Skip to main content

எதையாவது சொல்லட்டுமா........38

க.நா.சு நூற்றாண்டை ஒட்டி நான் ஒன்று செய்தேன். ஒரு காலத்தில், மையம் ராஜகோபால், ஸ்ரீனிவாஸன், ஆனந்த் மூலம் கொண்டு வந்த க.நா.சு கவிதைகளை திரும்பவும் கொண்டு வந்தேன். 1986 ல் அது வந்தபோது, க.நா.சு நிகழ்த்திய உரை இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. க.நா.சு கவிதை எழுதுவதில் தெளிவாகவே தன் கோட்பாட்டை வகுத்திருந்தார். கவிதையை உரைநடை வழியாகக் கொண்டு வருவதில் புரட்சியே செய்திருந்தார்.

இந்தப் புத்தகம் 1000 பிரதிகள் அச்சிட்டேன். மொத்தம் 32 பக்கம் அட்டையுடன் சேர்த்து. சேகர் ஆப்செட்டில் கொடுத்துவிட்டு 1000 பிரதிகள் வேண்டும் என்றேன். இப்புத்தகத்தை புத்தகக் கண்காட்சி போதே அடிக்க மறந்துவிட்டேன். முடியவில்லை. அச்சடித்திருந்தால், அதை எல்லோருக்கும் கொடுப்பதற்கு கொஞ்சம் எளிதாக இருந்திருக்கும்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை திருவல்லிக்கேணி போய் ஆட்டோ வில் புத்தகக் கட்டை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பின் வீட்டில் பெஞ்ச் மீது அதை வைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக புத்தகக் கட்டைப் பிரித்து அதில் உள்ள புத்தகங்களை எடுத்துக்கொண்டேன். மகத்தான க.நா.சு போன்ற ஒரு கவிஞரைப் பற்றி இன்னொரு கவிஞருக்குத்தான் தெரியும்போல் தோன்றுகிறது. கடற்கரை என்ற கவிஞரின் புத்தக விழா சென்னை LLA கட்டிடத்தில் மாலை ஆறு மணிக்கு நடக்க இருப்பதை கடற்கரை எனக்குத் தெரிவித்திருந்தார். அதுதான் க.நா.சு கவிதைகளை எல்லோருக்கும் கொடுக்க உகந்த இடம் என்று தோன்றியது.

எனக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கிளம்புவது சிரமம். சீர்காழியிலிருந்து சனிக்கிழமை வந்து, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் நான் எங்கும் அலையாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அடுத்தநாள் அலுவலகம் செல்ல சரியாக இருக்கும். க.நா.சுவின் உத்வேகத்தால் நான் கிளம்பி விட்டேன். LLA கட்டிடத்திற்கு 5.30 மணிக்கே வந்துவிட்டேன். எல்லோருக்கும் கவிதைப் புத்தகத்தை எடுத்து நீட்டினேன். கவிஞர் ஜெயபாலன் அதற்கு பைசா கொடுக்க பாக்கெட்டில் கையைவிட்டார். நான் சொன்னேன். இது இலவசம் என்று. எனக்கும் அப்படி இலவசமாகப் புத்தகத்தைக் கொடுக்க மகிழ்ச்சியாக இருந்தது. பலர் வாங்கிக்கொண்டார்கள். என் நண்பர் இந்திரன் வந்திருந்தார். அவரும் நானும் ஒரே அலுவலகத்தை ஒரு காலத்தில் சேர்ந்தவர்கள். நான் புத்தகம் கொடுக்கும்போது,''உங்கள் புத்தகத்திற்கு பைசா தரமாட்டேன்,''என்றார். நான் பேசாமல் இருந்தேன். அதன் பின் தான் அவருக்குத் தெரிந்தது நான் கொடுத்தப் புத்தகம் இலவசம் என்று. நான் உடனடியாக கடற்கரை கூட்டத்திலிருந்து கிளம்பி வந்து விட்டேன்.

மயிலாடுதுறைக்கு நகூர் வண்டியில் கிளம்பி காலை 5 மணிக்கு வந்தேன். ரயில்வே நிலையத்தில் உள்ள ஒரு பத்திரிகைக் கடையில் கடைக்காரர் பார்த்து க.நா.சு புத்தகத்தை நீட்டி஧ன். 'புத்தகம் இலவசம். எல்லோரிடமும் கொடுங்கள்,' என்றேன். வாங்கி வைத்துக் கொண்டார். பின் என்னுடன் வந்த உறவினரிடம் கொடுத்தேன்.

மயிலாடுதுறையில் மயூரா லாட்ஜ் என்ற ஓட்டல் ஒன்று உண்டு. அங்கு சில புத்தகங்களைக் கொடுத்தேன். அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. க.நா.சு யார் என்று சொல்ல வேண்டியிருந்தது. எப்போதும் பத்திரிகை வாங்கும் கடைக்குச் சென்று கொடுத்தேன். அந்தக் கடைக்காரர் வாங்க மறுத்துவிட்டார். எனக்கு சற்று வருத்தமாக இருந்தது. பின் வேண்டா வெறுப்பாக வாங்கி வைத்துக் கொண்டார். அவரிடம் க.நா-சுவைப் பற்றி சொன்னாலும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. என் அலுவலகத்தில் உள்ள சிலருக்குக் கொடுத்தேன். வாங்கி வைத்துக்கொண்டாலும் அவர்கள் யாரும் படிக்கப் போவதில்லை.

லட்சிமிபதியை கடற்கரை கவிதைக் கூட்டத்தில் பார்த்தபோது, கூட்டம் போடும் சாத்தியம் குறைவாக இருப்பதுபோல் பட்டது. முன்புபோல் இல்லை. கூட்டம் போட LLA கட்டிடத்தில் லோள் பட வேண்டும் போலீஸ் அனுமதி வாங்க வேண்டும். கூட்டம் போடும் தேதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பின் எல்லோரையும் வரச்சொல்லி போன் மேல் போன் போட்டு கூப்பிட வேண்டும். அப்படியும் வர மாட்டார்கள். எல்லோருக்கும் வயதாகிவிட்டது. பேசுபவர்களுக் வயதாகி விட்டது. கேட்பவர்களுக்கு வயதாகி விட்டது. தினமும் ஜோல்னா பையில் க.நா.சு கவிதைகளை சுமந்துகொண்டு இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் புத்தகம் வழியாக அவருடைய நூற்றாண்டை தொடங்கி விட்டதாக தோன்றுகிறது.

(இன்னும் வரும்)

Comments

நண்பரே உங்கள் பணிக்கு வந்தனங்கள் நன்றிகள்.
தயவு செய்து, இந்தப் படைப்பை PDF /WORD இல் மாற்றி உங்கள் பதிவில் வெளியிட்டால் உலகெங்கும் பரவும்.
நண்பரே உங்கள் பணிக்கு வந்தனங்கள் நன்றிகள்.
தயவு செய்து, இந்தப் படைப்பை PDF /WORD இல் மாற்றி உங்கள் பதிவில் வெளியிட்டால் உலகெங்கும் பரவும்.
Unknown said…
அழகியசிங்கர், உங்களை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
இன்னும் குறையாத ஆர்வத்துடன் செயல்படுகிறிர்கள்.
வாழ்த்துக்கள். நன்றி. - ஜி கணேஷன் [மனோரஞ்சன்]
ராம்ஜியின் யோசனை... நல்ல யோசனை.. அழகியசிங்கர் அவர்களின் அமைதியான இலக்கியப்பணி இந்த உலகத்தில் அபூரவமானது.