Skip to main content

கார்க்கால ஞாபகங்கள்

மழையின் கிணுகிணுப்பு
ஒரு மெல்லிய பாடலாய்
மீட்டெடுக்கும் நான் தொலைத்த
ஞாபகங்கள்


எல்லோர் கையிலும் குடை பூக்க
மழை நனைக்க
நான் தனியளாகின்றேன்
தன் குடை தந்த அந்த வெள்ளுடைத் தோழனின்
புன்னகை
மிகப்பிடித்தமாய் இதயத்தில் நடந்து போயிற்று.

மழை மழையென யன்னல் வெளியில்
செடியிடையில்
அலையும் மனதை
இழுத்துப்பிடித்து உற்சாகமாய்
இஞ்சி பிளேன் டீ ,மொறு மொறு மாரி பிஸ்கட்
பொருளியல் இறுதிப்பரீட்சை
இப்போதும் மழை நிலம் சேர்ந்தால்
ஊன்றிப்படிக்கும் உணர்வே துள்ளும்…


இடையறாது பேசும் மழை
உம்மாவின் கை மணக்கும் தேநீர்
வெளிக்கிளம்பும் ஆவி
ஒரு மேசை நாற்காலி
கன்னத்தில் இருகை பதித்த நான்.
இனிக்குமென் கார்காலச் சித்திரம்.

கால் நிலத்தில் படராத வயது
துள்ளும் கால்கள்
இருகை ஆட்டி இன்னொரு மழையாய் குதூகலிக்கும்
நான் இரு தங்கைகள்
மழைக் குளியல்
வாசற்படியில் தலை சாய்த்து ரசிக்கும்
என் வித்தியாசமான உம்மா.


வீட்டின் நாற்சக்கர வாகனம்
சிறகு முளைக்கும் அதிசயம்
மழைநாளில் மாத்திரமே சாத்தியம்!
பாதி இழுத்த வேன் கதவு…
முழுதாய் முகம் மழை வாங்கும்.
ஊசிக்குத்தாய் இறங்கும் கோடை மழையும்
வலிக்காது.

நாடு விட்டு நாடு
சுற்றிப்படர்ந்த கடல்
வான்கிளறும் மலைப்பாறை
பக்கத்தில் இறுக்கமாய்
என் நெருக்கம்.. அற்புதமாய்
அப்போதும் மழை…..
கமெராவுக்குள் அடைக்க முடியாத
ஜில்லிப்புடன்…
கண்ணடித்துப் போயிற்று.

மே மாதத்தினொரு பொழுது..
“அமைதிக்கான இறுதி யுத்தம்”
கால் இடறி விழும் இடமெல்லாம்
மனித மாமிசம்…
பின்வாசல் பெருக்கெடுக்க
அன்றுங்கூட வலுத்த மழை
…………
முதன் முறையாய்
மழை வலித்தது எனக்கு.

Comments

மதி said…
very touching finish .. the poem stands out in both the long part of pleasantry and the short finish of shock .. congrats
வலியின் நினைவுகளுமாய் வந்தது மழை. நல்ல கவிதை...