Skip to main content

துளி - 54 பழையப் புத்தகங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்..


..


அழகியசிங்கர்




என்னிடம் பழையப் புத்தகங்கள் கைவசம் இருக்கின்றன.  ஓரளவு இப் புத்தகங்கள் மோசமான நிலையில்தான் இருக்கின்றன.  சில புத்தகங்களுக்கு அட்டை கிழிந்திருக்கும்.  நான் அதுமாதிரியான சில புத்தகங்களை பைன்ட் செய்திருப்பேன்.  அட்டை இல்லாமல்.  அப்படி ஒரு புத்தகம் ஆல்பெர் காம்யு வின் மொழிபெயர்ப்புப் புத்தகம். பிரஞ்சிலிருந்து தமிழுக்குப் மொழி பெயர்த்தவர் வெ ஸ்ரீராம்.
1980ஆம் ஆண்டு இந்தப் புத்தகம் க்ரியா மூலம் அச்சாகி உள்ளது.  கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் என்னுடன் இப் புத்தகம் உள்ளது.  அப்போது இதன் விலை ரூ.15.  இப்போது எடுத்துப் படித்தாலும் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தைத் தூண்டும் புத்தகம்.  
இப் புத்தகத்தை தமிழில் வெளியிட அனுமதி அளித்த காலிமார் பதிப்பகத்திற்கும் திருமதி காம்யு அவர்களுக்கும் நன்றி என்று எழுதி உள்ளார்கள். 
அந்நியன் என்ற இந் நாவல் 1942 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.  இன்றைய மனிதனின் மனசாட்சி குறித்த பிரச்சினைகளைத் தெளிவான நேர்மையுடன் விளக்கியிருக்கும் இவரது இலக்கியப் படைப்புகளுக்காக இவருக்கு 1957-ம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.  1960-ம்ஆண்டு ஜனவரி 4-ம்தேதி, ஒரு கார் விபத்தில் ஆல்பெர் காம்யு இறந்துவிட்டார். 
இந் நாவலின் தனித்தன்மையாக நான் கருதுவது அப்படியே விவரிப்பது.  சலாமானோ என்ற முதியவர் ஒரு நாயை வளர்த்து வருகிறார்.  அல்பெர் காம்யு இதை விவிரித்துக்கொண்டு போவதை இங்கு தர விரும்புகிறேன்.  

 ‘இருட்டில் மாடிப்படிகள் ஏறியதும், குறட்டில் எனக்கு அடுத்த குடியிருப்பில் இருந்த சலாமானோ என்ற முதியவரின் மேல் முட்டிக் கொண்டேன். அவர் தம்முடைய நாயுடன் இறங்கி வந்து கொண்டிருந்தார். எட்டு வருடங்களாக நான் அவர்களை ஒன்றாகப் பார்க் கிறேன். அந்த ஸ்பானியல் நாய்க்கு ஒரு விதச் செந்நிறச் சரும நோய் என்று நினைக்கிறேன். அதனால் அது தன் ரோமங்களை இழந்து, உடல் முழுவதும் தழும்புகளும், பழுப்பு நிறத் தடிப்புகளுமாகக் காணப் பட்டது. தனியாக அந்தச் சிறிய அறையில் அதனுடன் வாழ்ந்து வந்து கொண்டிருக்கும் பழக்க தோஷத் தினாலோ என்னவோ அம் முதியவர் சலாமானோ அக் கிழட்டு நாயைப் போலவே தோற்றமளித்தார். அவர் முகத்திலும் சிவப்பு நிறத் தடிப்புகள், ஆங்காங்கே காணப்பட்ட செம்பட்டை ரோமங்கள். அந்த நாயோ தன் எஜமானரின் கூன் விழுந்த தோற்றத்தைப் பெற்றிருந்தது: தாழ்ந்து வளைந்த கழுத்து, முன் தள் ளிய நாசி. ஒரே இனத்தைச் சேர்ந்திருந்தாலும், ஒரு வரையருவர் வெறுப்பது போல் தோற்றமளித் தனர். காலை பதினோரு மணிக்கும் மாலை ஆறுமணி அளவிலும் தினசரி இரு முறை அம்முதியவர் அந் நாயை உலாவ இட்டுச் செல்வார். எட்டாண்டுகளாக அவர்களது அந்நிகழ்ச்சி நிரல் மாறவே இல்லை. லியோன் சாலை நெடுகிலும் அம்முதியவர் தடுமாறும் வகையில் அந்த நாய் அவரை இழுத்துச் செல்வதைப் பார்க்கலாம். அப்போதெல்லாம் அவர் அதை அடித் துத் திட்டுவார். அது பயந்து, போய், தரையோடு ஒட்டிக்கொள்ளும். இனி அவர் தான் அதை இழுத்துச் செல்ல வேண்டும். சற்று நேரத்தில் அந்த நாய் அச் சம்பவத்தை மறந்துவிட்டு மறுபடியும் அவரை இழுத் துச் செல்ல, அவர் மறுபடியும் அதை அடித்துத் திட்டுவார். இறுதியில் இருவரும் நடைபாதையில் அப்படியே நின்று ஒருவரையருவர் பார்த்த வண் ணம் இருப்பார்கள்-நாய் பயத்துடனும், அவர் வெறுப்புடனும். இது ஒரு அன்றாட நிகழ்ச்சி. அந்த நாய் சிறு நீர் கழிக்க விரும்பும்போது, அவர் பொறுத் திராமல் அதை இழுத்துச் செல்வார். அது சிறு சிறு சொட்டுகளாக ஒரு நீண்ட கோடு இழுத்தவாறே செல்லும். எப்போதாவது அது அறையிலேயே சிறு நீர் கழித்துவிட்டு அவரிடம் உதை வாங்கும்.’



Comments