Skip to main content

கிராமீயப் பாடல்கள்



தொகுப்பாசிரியர் : வானமாமலை   


மாரியம்மன் 3


தேசமாளும் முத்தம்மா




    முத்தாரம்மன் தென் பாண்டி நாட்டில் உழவர் பெரு மக்களால் வணங்கப்படும் தெய்வம்.  சில சிற்றூர்களில் இவருக்குப் பெரிய கோவிலும், தேரும் திருவிழாவும் உண்டு.  இவள் பிறப்பு முத்தாரம்மன வில்லுப்பாட்டில் சொல்லப்படுகிறது.  ஏழ் கடலுக்கும், அப்பாலுள்ள, மணி நாகப்புற்றிலுள்ள நாகம் மூன்று முட்டைகளிட்டது.  பார்வதியின் அருளால் முட்டைகளிலிருந்து மூன்று பெண்கள் தோன்றினர்.  அவர்கள் பிரம்ம ராக்குசக்தி, சின்ன முத்தார், பெரிய முத்தார் என்பவர்கள்.  அவர்கள் மூவரும் தவம் செய்து சக்தி முனியின் அருளால் குழந்தைகள் பெற்றார்கள்.  அனைவரையும் அழைத்துக் கொண்டுபோய் கயிலையில் சிவபெருமானை வணங்கினர்.  நாட்டிலுள்ள கொடுமைகளை அழிப்பதற்கு, மூவரும் கொடும் வியாதிகளை வரமாகக் கேட்டார்கள்.  பிரம்ம ராக்கு - சக்திக்குக் குணமாகாத பல நோய்களையும், சின்ன முத்தாருக்கும், பெரிய முத்தாருக்கும், சின்னம்மை, பெரியம்மை என்ற வியாதிகளையும் கயிலையங் கடவுள் வரமாக அளித்தார்.  இவ்வாறு கொடிய நோய்களை உண்டாக்கும் சக்தி பெற்ற மூன்று சகோதரிகளும், தமிழ் நாட்டிலே வந்து குடியேறி கொடியவர்களைத் தண்டிக்க பரமசிவனுடைய வரங்களைப் பயன்படுத்தி வருகிறார்களாம்.

    இப்பொழுது பிரம்ம ராக்கு சக்திக்கு சிற்சில ஊர்களிலேயே கோயில்கள் உள்ளன.  முத்தாரம்மன் தென்பாண்டி நாட்டிலுள்ள ஒவ்வொரு ஊரிலும் கோயில் கொண்டிருக்கிறாள்.  இவள் தீயவர்களைக் கொடு நோயால் தண்டிப்பாள்.  நல்லவர்களை வாழ்த்தி வரம் கொடுப்பாள்.

    பிற்காலத்தில் கன்னடியர், ஆந்திரர் படையெடுப்புகளின் போது தமிழ்நாடு புகுந்த மாரியம்மன் சிற்சில ஊர்களில் இவளோடு ஐக்கியமாகி விட்டாள்.  இவள் பார்வையால் உடலில் முத்துக்கள் ஆயிரக் கணக்கில் தோன்றுவதால் இவளுக்கு ஆயிரத்தாள் என்றும், மாரியோடு கலந்து விட்டதால் முத்து மாரியென்றும், தேசம் முழுவதும் பரவியிருப்பதால் தேச முத்து மாரியென்றும் பல பெயர்கள் வழங்குகின்றன. 

    நடுராத்திரி உற்சவத்தின் போது இவள் சிம்ம வாகனத்தில் ஏறி வருவாள்.  பெண்கள், இவள் புகழ் பாடிக் கும்மியடிப்பார்கள்.

    கீழ் வரும் பாட்டு சேலம மாவட்டத்தில் வழங்குகிறது.

            நாலு காலச் சட்டம்
            நடு நிறுத்தி
            நட்சத்திரம் போல
            ஒரு தேர் எழுப்பி
            தேருக்கு ஒடையாளி
            தேசமாளும் முத்தம்மா
            தேரேறி வருவதைப் பாருங்கடி
            ஓலைப் பொட்டி
            தலை மேலே
            ஒம்பது மக்களும்
            கக்கத்திலே
            மக்களைப் பெத்த மாரியம்மன்
            மவுந்து வருவதைப் பாருங்கடி

சேகரித்தவர் : வாழப்பாடி சந்திரன்               இடம் : வாழப்பாடி

Comments