Skip to main content

நீதிக்கிளி

என் நெஞ்சுக்குள் உட்கார்ந்துகொண்டு
நான் எதையும் செய்து முடித்துவுடன்
இது தப்பு, இது சரி, இது ஏன் தப்பு இது
ஏன் சரி என்று ஒலிக்கும் அருவமாக
டிக் டிக் கென்று ஏதேதோ சொல்லிக்
கொண்டிருக்கும் நீதிக் கிளியே!

நீ உன் வாதத்தையெல்லாம் அறிவுடன்
எடுத்து நான் எதையும் செய்ய
ஆரம்பிக் குமுன் சொல்வதற் கென்ன?
ஏன் எதையும் செய்த பின்
சொல்லித் தொலைத்து என் அமைதியையும்
தொலைக்கிறாய்? சரி தப்பு
என்று நான் செய்து விட்டது பற்றித்
தீர்மானிக்க முடியாமல்
தவிக்கும்போது நீ வேறு குட்டையைக்
குழப்புகிறாயே - அது ஏன்?
செய்யலாமா வேண்டாமா? எப்படிச்
செய்யலாம் என்று நான்
யோசிக்கும் வேளையில் நீ எங்கேதான் போயிருந்தாய்? அப்போது
உனக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும்
இல்லாததுபோல் இருந்து
விட்டாயே! - அது ஏன்? உன் பொறுப்பு
அப்போது உனக்குத் தெரியவில்லையா?

என் உள்ளத்தில் ஓயாத சந்தேகங்கள்
எழுந்து இது இப்படி நடந்திருந்தால்
சரியாகியிருக்குமா இப்படி ஏன் நடக்க
வில்லை. ஏன் இப்படி நடந்தது என்று
சஞ்சலப்பட்டு ஊசலாடிக்கொண்டு என்னை
அலக்கழிக்கும்போது நீயும் உன்
குற்றம் சாட்டும் குரலை எழுப்புகிறாயே
சனியனே - நீ ஏன்
துருத்திக்கொண்டு வருகிறாய்?
உன்குரலை அமுக்குவது எப்படி?

வாழ்க்கை என்பது சிக்கலில்லாமல் சுலபமாக
இருந்துவிடக் கூடாதே என்பதற்காகவே
நீ உன் குரலை எழுப்பி எனக்கு எதிராக
உலகமெல்லாம் பரவத் தீ மூட்டுகிறாய்?
எதிலுமே சரி - தம்மை சரிவர அறிந்து
கொள்ளமுடியாது என்பதை
அறிந்துதான் நீ ஒதுங்கி இருந்தாயா?
காரியம் முடிந்து மாற்ற இனி ஒரு போதும்
முடியாது என்று ஏற்பட்டபின்தான்
உனக்கும் உன் நீதிக்கும் நேர்மைக்கும்
உயிர் வருகிறதா? சாக்ஷியம் சந்தர்ப்பங்களையும்
பொறுத்ததா அல்லது நிரந்தரமானதா?

எந்த வழியில் சென்றாலும் ஏற்கத் தகாத
முடிவையே எட்டமுடியும் என்பது
சரித்திர அனுபவமா? அல்லது எந்த முடிவுமே
ஒரு முடிவற்ற முடிவுதான் வேறு வித
மாகவும் இருக்கலாம் என்கிற நினைப்பில்
ஆறுதல் அளிக்கிறதா?
குழப்பத்தை விளைவிக்கிறதா?
முடிவெடுப்பதைத் தடுக்கிறதா?

நீதிக் கிளியே! உனக்கு இதெல்லாம்
தெரியாது, சரி தப்பு என்று
கிளிப்பிள்ளை மாதிரி மாற்றி மாற்றி
சொல்லத்தான் தெரியுமே தவிர
வேறு எதுவும் தெரியாது
உன்னை கழுத்தை முறித்துப்போட்டு விட்டால்
வாழ்க்கை வழி சுலபமாகிவிடும்.

Comments

நீதியின் நியதியைச் சொல்கிறது நீதிக்கிளி
நீதிக் கிளியான மனசாட்சியின் மேல் குற்றங்களைச் சுமத்திவிட்டுத் தப்பிக்க பார்க்கிற மனித இயல்பை அழகாய் உணர்த்துகிறது கவிதை.