Skip to main content

சிக்கிம் –டாகுமெண்டரி




சத்யஜித்ராய் வாழ்ந்த காலத்தில் அவரால் முடிக்கப்பட்ட ஒரு படம் திரையிடப்படாமல் இருந்ததென்றால் அது சிக்கிம் டாகுமெண்டரி படம் மட்டுமே. அது மட்டுமல்ல அந்தப் படம் தீவிரமாக தணிக்கைக்கு உள்ளாகி தடையும் செய்யப்பட்டது. சிக்கிம் 1971ம் வருடம் எடுக்கப்பட்டது.
 அது திரையிடப்படாமலேயே பலகாலம் இருந்ததால் அது தொலைந்துவிட்டதாயும் கருதப்பட்டது. திடிரென 2003ல் அதன் நல்ல பிரதி பிரிட்டிஷ் பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் பத்திரமாக இருப்பதாக நம்பகமான தகவல் கிடைத்தது. அந்தப் படம் சென்ற வருடம் தான் பார்வைக்கு வந்தது.தற்சமயம் அது இணைய தளத்திலும் கிடைக்கிறது. இதன் மூலம் அவரது அனைத்துப் படைப்புகளும் மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

ஏன் இந்தப் படத்திற்கு இத்தனை எதிர்ப்புகள் என்பதை படத்தைப் பார்த்து எவராலும் புரிந்து கொள்ள இயலாது. ஒரு வேளை இந்தப் படம் சிக்கிம் முடியாட்சியின் கீழ் இருந்தபொழுது எடுத்த ஒன்று என்பதால் இது அந்த மக்களை இந்திய இணைப்புக்கெதிராக தூண்டிவிடும் என்று அச்சமுற வைத்ததா என்றால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இதில் இல்லை . அதை எடுத்த இயக்குனர் ராய் தனது படங்களில் எத்தகைய பிரச்சாரத்திற்கும் தீவிர எண்ணங்களுக்கும் இடம் கொடாதவர் என்பதும் உலகறிந்த ஒன்று. மேலும் சிக்கிம் மக்களின் பகிரங்க ஒப்புதல் பெற்ற பின்னரே அது இந்தியாவுடன் இணைந்தது.

சிக்கிம்டாகுமெண்டரி மலை வாழ் மக்களின் அமைதியான வாழ்க்கையை எடுத்துரைக்கிறது. படம் அழகான காட்சிகளுடன் துவங்குகிறது. இமயமலையின் மூன்றாம் பெரிய சிகரமான கஞ்சன் ஜங்காவின் அரவணைப்பிலுள்ள  மலை பூமி சிக்கிம். ஆனால் அதை சுலபமாக வரைபடத்தில் பார்த்து தெரிந்து கொள்ள முடியாது என்று ராய் வர்ணிக்கிறார் . அதன் அப்போதைய அரசியல் பூகோள எல்லைகளாக தெற்கே-மேற்கு வங்காளம்,மேற்கே நேபாளம் , வடக்காயும் வடகிழக்காயும் திபெத், கிழக்காக பூடான் ஆகியன அமைந்துள்ளன. வடக்கிலிருந்து தெற்காக எழுபது மைல்களும் கிழக்கிலிருந்து மேற்காக நாற்பது மைல்களும் விஸ்தீரணம் கொண்ட நாடு சிக்கிம்.

சிக்கிம் நாட்டிற்கே உரித்தான தாவரங்கள்  அறிமுகப்படுத்தப்படுகின்றன. கோதுமை, பார்லி ஆகியவைதான் முக்கிய விவசாயப் பொருட்கள்.திபெத்தியர்கள் புராதனக் குடிமக்கள். நேபாளத்திலிருந்து இங்கு குடியேறியவர்கள்  இந்து சமயத்தினர். அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள். ஆனால் அரச சமயம் மஹாயான பெளத்தம். கிறித்துவர்களும் சிறுபான்மையினராக உள்ளனர்.எல்லோரும் தங்களுடைய அடையாங்களுடன் கூடி வாழ்வது ஒரு தனிச்சிறப்பு.
ஒவ்வொரு  ஞாயிறு காலையிலும் சந்தை கூடுகிறது. மக்கள் தங்களது பொருட்களை அங்கு கொண்டுவந்து விற்கிறார்கள். அவர்கள் கடைபோடுவதை அனுமதிக்க  ஒரு சிறிய காகித சீட்டு வழங்கப்படுகிறது.பெரிய சந்தை சிக்கிமின் தலைநகரமான காங்டாக்கில் நடைபெறுகிறது.  அங்கே இந்தியர்களையும் காணமுடிகிறது.சலசலப்பில்லாத வாழ்க்கை முறையை மக்கள் கொண்டிருப்பதால் அதன் இயற்கை அழகை ரசிக்க சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அதன் மூலம் கிடைக்கும் வருமானம் கணிசமானது. அரசாங்கம் தனது வருவாயில் இருபத்தைந்து சதவிகிதத்தை மக்களின் கல்விக்காக செலவிடுகிறது. படத்தை தயாரித்த சோக்யால் (அரசர்)மக்களுடன் எளிமையாகப் பழகுவதாக படம் காட்டுகிறது. ஆனால் மக்களின் அதிருப்திக்கு அவர் ஆளானவர் என்பது சரித்திர தகவல். அவர் தனது முதல் மனைவி இறந்த பிறகு இரண்டாம் மனைவியாக ஹோப் குக் என்கிற அமெரிக்க பெண்ணை மணக்கிறார். அச்சமயம் சிக்கிம் செய்திகளில் கூடுதலாக அடிபடுகிறது.
ஆண்டு இறுதியில் ஒரு பெரும் விழா நடைபெறுகிறது . முகமூடி அணிந்த கலைஞர்கள்  அவர்கள் நாட்டு இசைக்கேற்ப நடனமாடுகிறார்கள். புதிய வருடம் பிறந்தவுடன் முந்தைய வருடத்தின் தீமைகள் அழிய ஒரு கூடாரம் கொளுத்தப்படுகிறது.
ஐம்பத்து ஐந்து நிமிட நேரப் படம் வண்ணத்தில் உருவாகியுள்ளது.அந்த காலத்தில் கதைப்படங்களும் கருப்பு வெள்ளையில்தான் பெரும்பாலும் தயாரிக்கப்பட்டன. இசை, வர்ணனை,இயக்கம் எல்லாம் ராய். படத்தொகுப்பு அவர் கட்டுப்பாட்டில் இல்லை என்று சொல்லப்பட்டது. படம் பார்ப்பவர்களுக்கு அது எளிதாகப் புலனாகிறது. ஷாட்டுகள்  ஒன்றுடன் ஒன்று லயமின்றி அவசர கதியில் இணைவதாய்  உள்ளன. படம் முழுவதிலும் மக்கள் கேமராவைப் பார்த்தபடி உள்ளனர். அது இயற்கையாகக் இருந்தாலும் அவர்களது வாழ்க்கை முறையை அதன் கதியில் நம்மால் காணமுடிவதில்லை என்கிற உணர்வும் ஏற்படுகிறது. சடங்குகளில் ஈடுபடும்போதுதான் அவர்கள் தங்கள் வேலைகளை பார்க்கிறார்கள். ராயின் முதல்படமான ரவீந்திரநாத் தாகூரைப் போலவே இதிலும் நேர்காணல்கள் எதுவுமில்லை. குறைகள் பல இருந்தாலும் பின்னால் வரும் சந்ததியினருக்கு அன்றைய சிக்கிம் மக்களின் வாழ்க்கை பற்றிய ஒரே ஆவணப்படம் என்கிற வகையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

சிக்கிம் –டாகுமெண்டரி





                        

Comments