Skip to main content

பொன்னாடை

 
 பா சிவபாதசுந்தரம்
 
 
ஒரு நண்பரிடமிருந்து சில வாரங்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.எங்கள் கல்லூரியில் ஒரு கருத்தரங்கு நடத்துகிறோம், நீங்கள் வந்து சிறப்புரையாற்ற முடியுமா? கேட்டவர் டாக்டர் பி.குமார்.

என்றைக்கு?

அடுத்த ஞாயிற்றுக்கிழமை.

சாதாரணமா நான் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவேலைகள் ஏதும் வைத்துக் கொள்வதில்லை. ஞாயிற்றுக்கிழமை என் குடும்ப தினம். வாரத்துல அந்த ஒரு நாள் தான் முழுவதுமாக என் மனைவி, மக்களோட இருக்கும் நாள். இருந்தாலும் நான் படித்த கல்லூரிக்கு கூப்பிடுகிறார் என்பதால் மறுக்க முடியவில்லை.

சரி வர்றேன். என்ன தலைப்புல பேசணும்?

உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒன்றில் பேசலாம், என்றார் நண்பர்.

அந்த சுதந்திரமும் பிடித்திருந்தது.

அடுத்து ஒரு இரண்டு நாட்கள் கழித்து ஒரு தொலைபேசி அழைப்பு, புகைப்படமும் என்னை பற்றிய குறிப்பும் அனுப்ப சொல்லி.
சனிக்கிழமை மாலை மீண்டும் ஒரு அழைப்பு, வண்டி அனுப்பவா? என்று.

வேண்டாம். நானே என் காரில் வந்து விடுகிறேன் என்றேன்.

ஞாயிறு காலை. வழக்கம்போல் என் மனைவியுடன் கருத்தரங்கிற்கு ஆஜர். மிக சொற்பமான கூட்டம், கல்யாணம் முடிந்து மறுவீட்டிற்கு வரும் கூட்டம் போல.மற்ற கருத்தரங்குகளில் எப்படி என்று தெரியவில்லை. மருத்துவ கருத்தரங்குகளில் இது ஒரு பிரச்சினை. முதல் நாள் முழுதும் மது மற்றும் புகையை பற்றி ஆய்வுக் கட்டுரைகள் வாசித்து, நிறைய பேசி நிறைய விவாதித்து விட்டு, அன்று மாலை களியாட்டத்தில், மூக்கு முட்ட குடித்து, அடுத்த நாள் காலை நிகழ்வுகளுக்கு வர இயலாத அளவிற்கு மட்டையாகி விடுவோம். ஒரு சில சமயம் இரண்டாவது நாள் காலை
 நிகழ்ச்சிகளில், பேசுபவரும், நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டும்தான் இருப்பார்கள். தப்பிதவறி ஒருத்தரோ இரண்டு பேரோ அதிகம் இருந்தால் அநேகமாக அவர்கள் அடுத்து பேச வேண்டியபவர்களாக இருப்பார்கள்.

நான் அனுப்பிய குறிப்பை வைத்து ஒரு பெண், என்னை, வல்லவர், நல்லவர் என அரங்கத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அதை தொடர்ந்து கல்லூரி முதல்வர் பொன்னாடை போர்த்தினார். முன் வரிசையில் என் பழைய நண்பர்களும், வேறு சிலரும். பின் வரிசைகளில் முதுகலை மாணவ, மாணவியர்கள். உரையாற்றுபவர்களை கேள்விகள் மூலம் மடக்கி, தன் மேதமையையும், இருத்தலையும் பறைசாற்றும், அக்கலூரி பேராசிரிய
 நண்பர் அன்று வரவில்லை.

உரை முடிந்ததும் நினைவு பரிசையும் முதல்வரே வழங்கினார். அதை என் மனைவியிடம் கொடுத்துவிட்டு நண்பர்களிடம் சிறிது நேரம் அளவளாவி விட்டு சாப்பிட சென்றோம்.

பிரியாணி. மற்ற நாட்களை விட ஞாயிறு மதியம் சாப்பிடும் பிரியாணியின் ருசியே தனி. முடித்து விட்டு அரை மயக்கத்தில் விடை பெற்றுக் கொண்டோம். கல்லூரியை விட்டு கார் சாலையை தொட்டதும்தான் ஞாபகம் வந்து, என் மனைவி கேட்டாள், 'ஏங்க அந்த பொன்னாடையை மறந்துட்டமே'.

திரும்பணும் என்றால் ரொம்ப தூரம் போய்தான் 'யூ டர்ன்'பண்ணனும்கிற சோம்பேறித்தனம். தூக்கக் கலக்கம் வேற.

'விடு யார்கிட்டயாவது கொடுத்து விட்டிருவாங்க' என்றேன்.

அடுத்த இரு நாட்களுக்கு வழக்கமான வேலை பளு. மூன்றாம் நாள் பொன்னாடை ஞாபகம் வந்தது. ஆனாலும் ஃபோன் செய்து கேட்க கூச்சமாக இருந்தது.

இதுக்கு நடுவுல என் மனைவி பொன்னாடை என்னாச்சுன்னு ஒரு முறை கேட்டாள்.

ம்ம்.... மறந்திருச்சு. ஃபோன் பண்றேன்னேன்.

அம்பத்தூரில் ஒரு ஃபேன்ஸி ஸ்டோர் வைத்திருக்கும் ஜெயராமன் என் நண்பர். சில சமயம் மதிய வேளைகளில் அவர் கடையில் இல்லாத நேரங்களில் கடை பசங்கதான் வியாபாரத்தை கவனித்துக் கொள்வார்கள். நான் கூட கேட்பதுண்டு, 'எப்படி ஜெயராமன் பசங்களை நம்பி கடையை விட்டுட்டு போறிங்க?'

சார் பசங்களெல்லாம் ரொம்ப நம்பிக்கையானவங்க சார்.

எப்படி சொல்றீங்க?

அவங்க வேலைக்கு சேரும்போதே சோதித்து விட்டுதான் சேர்ப்பேன்.

என்ன செய்விங்க?

ஒரு நூறு ரூபா நோட்டை அவங்க கண்ணுக்கு மட்டும் தெரிகிற மாதிரி போட்டிருவேன். எடுத்து கொண்டு வந்து கொடுத்துட்டான்னா பரிட்சைல தேறிட்டான்னு அர்த்தம். இல்லையென்றால் பஸ்ஸுக்கு காசு கொடுத்து ஊருக்கு அனுப்பி விடணும்கிறதுதான் சோதனை.

யாராவது எடுத்துக்கிட்டு கொடுக்காம இருந்திருக்காங்களா?

இது வரைக்கும் இல்லை.

நேற்று பீரோவில் பழைய பொன்னாடை ஒன்றை பார்த்த போது ஏனோ ஜெயராமனின் சோதனை ஞாபகம் வந்தது.

படிப்பு ஏறாமல் கடையில் வேலை செய்ய வரும் பசங்களே நேர்மையாக இருக்கையில், படித்து பட்டங்கள் பெற்ற மருத்துவர்கள் கண்டிப்பாக பொன்னாடையை எனக்கு அனுப்பி விடுவார்கள். என்ன, அவர்களுக்கு வேலைகள் கொஞ்சம் அதிகம் இருப்பதால் சில மாதங்களோ அல்லது வருடங்களோ தாமதமாகலாம்.

இதில் என் தலையை அரிக்கும் ஒரே சந்தேகம், பொன்னாடையை பார்க்கும் பொழுது எனக்கு ஜெயராமன் ஞாபகம் வருவது போல், எனக்களித்த பொன்னாடையை பார்க்கும் போது அவர்களுக்கு எது ஞாபகம் வரும்? அல்லது
ஏதாவது ஞாபகம் வருமா?

Comments