Skip to main content

தொலைந்துபோன பாரதியார்


அழகியசிங்கர்




நண்பரொருவர் பேச்சைக் கேட்டு
எழுதிப்பார்த்தேன் பாரதியாரை
துடிக்கும் மீசையுடன்
என் முன்னால் நின்றார் பாரதியார்
எங்கே ஒளிந்திருக்கிறீர்
என் வரிகளில் என்று அவரைக் கேட்டேன்
சிரித்தபடி மறைந்து விட்டார்

போனில் படித்தபோது
நண்பர் தலை ஆட்டி
நன்றி நன்று என்றார்
கொண்டு வருவார்
துடிப்புடன்
பாரதியார் பற்றி எழுதிய
பலர் கவிதைகளையெல்லாம்
சேர்த்தென்றால்
திட்டத்திலிருந்து விலகி விட்டார்

அப்போது எழுதிய
அந்தக் கவிதையை
எங்கே வைத்தேன்
ஃபைல்களைப் புரட்டி
பார்த்தாலும் கிட்டவில்லை
பாரதி என் பாரதி
நீண்ட நோட்டில்
எழுதிப் பார்க்கும்
கவிதைகள் பலவற்றை
சேர்த்து வைக்கும் பழக்கமெனக்குண்டு
இருந்தாலும்
பாரதியாரைப் பற்றி
நானெழுதிய கவிதையை
காணவில்லை ஏனோ..
எங்கே ஒளிந்துகொண்டார்?
தெரியவில்லை
வாவென்றால் வருவாரா?
தெரியவில்லை

அவர் வரிகளிலிருந்து
கயிறு பிடித்து
இறங்கியிருக்கிறோம்
வழிதெரியாமல்
திகைத்த
எங்களுக்கு
வரம்கொடுத்து
வரி தந்த மேதையாவர்

அவரை வைத்துப் படம் எடுக்கிறார் பலர்
பாட்டுப்பாடப் பிய்த்துக் கொண்டனர்
அவர் பாடல்களை
நானோ கவிதை எழுத முயற்சிக்கிறேன்

(பாரதியார் நினைவு நாள் : செப்டம்பர் 11)

Comments

Popular posts from this blog