Skip to main content

சாகசக்காரியின் வெளி








அதீத மனங்களில் மிதந்து வழியும்
ஆசைகளை அவளறிவாள்
தன் வஞ்சக விழிகளில் சிரித்து
மென்மை வழியும் குரலினை
சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி
தூண்டிலென எறிவாள்
கபடங்களறியாக் கண்களைக் கொண்ட
பிஞ்சுமனங்களை அவளிடம்
கொடுத்துப் பார்த்திருங்கள்
அல்லது
உலகம் மிகவும் நல்லதெனச்
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை
அவளிடம் விடுங்கள்
அம் மனிதன் தானாகவே
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான
நஞ்சை மிடறாக்கி
அருந்த வைத்திருப்பாள் அவள்
கைவசமிருக்கும்
எல்லா நெஞ்சங்களையும்
கெட்டதாக்கி அழுகவைத்துப்
பின்னொருநாள் புது இதயங்களுக்கு
மீண்டும் தூண்டிலிடவென விட்டுச் செல்வாள்
அழுதழுது நீங்கள்
அவளைத் தேடிச் சென்றால்
உங்களைத் திரும்பச் சொல்லி
மென்மையானதென நீங்கள் சொல்லும்
அவளது பாதங்களால் எட்டியுதைப்பாள்
கொடுந்தீய வார்த்தைகளையெல்லாம்
எச்சிலோடு காறி உங்கள்
வாடிய முகங்களில் துப்பிடுவாள்
பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை
வக்கிரங்களறியவென
அவளிடம் கொடுத்த நீங்கள்
இதையெல்லாம்
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்
ஏனெனில் அவள்
சாகசக்கார வெளியில்
வன்முறைகளை விதைப்பவள்

Comments

அன்பின் ரிஷான் அவர்களுக்கு வாழ்த்துகள், கவிதை நல்லா இருக்குங்க
anujanya said…
//அதீத மனம்// - எங்கோ கேட்ட பெயர் :)

//சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி//

வாவ். ரொம்ப நல்லா இருக்கு ரிஷான்.

அனுஜன்யா
எனது கவிதை 'நவீன விருட்சம்' காலாண்டிதழில் பிரசுரிக்கப்பட்டமையிட்டு எனது மகிழ்ச்சி கலந்த நன்றி !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
அன்பின் யாத்ரா,

//அன்பின் ரிஷான் அவர்களுக்கு வாழ்த்துகள், கவிதை நல்லா இருக்குங்க//

கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் அனுஜன்யா,

//வாவ். ரொம்ப நல்லா இருக்கு ரிஷான். //

கருத்துக்கு நன்றி நண்பரே !
வாழ்த்துக்கள் ரிஷான் !
அன்பின் மண்குதிரை,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !
வாழ்த்துகள் கவிஞரே,ரிஷான்.
அன்பின் முத்துவேல்,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !
நல்லாயிருக்குப்பா உன்னோட கவிதை..

பெண்கள்னாலே இப்படித்தானோ??
அன்பின் அகமது சுபைர்,

//நல்லாயிருக்குப்பா உன்னோட கவிதை..//

நன்றி நண்பரே !

//பெண்கள்னாலே இப்படித்தானோ??//

இல்லை. ஆண்களிலும் பெண்களிலும் சில நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் !