Skip to main content

உன்னிடம் எப்படிச் சொல்வது



கண்ணை மூடிக்கொண்டால்
உலகம் இல்லாமல் போய்விடுமா
தூர் வாரப்படும் கிணற்றிலிருந்து
எடுக்கப்படும் பொருட்களைக் காண
உனக்கு ஆவலாய் இருக்காதா
புள்ளிகள் மட்டுமே
அழகிய கோலமாகிவிடுமா
வானம் எழுதும்
ஓவியக் கவிதை தானே
வானவில்
காற்று நிரப்பப்பட்ட
பலூன்களைக் கண்டால்
குழந்தைமை உடைந்து
வெளிவருவதில்லையா
கருணை இல்லங்களுக்கு
உதவிடும் போது
நமது இறைமை கொஞ்சமாவது
வெளிப்படுவதில்லையா
ஒரு குழந்தை வந்து
உன்னை அம்மா என்றழைத்தால்
உனக்கு கோபிக்கத் தோன்றுமா
மிக அரிதாகவே
ஜோக்குகள் சொல்கிறேன்
சிரிக்க மாட்டாயா.


Comments