Skip to main content

TWO POEMS BY KRISHNAKUMAR

பைத்திய வாழ்க்கை..


காய்ச்சலால் உடம்பு தகிக்கிறது
வெளியில்
மழை முடிவில்லாமல் பெய்கிறது
தகிக்கும் அந்த கேவலமான உடம்போடு
மழையில் சென்று வர வேண்டிய
வாழ்க்கையை வாழ்கிறான் அந்த மனிதன்.
 
வெயில் என்றால் பாலைவன வெயில்
சே, இந்த மஞ்சள் காமாலையின்
மழுங்கிய கண்களோடு
வெயிலில் அலைந்து திரிய வேண்டிய
அற்பமான வாழ்க்கை அவனுடையது.
 
மழைக்கான தனி இடமும், வெயிலுக்கு
ஒரு பிடி நிழலும்
வாய்க்கும்போது
அனுபவிக்க தோதுபடாத பைத்திய வாழ்க்கை
அந்த மனிதனுடையது.
 
==================================================
முதல் கவிதையின் மாற்றுப்பிரதி
=========================================
முதல் கவிதை எல்லோருக்கும்
ஒரே மாதிரியாக அமைந்துவிடுகிறது.
படிமகுறியீடுகளின் பிரக்ஞையற்றது
அந்த கவிதை.
.பிச்சமூர்த்தி முதல் சபரிநாதன்
வரை எவர் சாயலுமற்ற மலட்டுத்தன்மை
அதனுள் ஒளிந்திருக்கும்.
"நேற்றுதானே உன்னை சந்தித்தேன்,
இன்று என் இதயத்துக்குள் எப்படி வந்தாய்?"
என்று அந்த கவிதையை ஆரம்பித்திருப்போம்.
போகட்டும், இப்போது எழுதுவது
ஒரு கவிதையா? சொந்த வரிகளா?
எதுவானாலும் இது அனைவருக்கும் பொதுவான
அம்முதல் கவிதையின் மாற்றுப்பிரதியாக
இருக்கக்கடவது.

Comments