Skip to main content

எலிப்பத்தாயம்




சின்னப்பயல்


தொடர்ந்து கவனித்துக்கொண்டு வருகிறேன்

அந்த எலி இந்த நேரத்தில் தான் வருகிறது.
வந்தவுடன் கவிழ்ந்து கிடக்கும் பீங்கான் குவளையை
உள்ளுக்குள் எதேனும் இருக்கிறதா என
சுற்றி ஒரு வட்டம் போட்டு பார்த்துவிட்டு
அடுக்களையின் அடுத்த இடங்களுக்கும் செல்கிறது.
ஒன்றை விடுவதில்லை
மீந்து கிடக்கும் ரொட்டித்துண்டுகள்
சிந்திய பால் , கடித்து மீதம் வைத்த கடலை மிட்டாய்,
தக்காளியின் மேல் செதில்கள்,
உரித்துப்போட்ட பூண்டுத்தொலிகள் என
இருக்கட்டும் என்று விட்டுவைத்தேன்
ஒன்றும் கிடைக்காத நாட்களில்
பரணில் கிடக்கும் வீணான உளுத்துப்போன
கட்டைகளை பற்கள் கொண்டு ராவுவது
தொடர்ந்தும் கேட்கும்.
இன்று விடக்கூடாது என்று
“வீட்டிற்குள் தின்றுவிட்டு வெளியே போய்ச்சாகும் “
என்று குறிப்பிட்டிருந்த பாஷாணம் வாங்கிவந்தேன்.
இன்றும் வருகிறதா என்று பார்த்துவிட்டு
நாளை வைக்கலாம் என்று ஓரமாய்
பாக்கெட் பிரிக்காமல் வைத்துவிட்டேன்.
வந்தது,இரவில் அதே நேரத்திற்கு
எனக்கும் எழுப்புமணி இல்லாது விழிப்பு வந்துவிட்டது.
என்றும் போல அதே குவளையை வளைய வந்து விட்டு
அடுக்களையின் அனைத்து மூலைகளுக்கும்
சென்று வருவது புலப்பட்டது.
சிந்தியவை துடைக்கப்பட்டிருந்தது
மீந்தவை காலியாக்கப்பட்டிருந்தது
தொலிகளின் சுவடே இல்லை..
இருப்பினும்
பாக்கெட் பிரித்து வைக்க மனமேயில்லை எனக்கு.

என்ன ஒன்று
பூனைகளைப்போல அத்தனை இலகுவில்
நம்மருகில் வந்து பழகுவதில்லை எலிகள்.


Comments

சுத்தம் செய்வதால்...

ரசித்தேன்...
எலிப்பயல் எம் நெஞ்சத்திலும் குடிகொண்டுவிட்டான். இறுதி வரிகள் முத்தாய்ப்பு. பாராட்டுகள்.

சிறு வேண்டுகோள்; கருத்திட வருவோர்க்கு இடைஞ்சலாய் உள்ளவார்த்தை சரிபார்ப்பை நீக்கிவிடுங்களேன்.