Skip to main content

மூன்று கவிதைகள்


நகரம் தொலைத்த வானம்

வானத்து நட்சத்திரங்களை
பகலில்
சூரியன் விழுங்கிக்கொள்கிறான்.

சாலை விளக்குகளும்
குண்டு குழிகளும்
சக ஊர்திகளும்
இல்லத்திரைக்
காட்சிகளும்
மேல் வீட்டுக்காரனின்
கட்டாந்தரையும்
இரவில்
மறைத்துக்கொள்கின்றன.

இறுதி ஊர்வலம்...


இதோ புறப்பட்டுவிட்டது
இறுதி ஊர்வலம்...

மகள் கதறி
தரையில் அழுது புரள...

மனைவி கடைசிக் கடைசியாய்
முகம் பார்த்துத் தவிக்க...

உறவினர்களல்லாத சஹ்ருதயர்களும்
கண்களில் கரைமீறாமல் நீர் துளிர்க்க.

வாரியிறைக்கப்படும் சில்லறைக் காசுகளை பொறுக்குபவன்
குறுக்கிடும் கேபிள்களைத் தள்ளி
வழியேற்படுத்தித் தருகிறான்.

தெருவோரப் பிச்சைக்காரி ஏனோ
தன்குழந்தையின் முகத்தின் முன் துண்டுவிரித்து
காட்சியை மறைக்கிறாள்.

இணையாக வந்த யாரோ இரு இளம்பெண்கள்
மூக்கைப் பொத்திக்கொண்டு ஒதுங்கி நிற்கின்றனர்.

இரண்டு தெரு கடந்ததும்
யாரோவாகிப்போன மனிதர்கள்
சலனமற்று வேடிக்கைப் பார்க்கின்றனர்.

தெருவெங்கும் இறைக்கப்பட்ட
சிவப்பு ரோஜாக்களைப் பார்க்கையில்
ஊர்வலம் போய்க்கொண்டிருந்த ஒருவன் நினைவில்
காதலி கூந்தலின் ஒற்றை ரோஜா
நினைவுக்குவர
அவசரமாய் நினைவை அழிக்கிறான்.

பிணத்தின் காலடியில் கட்டப்பட்ட
மிரண்ட கண்களுடனானக் கோழியின் கத்தல்
யாருக்கும் கேட்காமல் போக
கோழிக்கும் இதுவே இறுதி ஊர்வலம்.


3 சிறுமிகள்


பல வருடங்கள் கழித்துப்
பார்க்க நேர்ந்த என்
பள்ளித் தோழியின்
இடுப்பில் ஒன்றும்
கைப்பிடித்து ஒன்றுமாய்
இரு பெண்கள்.

என் கண்களுக்குத் தெரிகிற
அக்குழந்தைகளின் அம்மாவுக்கு
மூத்த மகளைவிட
ஓரிரண்டு வயதே
அதிகமிருக்கும்.

36 W

36 W- வில்
எனது இருக் கை.
சன்னலுக்கு வெளியே
மாறும்
நிலக்காட்சிகள்..
மனிதர்கள்,பொழுதுகள்..

யார் சொல்வது?
ஒரே இடத்தில்
அமர்ந்திருக்கிறேனென்று

Comments

அழகான கவிதைகள் .. வாழ்த்துக்கள்
anujanya said…
ஏற்கெனவே அவர் வலைப்பூவில் படித்தது எனினும், அருமையான கவிதைகள். வாழ்த்துக்கள் முத்துவேல்.

அனுஜன்யா
சிறுமிகள் கவிதை எனக்கு பிடித்திருந்தது
சிறுமிகள் கவிதை எனக்கு பிடித்திருந்தது

Popular posts from this blog