Skip to main content

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......7





பல ஆண்டுகள் கழித்து இச் சம்பவத்தைப் பற்றி எழுதுகிறேன். விசிறி சாமியாரும் இல்லை, பிரமிளும் இல்லை. விசிறி சாமியாரைப் பார்த்து, ''நீங்கள் ஏன் என்னிடமிருந்து சிகரெட்டிற்குப் பணம் வாங்கவில்லை,'' என்று அப்போது கேட்க தைரியம் இல்லை. அப்படியே கேட்டாலும் விசிறி சாமியார் பதில் சொல்லியிருப்பாரா என்பது தெரியாது. ஆனால் விசிறி சாமியார் நான் ஆவலுடன் சிகரெட் வாங்க அவரிடம் பணம் நீட்டியபோது வாங்க மறுத்தது என் மனதில் ஆழமாய் பதிந்து விட்டது. அதுவரை உற்சாகமாக இருந்த நான் உற்சாகம்குன்றியவனாக மாறிவிட்டேன். ஏன் வருத்தமாகக் கூட மாறிவிட்டது? ஏன் இதுமாதிரி சாமியார்களெல்லாம் பார்க்கிறோம்? என்று கூடத் தோன்றியது. ஏன் என்னிடம் வாங்கவில்லை என்பதற்குக் காரணமெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த இடத்தைவிட்டுப் போய்விட வேண்டுமென்றுகூட தோன்றியது. எத்தனைப் பேர்கள் வழிபடுகிற சாமியார் உண்மையில் மிக முக்கியமானவர். அவர் இதுமாதிரி செய்ததற்கு எதாவது காரணம் இருக்குமென்று யோசித்தேன். மேலும் நான் சிகரெட் பிடிக்காதவன். அதனால் என்னிடமிருந்து அதை வாங்காமல் இருந்திருக்கலாமென்று நினைத்தேன்.



பிரமிளுக்கு நான்தான் பணம் செலவு செய்திருந்தேன். சென்னையிலிருந்து திருவண்ணாமலை வரை. மேலும் சாப்பிட எல்லாவற்றிக்கும். இது எதாவது கர்வத்தை என்னிடம் வெளிப்படுத்தியிருக்கும். சாமியாருக்கு இது தெரிந்திருக்கும். அதனால் சாமியார் என்னிடம் பணம் வாங்காமல் பிரமிள் மூலம் வாங்குகிறார் என்று நினைத்துக் கொண்டேன். இப்படி நினைக்கும்போது வருத்தம் இன்னும் கூடி கூடிப் போயிற்று.



என் பக்கத்தில் இருந்த லயம் சுப்பிரமணியன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசாமல் இருந்தார். சிலசமயம் அவர் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் கூட வந்ததுண்டு. மனிதர் என்ன கல்லுப்போல அசையாமல் இருக்கிறாரே என்ற ஆச்சிரியம் கூட என்னிடம் சூழ்ந்து கொண்டது.



பிரமிளுக்கு லயம் சுப்பிரமணியன் மீது அவ்வளவு அன்பு. சத்தியமங்கலத்திலிருந்து சென்னைக்கு அவர் வருகிறார் என்பதை அறிந்தால் போதும் பிரமிள் அவ்வளவு உற்சாகப்படுவார். அவர் வருவதற்கு முன்பே என்னிடம் சொல்லி சொல்லி சந்தோஷப் படுவார். சுப்பிரமணியனும் சென்னை வந்தால் பிரமிள் இருக்குமிடத்தில்தான் இருப்பார். பிரமிள் அவரை சுப்பு சுப்பு என்று ப்ரியமாகக் கூப்பிடுவார். பிரமிளுடைய அத்தனை எழுத்துக்களையும் புத்தகங்களாகப் பிரசுரம் செய்ய சுப்புவிடம்தான் அதிகாரம் அளித்திருந்தார். சாமியாரிடம் பெட்டி பாம்பாக அடங்கி இருந்த பிரமிளிடம் நட்பு கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல. என்னிடம் ஒரு சமயத்தில் நன்றாகப் பழகுவார். சிலசமயம் கிட்டவே நெருங்க விட மாட்டார்.



ஒரு முறை என்னிடம் கோபம். ஏன் கோபம் என்பதை வெளிப்படையாகவும் சொல்ல மாட்டார். ஜே கிருஷ்ணமூர்த்தி சென்னை வந்தால் ஞாயிற்றுக்கிழமையெல்லாம் காலை நேரத்தில் கேள்வி பதில் கூட்டம் நடத்துவார். பெரும்பாலும் கேள்வி கேட்பவர்கள் கிருஷ்ணமூர்த்தியை எதாவது கேட்டு காயப்படுத்தி விடுவார்கள். ஒருவர் கேட்கிறார் : '' நீங்கள் ஏன் இவ்வளவு ஆடம்பராகவும் ரொம்பவும் தூய்மையாகவும் டிரஸ் செய்து கொள்கிறீர்கள்?'' இந்தக் கேள்வியைக் கேட்டவுடன்கிருஷ்ணமூர்த்தி எப்படி பதில் சொல்லப் போகிறார் என்று திகைப்பாக இருந்தது. ''மற்றவர்களுக்கு மரியாதைத் தர'' என்ற கிருஷ்ணமூர்த்தியின் பதில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுவும் உடனே பதில் சொல்லிவிட்டார். அந்தக் கூட்டம் நடக்கும்போதுதான் பிரமிள் எங்கே என்று துழாவிப் பார்த்தேன். அவர் ஓரிடத்தில் உட்கார்ந்திருந்தது தெரிந்தவுடன், நானும் அங்கு போய் பக்கத்தில் அமர்ந்துவிடுவேன். பிரமிள் என்னைப் பார்த்தவுடன் அங்கிருந்து கிளம்பி வேறு ஒரு திசையிலிருக்கும் ஓரிடத்தில் போய்விடுவார். என் மீது ஏதோ கோபம். நானும் விடாமல் அவரைத் தொடர்வேன். இடம் மாறி மாறி முகத்தை வேறுபக்கமாக திருப்பிக் கொள்வார்.


(இன்னும் வரும்)

Comments

சில அசாதாரண மனிதர்களின் குண விசேஷங்களில் ஒளிந்திருக்கும் புதிர்கள் ஸ்வாரஸ்யமானவை, அப்படியான சம்பவத் தொகுப்பாக வரும் இந்தத் தொடர் மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.
ஒரு கல்லில் மூன்று மாங்காய்கள் போல நீங்கள் ஒரே தொடரில் தங்களைப் பற்றியும், பிரமிளைப் பற்றியும், விசிறி சாமியார் அவர்களைப் பற்றியும் அறிந்திராத பல தகவல்களை எழுதிவருகிறீர்கள். தொடர் நன்றாக போகிறது.