Skip to main content

நாளை.

 

 
நாளைக்கு ஒரு நாடகம்
நடிக்க வேண்டியிருக்கிறது
நாடக ஸ்க்ரிப்ட் கைக்கு வரவில்லை
நாள்முழுவதும் ஒத்திகை செய்ய வழியில்லை
கதாபாத்திரம் அதே தான் என்றாலும்
இன்றுபோட்டது நாளைக்கு இறந்ததாகிவிடும்
புத்தம்புது நாடகம்தான் நித்தம்!
க்ரீன் ரூமைவிட்டு வெளியே வந்து
விளக்குபோட்டதும்
வெளிச்சத்தில்தான்
வசனம்பேசவேண்டும்
இன்றையநாடகத்திற்கான ஒத்திகையை
நேற்றைக்குப்பார்க்கவில்லை
இன்றுதான் நேற்றின் நாளையாகி இருந்ததே.
கைநழுவும் பாதர்சமில்லைதான் நாளை
ஆனாலும் கைபிடிக்க இயலா காற்று
நாளை பிறந்ததும்  மேடை ஏறியதும்
தானாய் வருகின்றன வசனங்கள்
நாளையின் தலை எழுத்ததினை
அசலைப்பத்திரப்படுத்திக்கொண்டு
நகலையாவது இறைநாயகன்
நம்கைக்கு அனுப்பி வைத்தால்
சரிபார்த்து நடிக்கலாம்
அதற்கு வழி இல்லாததால்
நாளை கதி என்ன என்று தெரியாமலே
மேடை ஏறி நடிக்கத் தயாராகிக்கொண்டுதான் இருக்கிறோம்!

Comments

வாழ்வே ஒரு நாடக மேடை...காட்சிகளெல்லாம் மற்றவர்கள் பொழுதை கழிக்கவும்.. நடிப்பவர்கள் வயிற்றினை நிரப்பவும்...
ஷைலஜா said…
குமரி எஸ். நீலகண்டன் said...
வாழ்வே ஒரு நாடக மேடை...காட்சிகளெல்லாம் மற்றவர்கள் பொழுதை கழிக்கவும்.. நடிப்பவர்கள் வயிற்றினை நிரப்பவும்
>>>>>>>>>>>>>>>>>

ஆமாம் நாம் ஒத்திகை எதுமின்றி நடித்துக்கொண்டிருக்கிறோம்! திரை வீழும்போது ஆழ்ந்த நித்திரையும் கிடைக்கிறது! நன்றி திரு நீலகண்டன்.