிக்கும், ஆனால் என் திருமணம் ரவியுடன்தான் – எங்கள் இருவருக்கும் காதல்” என்றாள். விஷால் லதாவை எண்ணியபடி திரும்ப வந்தான். அதற்குள் லதா, அவளை விரும்பும் கணேஷிடம்  திருமணத்துக்குத்  தலையாட்டிவிட்டாள் ! காத்திருக்கிறான் விஷால் ! 


சிபாரிசு

அவருக்கு அரசியல் செல்வாக்கு அதிகம். பையனுக்கு எல்கேஜி அட்மிஷன் மந்திரி பிஏ மூலம் பெரிய பள்ளியில் கிடைத்தது. பையன் காலேஜ் வந்தபோது, சிபாரிசில் மந்திரியின் கல்லூரியிலேயே சீட் கிடைத்தது. பையனின் திருமணம், ஊரில் அரசியல் தொடர்புடைய பெரிய செல்வந்தரின் மகளுடன் கட்சித் தலைமை சிபாரிசில் சிறப்பாக நடந்தது. மாமனாரின் சிபாரிசில், பெரிய தொழிற்சாலையில் வேலையும் கிடைத்தது. சிபாரிசின்றிப் பிறந்த தன் குழந்தைக்கு வைத்தான் பெயர் – ’வெற்றி’ என !



3.  எம் ரிஷான் ஷெரீப் 


மியாவ் மொழி


பூனைகள் மனித பாஷையில் பேசக்கூடும் என்பதாக, üஅசோகனின் வைத்தியசாலைý என்ற நாவலில்தான் படித்திருக்கிறேன்.  துளசி டீச்சரிடமும் ஒரு பூனை இருக்கிறது.  ராஜலஷ்மி என்று அதற்குப் பெயர்.  எனது பூனை பெர்சியாப் பூனை.  பஞ்சுப் பொதி போல அடர் மயிர் நிறைந்தது.  சத்தமே எழுப்பாமல் அங்குமிங்கும் ஓடித் திரியும்.  எனவே எங்கிருந்தாலும் ஓசையெழுப்பும்படி கழுத்தில் மணியொன்றைக் கட்டி வைத்திருக்கிறேன்.

பூனைகளுக்கென்றே வரும் விலையுயர்ந்த, பெட்டியிலடைக்கப்பட்ட உணவைக் கொடுத்தால் கண்ணை மூடிக் கொண்டு விழுங்கும்.  இன்று அது பேசியதுதான் ஆச்சரியமான சங்கதி. üநீ ஃபிரிட்ஜில் அடைச்சு வச்சிருக்குற மீன்கள் கடல்ல வாழ்ந்த காலத்தைவிட அதிகமா உன் ஃபிரிட்ஜ்லதான் கிடக்கு.  üமியாவ்ý என்றது.

Comments