Skip to main content

சாட்சிகளேதுமற்ற மழை

கதவு யன்னல்களிலிருந்து

வழிகின்றன முகங்கள்

கொட்டப்படும் நீர்த்தாரைகளைப் போல


கைகளில் கட்டப்பட்டிருக்கும்

நுண்ணிய கயிறுகளை அவிழ்த்துக் கொண்டு

பார்த்திருக்கும் அவற்றின் விழிகளில்

நிழலாக அசைகின்றன

பாதையோர மரங்களும்

ஈரப் பறவைகளும் மழையும்

ஒரு தெருச் சண்டையும்


புன்னகையும் சிரிப்பும் எள்ளலும்

சுழிப்பும் முணுமுணுப்பும்

அருவருப்பும் கலந்த உணர்ச்சிகள்

மழைச்சாரலிடையில்

அங்கிங்கு தாவும் தவளைகளைப் போல

அவதானித்திருக்கும் முகங்களில் மாறிட

பேய்களின் வாய்களுக்கெனவே

பிறப்பெடுத்தவை போல

வெளியெங்கும் வீச்சமேற்றுகின்றன

பிணங்களின் வாடையுடனான

அழுக்கு மொழிகள்


இடி வீழ்ந்து

இலைகள் கிளைகள் எரிய

மொட்டையாகிப்போன மரமொன்றென

நடுத்தெருவில் நின்று ஓலமிட்டழுதாள்

மேலாடையுரிக்கப்பட்ட குடிகாரனின் மனைவி

புதைக்கப்பட்ட விரல்களில்

புழுக்களூர்வதைப் போல

நேச உணர்வேதுமற்றவன்

தன் தாக்குதலைத் தொடர்ந்தான்


நத்தைகள் ஆமைகளைப் போல

தங்களை உள்ளிழுத்து

கதவுகளைப் பூட்டிக்கொண்டன

தெருவில் நிகழ்ந்த

கொலையைக் கண்டமுகங்கள்

எதையும் காணவில்லையென்ற

பொய்யை அணியக்கூடும்

இனி அவர்தம் நாவுகள்

Comments

Popular posts from this blog