Skip to main content

க நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....2

க.நாசுவின் இலக்கிய முதிர்ச்சியும் விமர்சனப் பாங்கும்

நகுலன்

க.நா.சுவினால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். அவருடன் எனக்குச் சுமார் ஒரு பதினைந்து வருஷப் பழக்கமுண்டு. அவருடன் நான் உள்ளங்கலந்து உறவு கொண்ட நாட்களை இப்பொழுது நினைக்கும் பொழுது இதை எழுதும் இந்தப் பொழுதில் கூட எனக்கு ஒரு மன நிறைவு உண்டாகிறது. எழுத்தாளர் என்ற நிலையில் அன்றி ஒரு தனி மனிதன் என்ற நிலையிலும் நான் அவரை மதிக்கிறேன். நவீன தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு அவர் செய்திருக்கும் சாதனை - நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், நாடகம் என்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்கது. இனி இக்கட்டுரையில் அவர் இலக்கிய முதிர்ச்சியைப் பற்றியும் விமர்சனப் பாங்கு பற்றியும் ஒரு பரவலான பரிசீலனை செய்வதே என் நோக்கம்.

''எதற்காக எழுதுகிறேன்?'' என்ற கட்டுரையில் க.நா.சு கீழ் வருமாறு எழுதியிருக்கிறார். ''உலகத்தையும், உலகத்தில் நடப்பதையும் காட்சியாகக் கண்டு, சொந்த விஷயங்களையும் கூட ஈடுபாடில்லாமல், பற்றின்மையுடன் சாட்சி பூதமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பது வேதாந்தத்தின் லட்சியம். காண்பதையும், நடப்பதையும் உண்மையென்று நம்பி விடக்கூடாது என்பது அதன் நோக்கு. இந்த லட்சியம் கலை பற்றி, முக்கியமாக எழுத்துக் கலை பற்றி, எத்தனை தூரம் உண்மை என்பது சிந்தித்துப் பார்த்தால் தெரியவரும். மேலும் அவர் சொல்கிறார்:"என் ஆன்மீகமான ஆனந்தத்தின் விளைவாக எழுதப்பட்ட என் கதைகளையோ, கவிதைகளையோ, நாடகங்களையோ, நாவல்களையோ யார் அங்கீகரிக்க மறுத்தாலும், அதனால் சமுதாயத்திற்கோ மற்றவர்களுக்கோ ஒரு லாபமும் இல்லை என்று யார் ஒதுக்கி விட்டாலும் எனக்கு இதைவிடச் சிறந்த அனுபவம் வேறில்லை - வேறு அவசியம் என்றும் நான் நினைக்கவில்லை.''

நான் தெரிந்து பழகின தமிழ் எழுத்தாளர்களில் அவரைப்போல பரவலாகவும் ஆழமாக, ஆம், ஆழமாகவும் ரஸனை அடிப்படையில் உலக இலக்கியத்தில் ஒரு பரிச்சயம் உடையவரை நான் காணவில்லை. இங்கு ஒன்று சொல்ல வேண்டும். அவர் எதைப் படித்தாலும் அதைப் பற்றித் தீர்க்கமாகச் சிந்தித்துத் தனக்கு என்று ஒரு தனிப் பார்வையை வகுத்துக் கொள்கிறார்.

''இலக்கிய வட்டம்'' 17.01.1964 இதழில் ''உலக இலக்கியம் - 2'' என்ற தலையங்கக் கட்டுரையில் அவர் வருமாறு எழுதுகிறார் : ''நான் எழுதுவதற்கு எதுவும் படிப்பது அவசியமில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது என்று சில ஆசிரியர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன். இது பற்றி இரண்டு அபிப்பிராயங்கள் சொல்லலாம். ஆனால் கலைக்கும் சிருஷ்டிக்கும் படிப்பு உதவுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை...படிக்கப் பயிற்சி செய்து கொள்ளாத இலக்கிய ஆசிரியன் சில சமயம் மட்டமானதையும் உயர்ந்தது என்று எண்ணி ஏமாந்து விடுவான். தன் எழுத்தில் மட்டுமில்லை மற்ற எழுத்திலும் தரம் பார்க்க அவன் அறியாது இருந்து விடுவான். அதற்காக வேணும் படிக்கப் பயிற்சி செய்து கொள்வது இலக்கிய ஆசிரியனுக்கும் நல்லது - மற்றவருக்கும் நல்லது.''

நான் பழகிய பல தமிழ் எழுத்தாளர்கள் - உலக இலக்கியத்தை விட்டுத் தள்ளுங்கள் - தங்கள் படைப்புகளைப் பற்றி ஒரு பரவச நிலையில் பேசுபவர்கள். தமிழிலேயே பிற எழுத்தாளர்களை அநேகமாகப் படிப்பதில்லை. தங்களைத் தாண்டி என்ன இருக்கிறது, இருக்கலாம் என்ற ஒரு போதை. இந்த வகையில் இயங்கும் எழுத்தாளர்களில் ஒவ்வொரு எழுத்தாளனும் ஏதோ ஒரு நல்ல நாவலை எழுதிவிட்டுத் தான் தமிழ் இலக்கியத்தின் சிகரத்தை தொட்டு விட்டதாகத் தான் நினைக்கிறான். க.நா.சு இதற்கு விதிவிலக்கு.

அவருடன் நான் பேசிய தருணங்களில் நான் ஏதாவது மாறான அபிப்பிராயத்தைச் சொன்னால் அதை கவனமாகக் கேட்பார், அதில் சாரம் இருந்தால் ஏற்றுக்கொள்வார். நான் ஏதாவது அசம்பாவிதமாகச் சொன்னால், ''இருக்கலாம். துரைஸ்வாமி. எனக்குச் சரியாகப்படவில்லை,'' என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார். அவருடைய அபிப்பிராயத்தில் இலக்கியப் படைப்பதும் ஒரு தொழில். மற்ற தொழில்களில்போல், இதற்கும் சுயமாக உள்ள ஒரு ஆற்றலைத் தவிரப் படிப்பு, கடினமான உழைப்பு இவை அவசியமென்று நினைக்கிறார். மேலும், அவர் ''இலக்கிய வட்டம்'' 24/4/1964 இதழில் ''இலக்கிய ரஸனை'' என்ற தலையங்கத்தில் வருமாறு எழுதிகிறார். ''இலக்கியத்தில் இன்று உள்ளதை மட்டும் வைத்து ரஸனையோ விமர்சனமோ கிடையாது. பாரம்பரியம், மரபு பூராவையும் வைத்துத்தான் விமர்சனமும், ரஸனையும் தோன்ற முடியும்.''

(இன்னும் வரும்....)

Comments

நன்றி. இது க.நா.சு வை மட்டுமல்லாது ஒரு நல்ல இலக்கிய மதிப்பீடாகவும் இருக்கிறது உங்களது கட்டுரை.
மிக்க அன்புடன்
குமரி எஸ். நீலகண்டன்