Skip to main content

நான், பிரமிள், விசிறி சாமியார்....16

பிரமிள் அடிக்கடி என்னை சந்திக்காமலே பல மாதங்கள் இருப்பார். சில சமயம் அடிக்கடி சந்தித்துக் கொண்டும் இருப்பார். பக்கத்தில் சந்திக்கும் தூரத்தில் இருந்தாலும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பார். ஒரு சமயம் சந்திக்காத சமயத்தில் நான், குவளைக்கண்ணன், யுவன், தண்டபாணி நால்வரும் டிரைவ் இன்னில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். தூரத்தில் பிரமிள் வேறு சில நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நான் அவரை கவனிக்கவில்லை.

அப்போதுதான் பிரமிள் என்னைப் பார்க்க விரும்புவதாக அவருடன் இருந்த ஒரு நண்பர் மூலம் சொல்லி அனுப்பினார். நான் அவர் வந்திருப்பதை அப்போதுதான் கவனித்தேன். என் நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு பிரமிள் இருக்குமிடத்திற்கு வந்தேன்.

அவரைத் திரும்பவும் பார்க்கும்போது, என்னை அறியாமலேயே ஒருவித பரிதாப உணர்வு எனக்கு ஏற்பட்டது. இதுமாதிரி அனுபவம் எனக்கு ஆத்மாநாமை ஒரு முறை ஞாநி இருக்குமிடத்தில் ஒரு கூட்டத்தில் சந்திக்கும்போது ஏற்பட்டது. அதேபோல் கோபிகிருஷ்ணனைப் பார்க்கும்போது ஏற்படும். காரணம் புரியாது.

பிரமிள் அப்போது தேவதேவன் உடல்நிலை பாதிப்பு அடைந்ததைப் பற்றி சொன்னார். கேட்கும்போது வருத்தமாக இருந்தது. தேவதேவன் மென்மையான மனிதர். அழகான கையெழுத்தில் அவர் அதிகமாக கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பார். ஆரம்பத்தில் விருட்சம் ஒவ்வொரு இதழிலும் அவர் கவிதைகள் அனுப்பாமல் இருக்க மாட்டார். பிரமிள் மதிக்கக்கூடிய கவிஞர்களில் தேவதேவனும் ஒருவர்.

''சரி, உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பேசிக்கொண்டிருந்தீர்கள்...நான் உங்களைக் கூப்பிட்டு தொந்தரவு செய்துவிட்டேன். நீங்கள் போங்கள்...'' என்று என்னை அனுப்பி விட்டார்.

நான் திரும்பவும் என் நண்பர்களிடம் வந்து, அவர்தான் பிரமிள் என்றேன். அவர்களுக்கும் அவரைச் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது. எல்லோரும் கிளம்பும்போது, பிரமிளும் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பி விட்டார். அப்போது என் பக்கத்தில் வந்தவரை, 'இவர்தான் குவளைக்கண்ணன்,' என்று குவளைக் கண்ணனை அறிமுகப் படுத்தியதாக நினைப்பு. பிரமிள் அவரைப் பார்த்து,'இப்போது அமெரிக்காவில் உறவு என்பது சாத்தியம் இல்லாமல் இருக்கிறது...எல்லாம் பணம்...பணம் கொடுத்தால் பேசுவதற்கு நண்பர்கள் கிடைப்பார்கள். சிறிது நேரம் பேசுவதற்கு பணம் கொடுக்க வேண்டும். அவர்கள் சிறிது நேரம் நம்முடன் இருந்துவிட்டுப் பேசிவிட்டுப் போய்விடுவார்கள்...வயதானவர்களுக்கு யாரும் பேசுவதற்குக் கிடைக்க மாட்டார்கள். குறிப்பாக இளைஞர்கள் கிடைக்க மாட்டார்கள்....'' என்றார்.

பின் நாங்கள் வாசல் பக்கமாக நகர்ந்து வந்தோம். எதிரில் பிரமிளுக்குத் தெரிந்த ஒரு இலக்கிய நண்பர் வந்தார். அவர் பிரமிளைப் பார்த்து, 'ஹலோ..' என்றார். உடனே பிரமிள் அவரைப் பார்த்து பயந்து ஓடுவதைப் போல் ஒதுங்கிப் போனார். அந்தக் காட்சி விசித்திரமாக இருந்தது. இதுதான் பிரமிள். அவருக்குச் சிலரை சிலசமயம் பிடிக்கும். சிலசமயம் பிடிக்காது.
(இன்னும் வரும்)

Comments