Skip to main content

அழகியசிங்கரின் மூன்று கவிதைகள்

 

 1.எழுதுபவனின் பரிதாப நிலை

 

குடும்பத்தில்

யாராவது

ஒருவராவது

படிப்பார்களா என்று எதிர்பார்த்தேன்

பெரிய

ஏமாற்றம்

அவர்கள் முன் நான் எழுதிய

தாள்கள் பிரிக்கப்படாமலிருந்தன

 

நண்பர்கள்

கண்ணைக் கசக்கி

வாசிப்பார்கள் என்று நம்பினேன்

ஓட ஓட விரட்டுகிறார்கள்

 

வாசகர்கள் வரவேற்பார்கள் என்று நம்பினேன்

அவர்கள் யாரும் கண்ணில் தட்டுப்படவில்லை

 

நானே எடுத்து வைத்துக்கொண்டு

நானே படிக்கிறேன்

படிக்கிறேன் பரவசம்

அடைகிறேன்.

 

2.       காதல் வாழ்க


 

கையில் வாளை எடுங்கள்

சுழற்றுங்கள்

ஜாதி சண்டைகள் ஒழியட்டுமென்று

 

ஏற்றத் தாழ்வு தூய

காதலுக்கு முன் எங்கே

 

இன்றையத் தேவை

அன்பின் பெரும் வெள்ளம்

 

நம்மிடம் ஆற்றல்

இருக்கிறது

நிமிர்ந்து நிற்க

 

பற்று இருக்கிறது

காதல் கொள்ள

 

காதல் பரவசம் கொள்ள

பெண்ணும் தட்டுப் படுகிறாள்

 

வெற்றிப்  பரவசத்தில்

மூழ்கித் தவியுங்கள

 

காதல் வாழ்க காதல் வாழ்க வென்று                  

கோஷம் போடுங்கள்.

 

 

3.       மற்றவர்கள்தான் சொல்வார்கள்

 

              உங்களிடம் ஒரு வார்த்தை சொல்கிறேன்

              நீங்கள் கவிதை எழுதுபவரா?

              உங்களுக்காக பச்சாதபப்படுகிறேன்

              நீங்கள் என்னமோ நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்

              நீங்கள் எழுதுவதுதான் கவிதை என்று.

 

              உண்மையில் அப்படி இல்லை

              நீங்கள் மட்டுமல்ல பலரும் கவிதைகள்

              என்ற பெயரில் எழுதுவதெல்லாம் கவிதை இல்லை

              அப்படியென்றால்

              எது கவிதை

              அது உங்களுக்கும் தெரியாது இதை எழுதும்

              எனக்கும் தெரியாது

 

              ஆனால்

              நீங்கள் எழுதிக்கொண்டே போங்கள்

              நீங்கள் எழுதுவதெல்லாம் கவிதையில்லை”  “

              என்ற நினைப்போடு எழுதிக்கொண்டு போங்கள்

              ஒரு தருணத்தில்

              தானாகவே கவிதை வந்து விடும்

             

              அப்போது

              நீங்கள் சொல்ல மாட்டீர்கள்

              மற்றவர்கள்தான் சொல்வார்கள்

              நீங்கள்தான் கவிதைக எழுதுகிறீர்களென்று

              என்ன சரியா?

(தமிழின் முதல் இணைய திண்ணையில் வெளிவந்த கவிதைகள் வாரப்பத்திரிகை 21 நவம்பர் 2021)


 

 

 

Comments