Skip to main content

அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை


எம்.ரிஷான் ஷெரீப்




கழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்
சாவல் குருவிக்கு என்ன திரை
அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்
அடித்த சாரலில்
வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று
நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே

பிறகென்ன
வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்
துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட
நங்கூரங்களின் கயிற்றோடு
உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள்

அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து
வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன்
பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி
உணவு தயாரிக்கும் இளம்பெண்
நிலவொளியில் புயல் சரிக்க
போராடி அலையும் பாய்மரக் கப்பல்
அழிந்த மாளிகை
அசையாப் பிரேதம்

அது என் நிலம்தான்
உன் மொழி வரையும் ஓவியங்களில்
எல்லாமும் என்னவோர் அழகு

உண்மைதான்
மந்தையொன்றை அந்தியில்
நெடுந் தொலைவுக்கு ஓட்டிச் செல்லும்
இடையனொருவனை நான் கண்டிருக்கிறேன்
நீ சொல்வதைப் போல
காலத்தை மிதித்தபடிதான் அவன் நடந்துகொண்டிருந்தான்
நெடிதுயர்ந்த மலைகள்
உறைந்துபோன விலங்குகளைத்தான் தின்று வளர்கின்றன
ஆகவே மலைக் குகை வாசல்களில் அவன் அவைகளோடு
அச்சமின்றி ஓய்வெடுத்தான்

சொல்
மெய்யாகவே நீ கனவுதான் கண்டாயா

என்னைக் கேட்டால்
வாசப் பூஞ்சோலை
சுவனத்துப் பேரொளி
தழையத் தழையப் பட்டாடை
தாங்கப் பஞ்சுப் பாதணி
கால் நனைக்கக் கடல்
எல்லாவற்றிலும் நேர்த்தியும் மினுமினுப்பும்
தேவையெனில் அமைதியும்
தேர்ந்தெடுத்த மெல்லிசையும் என
எல்லாமும் இன்பமயம் என்பேன்

அத்தோடு
இன்னும் கூட இரவு
தினந்தோறும் கொஞ்சம் இருட்டை
எனக்காக விட்டுச் செல்கிறது கிணற்றுக்குள்
என்பதைச் சொல்வேன்
வேறென்ன கேட்கிறாய்

இலையுதிர் காலத்து மரத்தின் வலி
அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை



Comments

வலிதான் வாழ்வென்றான பின் வலியும் ஒரு வகையில் இனிமைதான் . - சுப்ரா

Popular posts from this blog