Skip to main content

ஒரு கவிதை


ஒரு கவிதை
தன்னை எழுதிக்கொள்ள
சொற்களை எதிர்பார்த்து
காத்துக்கொண்டிருக்கிறது.
என்னிடம்.

இடையே வந்த தென்றல்
கொஞ்சம் அதன் முடியை
மயிலிறகு கொண்டு
நீவிச்சென்றது

அவ்வப்போது பெய்த
சிறு மழைத்துளிகள்
கலைந்த முடிகளை
சிறு கற்றைகளாக்கிச்சென்றது

அக்கற்றைகளிலிருந்து
வடிந்த மழைத்துளிகள்
காதோர மணிகளில்
தொக்கி நிற்க, அதில்
சூரியன் தன் முகம்
பார்த்துச்சென்றது.

இன்னும் தான்
உனக்குப்போதுமான
சொற்கள்
கிடைக்கவில்லையா
என அக்கவிதை
என்னை கேலி
செய்துகொண்டிருக்கிறது.

ஒரு புன்முறுவல்
கிடைத்தால்
இந்தக்கவிதை
முழுமை பெறும்
யாரேனும் அதனிடம்
சொல்வீர்களா..?!


Comments

Marc said…
அழகான கவிதை வாழ்த்துகள்

Popular posts from this blog