Skip to main content

Posts

Showing posts with the label ப.மதியழகன்

பிழை

நதி வெள்ளம் கடல் நோக்கி என்னவளின் வீட்டின் கதவு திறக்காது தாமதமாய்ப் போனால் மேகங்கள் தூது போகும் என்னவளின் செளக்கியத்தைச் சொல்லாது மழை நீர் பேதம் பார்த்தா மனிதனைத் தொடும் பயணம் இரவுகளைத் தொலைக்கும் பிரிவு வரத்தை யார் தான் வேண்டுவார்கள் வெண்மேகம் கரைந்தோடும் நினைவுப் போரலைகள் விண்ணைத் தொடும் நெஞ்சம் நிழலாடுகிறது நிழல்கள் கூட உன்னைப் போலவே தெரிகிறது எழுதுகோலில் மை இருக்கிறது கவிதை எதிரில் உட்கார்ந்திருக்கிறது.

பட்டியல்

பாதையில் கிடந்த கருவேல முள்ளை ஓரத்தில் எடுத்துப் போடுகிறேன் புட்டத்தை வாலால் மறைத்தபடி ஒரு நாய் என்னைக் கடந்து செல்கிறது மாங்கிளைகளை வெட்டியாகிவிட்டது இனி எந்த மரக்கிளையில் கிளிகள் வந்தமரும் மேகங்கள் எங்கே சென்றன நடவு செய்பவர்களை வெயிலில் காயவிட்டு மாடுகள் தின்பதற்காகவாவது உதவட்டும் இந்த சுவரொட்டிகள் அக்கரைக்கு நீந்திச் செல்ல நீச்சல் மட்டும் தெரிந்திருந்தால் போதாது எப்போதாவது செல்லும் விமானத்தை வேடிக்கைப் பார்க்க சொல்லியாத் தரவேண்டும் காலம் முடிந்து குருக்கள் கிளம்பிவிட்டார் சாமி எங்கே போகும்.

கனவென்று தெரிந்திருந்தால்

கிணற்று நீரில் நிலா பார்ப்போம் தண்ணீர் உனைப் பருகி தாகம் தீர்க்கும் குழலோசை செவியினில் இனிக்கும் கண்களுக்கு நீ எதிரில் வருவது மிகவும் பிடிக்கும் மரத்திலிருந்து விழுந்த பழுத்த இலையொன்று உன் மீது உரசியதால் தீப்பற்றி எரியும் வீதியில் நீ நடந்து வந்தால் வெண்மேகம் குடைபிடிக்கும் வரம் கொடுக்கிறேன் என்று கடவுள் நேற்று உன் வீட்டுக்கு வந்திருந்தாராமே கல்லூரியில் நீ வரலாறு படித்தாய் தெருவெல்லாம் நானல்லவா மரம் நட வேண்டியிருக்கிறது.

உன்மத்தம்

கதவைத் திறந்தேன் முன்பனி முகத்தில் அறைந்தது உறக்கம் தழுவும் தருணம் யாருக்கு இங்கே தெரியும் கதவைத் திறந்தே வைத்திருங்கள் எந்த உருவத்திலும் இறைவன் வரலாம் சில சமயம் பார்க்க நேர்ந்துவிடுகிறது அம்மாவின் முகத்தை பொட்டில்லாமல் இன்று ஒரே நிறத்தில் உடையணிந்து வந்திருக்கிறோம் எதேச்சையாக நேர்வது தான் என்றாலும் மனதில் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறது விழுந்த மரத்தில் இருந்தது வெறுமையான குருவிக் கூடு வழிதவறிய யானைக் கூட்டம் வாழைத் தோட்டத்தை துவம்சம் செய்தது கார்காலத்தில் மனதில் ஏனோ ஈரப்பதம் வாழ்க்கைக் குறிப்பேட்டில் உங்களுடைய வாசகத்தை நீங்கள் தான் எழுத வேண்டும்.

வரையறை

மழை விடாமல் பெய்தது பகல் இருள் கவிந்திருந்தது அலுவலகத்திற்கு தாமதமாய் போனால் நந்தனைப் போல் வெளியே நிற்கவைத்து விடுவார்கள் சூரல் நாற்காலியில் அவர் அமர்ந்திருந்தார் நெல் மணிகளைக் கொறிக்கும் மைனாக்களைப் பார்த்தபடி புத்தி பேதலித்தவர்கள் எல்லாம் ஏன் ஒரே இடத்தை வெறித்துப் பார்க்கிறார்கள் மனிதர்களோடு அளவளாவ விரும்பாதவரைப் போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார் துஷ்டி கேட்க இப்போதெல்லாம் அவர் எவருடைய வீட்டிற்கும் செல்வதில்லை இப்போது எங்கோ கிளம்பிக் கொண்டிருக்கிறார் துக்கம் நிகழாத வீட்டிலிருந்து ஒரு பிடி மண்ணை அள்ளி வர கிளம்புகிறாரோ என்னவோ.

உன்னிடம் எப்படிச் சொல்வது

கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இல்லாமல் போய்விடுமா தூர் வாரப்படும் கிணற்றிலிருந்து எடுக்கப்படும் பொருட்களைக் காண உனக்கு ஆவலாய் இருக்காதா புள்ளிகள் மட்டுமே அழகிய கோலமாகிவிடுமா வானம் எழுதும் ஓவியக் கவிதை தானே வானவில் காற்று நிரப்பப்பட்ட பலூன்களைக் கண்டால் குழந்தைமை உடைந்து வெளிவருவதில்லையா கருணை இல்லங்களுக்கு உதவிடும் போது நமது இறைமை கொஞ்சமாவது வெளிப்படுவதில்லையா ஒரு குழந்தை வந்து உன்னை அம்மா என்றழைத்தால் உனக்கு கோபிக்கத் தோன்றுமா மிக அரிதாகவே ஜோக்குகள் சொல்கிறேன் சிரிக்க மாட்டாயா.

தசாவதாரம்

அலைகள் ஒன்றையொன்று துரத்தி விளையாடுகிறது குளத்தில் சலனம் எறிந்த கல் நீரில் அமிழும் கோயில் நகரத்தில் கடவுளுக்கு இடமில்லை விபத்து நடந்த பகுதியில் வாகனங்கள் விரையும் வேகத்தைக் குறைக்காமல் வாழ்க்கை ரகசியம் ஜாதகக் கட்டத்தில் தெரியுமென்றால் ஜோதிடக்காரன் அன்னாடங்காச்சியாக இருப்பதேன் ஈரம் இல்லாத மனிதர்களால் தான் உலகம் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது ஆளுக்கேற்றபடி வேஷம் போடத் தெரியாதவன் தேசாந்திரியாகத் திரிய வேண்டியது தான்.

கல்லறை வாசகம்

சாலையின் இருபுறமும் உள்ள பூக்கள் பேசிக்கொண்டன அவள் செளந்தர்யத்தில் மயங்காத ஆடவர்களே இல்லை என்றது முதல் பூ டாலடிக்கும் தோலுக்கு உள்ளே இருப்பது ரத்தமும், சதையும் தான் என்றது இரண்டாம் பூ எனக்கு மட்டும் உருமாறும் வித்தை தெரிந்தால் அவள் அணியும் காலணியாக மாறி காலடியிலேயே ஆயுள் முழுதும் கிடப்பேன் என்றது முதல் பூ அவள் இறந்தால் இந்தப் பாதையின் வழியாகத்தான் தூக்கி வருவார்கள் என்றது இரண்டாம் பூ பேரழகிகளை சாவு நெருங்குவதில்லை என்றது முதல் பூ மண் யாரையும் ருசி பார்க்காமல் விட்டு வைத்ததில்லை என்றது இரண்டாம் பூ.

ஒரு மழை நாள்

கார்மேக ஊர்வலத்தைக் கண்டு மயில் தோகை விரிக்கும் பூமியை குளிரச் செய்ய வானம் கருணை கொள்ளும் மரங்கள் தான் செய்த தவங்கள் வீண்போகவில்லையென மெய்சிலிர்க்கும் குடை மனிதர்களுக்கு மூன்றாவது கையாகும் காகிதக் கப்பல்கள் கணித சமன்பாடுகளைச் சுமந்து செல்லும் கொடியில் காயும் துணிகளெல்லாம் எஜமானியம்மாவை கூவி அழைக்கும் ஆடுகள் மே என்று கத்தியபடி கொட்டிலுக்கு ஓட்டமெடுக்கும் தேகம் நனையச் செல்லும் தேவதையை கண்கள் வெறித்துப் பார்க்கும்.

பிரயோகம்

                                                                                                                                  பாதி தூரம் வந்த பிறகு தான் தெரிந்தது அதல பாதாளம் அதற்கு மேல் ஒன்றுமில்லை தலை நோவ மண்டையிடி எதற்குத் தண்டனையோ உடல் நீலம் பாரித்தது ஈசன் கழுத்திலுள்ள பாம்பு தீண்டிற்றோ பேச்சு சாதுர்யத்துடன் தான் ஆரம்பிக்கிறது ...

வருகை

பழுத்த இலைகள் மண்ணில் உதிர்கின்றன இன்று காலையிலேயே வெயில் கொளுத்தத் துவங்கிவிட்டது ரிடையர்டு ஆன பின்பு சூரல் நாற்காலி தானே கதி ஆளரவமற்ற வீதியில் காற்று அலைகிறது நேற்று நடமாடியவர்கள் இன்று காணாமல் போகும்போது மரணம் என்னைப் பார்த்து பல் இளிக்கிறது அந்தி வேளையில் கண்களை மூடி பறவைகளின் சப்தத்தை கேட்கும் போது மனம் இலேசாகிறது தூரத்தில் யார் வருவது இந்தக் கண்ணாடியை எங்கே வைத்தேன் ஓ பரந்தாமனா - எங்கிருந்து என்று கேட்டேன் காதோரம் வந்து சொன்னான் கைலாயம் என்று.

வரும்போகும்

முற்றத்தில் அடிக்கும் வெயிலும் பெய்யும் மழையும் இப்போது இல்லை ஓட்டிலிருந்து தேள் வந்து விழும் என்ற பயமுமில்லை குளியலறையை வசிப்பிடமாக்கிக் கொண்ட கரப்பான்பூச்சியைக் காணவில்லை வாங்கி வைத்த மாம்பழங்களை குதறிச் செல்லும் பெருச்சாளிகளின் தொல்லை இல்லை மழை பெய்தால் ஆங்காங்கே ஒழுகும் என்ற சிரமமில்லை வெளவாலுக்கு அடைக்கலம் தரும் இடமாக இல்லம் இனி இருக்கப்போவதில்லை இனி நெஞ்சை நிமிர்த்தி நடக்கலாம் எங்கள் வீடு ஓட்டு வீடு இல்லை மாடி வீடென்று.

கதிரொளி

மழையில் நனைந்த பறவை சிறகை உலர்த்தியது மின்னல் நரம்புகள் வானை வெளிச்சமிட்டுக் காட்டியது இடியோசை ஆகாயம் இடிந்து விழுவதைப் போல பயங்காட்டியது இயற்கை வரைந்த ஏழு வண்ண ஓவியத்தை ஜனக்கூட்டம் ரசித்தது மரங்களின் பாஷை பறவைக்கு புரிந்தது வீதியில் நடப்பவர்கள் மழைக்கெதிராய் கறுப்புக் குடை பிடித்தார்கள் மெல்ல பரிதி எட்டிப் பார்த்ததும் சகஜ நிலை திரும்பியது அடுத்த மழைக்கு முன்னே இரையைத் தேட எறும்பு சாரை சாரையாய் ஊர்ந்து சென்றது.

மாற்றம்

நிலைக்கண்ணாடி முன்பு தான் தொலைத்த இளமையைத் தேடுகிறார்கள் தன் பிம்பம் தான் இது என்று ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் கடவுளால் பரிசளிக்கப்பட்ட பேரழகை சாத்தான் களவாடிவிட்டதாக எண்ணுகிறார்கள் வயதைக் காட்டிக் கொடுக்கும் நரைத்த முடியை டை அடித்து மறைக்கிறார்கள் பருவத்தில் மினுமினுத்த மேனியில் சுருக்கம் விழுவதை பார்த்து பதறுகிறார்கள் இன்று எந்தக் கண்களுமே ஆச்சர்யத்துடன் தன் எழிலை ஏறிட்டுப் பார்ப்பதில்லை என்பதை எண்ணும் போது நிலைக்கண்ணாடி முன்பு நின்று கேவி அழுகிறார்கள்.

தீற்றல்

நிலைக்கண்ணாடி பிரதிபலித்த முதல் நரை மரணம் விரிக்கும் வலை மழை நாள் சூரியனைக் காணோம் இரவு வெகு நீளம் கழுகின் நிழலைக் கண்டு அஞ்சும் கோழிக் குஞ்சுகள் மணி அடித்தாகிவிட்டது தண்ணீர் போத்தல் வாங்கப் போனவர் இன்னும் வரவில்லை வார இதழ்களை கடைசி பக்கத்திலிருந்து படிப்பது பழக்கமாகிவிட்டது சூரல் நாற்காலியில் நாளிதழ், வானொலி கேட்பாரற்றுக் கிடக்கிறது முதியவரை மரணஅலை அடித்துச் சென்றுவிட்டது தெரு விளக்குகள் எரியவில்லை அந்தகனைப் போல் இருளில் துழாவித் துழாவி வீடு வந்து சேர்ந்தேன்.

யாக்கை

  ஆழ்கடல் அமைதியாக இருக்கும் கூட்டம் கடலலையை கண்டு ரசிக்கும் மேகக் கூட்டம் படையெடுக்கும் வானம்பாடி பாட்டுப் படிக்கும் காட்டுப் பாதையில் பூத்த மலர் பறிக்க எவருமில்லை வைகறை மூடுபனி உறக்கம் கலையவில்லை திருத்தேர் வீதிஉலா பலூன் வியாபாரியை மொய்க்கும் சிறார்கள் தீபாவளி நள்ளிரவு வெடிச்சத்தம் ஓயவில்லை தக்கை அசைகிறது தூண்டிற்புழுவுக்கு ஆசைப்பட்ட மீன் பாத்திரத்தில் துள்ளுகிறது.                                          

சில்லறை

கடிகார முள் எதை துரத்துகிறது உச்சி வெயில் சாலை வெறிச்சோடியது வானில் ஒரு பட்டம் நிலவு காய்ந்தது என்னன்னமோ யோசனைகள் விடிந்துவிட்டது பைகளைத் துழாவினேன் சில்லறை இல்லை என் அதிர்ஷ்டம் வீட்டுக்குத் திரும்பினேன் கதவு பூட்டப்பட்டிருந்தது நேற்று திறந்திருந்ததே குடை விரிக்க யோசிக்கிறேன் நனைந்தால் ஒன்றும் கரைந்துவிட மாட்டேன் இன்று கடிதம் வரவில்லை என்று தான் வந்தது நாய் துரத்தியது தப்பினால் போதுமென்று ஏதோவொரு வீட்டில் நுழைந்தேன் நாய்கள் ஜாக்கிரதை என்ற போர்டை கவனிக்காமல்.

ஓயாத அலைகள்

நீரலை அடியில் நீந்தும் மீன்கள் எப்போது வலையில் வேடன் குறி தப்பியது கிளி அசைவின்றி மரம் ஓயாத அலைகள் நீல வானம் படகின் பயணம் நிழல் வளரும் தேயும் தண்ணீரில் முகம் தெரியும் மின்விசிறி சுழல்கிறது விளக்கு எரிகிறது படுக்கையில் யாருமில்லை சாலையில் ரோஜா சருகாகும் வரை பிணத்தின் வாடை நடைபாதையில் பணமுடிப்பு கையேந்தும் குருட்டுப் பிச்சைக்காரன் கும்மிருட்டு நகரும் நட்சத்திரம் மின்மினிப்பூச்சி காட்டுப் பாதை மேடு பள்ளம் விநோத ஒலி.

கிளிஞ்சல்கள்

மின்விசிறி புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுகிறது கோடுகள் தான் ஓவியமாகிறது நதியின் போக்கிலே சடலம் மிதக்கிறது சுவரொட்டி மனிதர்களுக்கா மாடுகளுக்கா தண்ணீர்க் குழாயிலிருந்து தவளை வெளிவந்தது வானம் கறுத்தது காற்று கலைத்தது ரசமிழந்த கண்ணாடி குப்பைத் தொட்டியில் சாக்கடையில் மிதக்கிறது ரப்பர் பந்து காகம் கரைந்தது வாழை இலை நறுக்கினேன் விருந்தினர்களை எதிர்பார்த்து கடலைப் பார்த்ததற்கு சாட்சியாக இந்தக் கிளிஞ்சல்கள்.

பின்எப்போதும்

எண்ணத்திற்கும் செயலுக்கும் இடைப்பட்ட தருணத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன் கண்ணீர் நதியில் அலுப்பு தீர குளித்துக் கொண்டிருந்தேன் மயானத்தில் சடலம் எரிவதை பார்த்துக் கொண்டிருந்தேன் மொட்டுக்கள் இதழ் விரிப்பதை ரசித்துக் கொண்டிருந்தேன் வானம்பாடி கானம் பாடுவதை கேட்டுக் கொண்டிருந்தேன் அதிசயமாக பெய்த மழையில் தொப்பலாக நனைந்து கொண்டிருந்தேன் கூண்டில் அடைத்து பறவையின் சுதந்திரத்தை பறித்தவர் மீது கோபம் கொண்டிருந்தேன் அலையோசையில் மெய்மறந்து தன்னிலையை இழந்து கொண்டிருந்தேன் வெளி மட்டுமே நிலையானது என எண்ணிக்கொண்டே வானத்தில் சிறகின்றி பறந்து கொண்டிருந்தேன்.