Skip to main content

அஞ்ச லட்டைக் கதைகள் 16



அழகியசிங்கர்







இது என் 16வது கதை.  கதையைப் படிக்க  ஒரு நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம் வரை ஆகும்.  முகநூல் நண்பர்களுக்கு வாசிக்க அளித்துள்ளேன். 

தூ....


எதிரில் கனகா வந்து கொண்டிருந்தாள்.  காலில் செருப்பில்லாமல்.  எப்போதும் இந்தத் தெருவில் நடக்கும்போது துப்பிக்கொண்டே நடப்பாள்.  

ஒவ்வொரு முறையும் அவளைப் பார்த்து, 'துப்பாதே.  காலில் செருப்புப் போட்டுக்கொண்டு நட,', என்பேன்.

அவள் சரி சரி என்று தலை ஆட்டுவாள்.  திரும்பவும் அதே மாதிரிதான்.  அவர்கள் வீட்டில் வளர்க்கும் இரண்டு நாய்களைக் கூட்டிக்கொண்டு வருவாள்.

நாய்களும் எங்கள் வீட்டுக வாசல் முன் மூத்திரம் போகும்.  நான் 'ஹே ஹே' என்று கத்துவேன்.  கனகாவைப் பார்த்து, ' நாய்களைக் கொண்டு வராதே,'  என்று கத்துவேன். 

உண்மையில் நான் சொல்வதைக் கேட்டு தெருவில் துப்புவதை நிறுத்திவிட்டாள்.  கொஞ்சம் திருந்தி விட்டாளென்று நினைத்துக் கொண்டேன்.  ஆனால் செருப்பு மட்டும் போடுவதில்லை.

அவளிடம் செருப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை இல்லாவிட்டால் வாங்கிக் கொடுத்துவிடலாம்.  

எங்கள் தெரு புழுதி நிறைந்த தெரு.  அத்துடன் அசுத்தமான தெரு.  எல்லாம் தூசி மயமாக இருக்கும்.  கனகா மட்டும் கவலைப்படுவதில்லை.  அவளுக்கு ஒரு பையனும் ஒரு பெண்ணும்.  அவர்களும் கல்லூரிகளுக்குப் போகும்போது மட்டும்  நவ நாகரீக உடைகளை அணிந்து கொள்வார்கள்.  பொதுவாகத் தெருவில் அம்மா மாதிரி செருப்பு மாட்டிக் கொண்டு நடக்க மாட்டார்கள்.  கனகாவின் கணவன் இருக்கிற இடம் தெரியாது.  அவர்கள் இருவரும் சேர்ந்து நடந்து போவதைப் பார்த்ததே இல்லை.  

இப்போதெல்லாம் வாசல் அருகில் நான் நிற்கிறேனா என்று கனகா பார்ப்பாள்.  நான் நிற்பதை அறிந்தால் அவள் வீட்டைவிட்டுத் தாண்டி வரமாட்டாள்.

Comments

Popular posts from this blog