Skip to main content

பூனைகள்.......பூனைகள்.........பூனைகள்......29









தந்தைமை


என் வீட்டு மாடிப்படி யோரம்
தினம் தினம் அலைந்துக் கொண்டிருந்த
வெள்ளைநிற வயிறு பெருத்த பூனை
நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது நேற்று

குட்டிப்போட்ட பூனை சும்மா இருக்குமா?
நொடிக்கொரு முறை மாடி யேறியது
சமையல்கட்டுக்குள் பதுங்க இடம் தேடியது
மாடிப்படிகளில் கக்கி வைத்தது கண்டதையும்
இரவுகளில் அழுதது உயிர் கரைய

தொந்தரவு மிகுந்த முன்னிர வொன்றில்
இரை தேடிச் சென்றவளை ஏமாற்றி
பலவந்தமாய் பிடுங்கிய குட்டிகளை
பக்கத்துத் தெரு குப்பைத்தொட்டி யோரம்
விட்டு திரும்பிய மறு கணம்

பிரசவத்துக்கு அம்மா வீடு சென்றிருந்த
மனைவியிடமிருந்து அலைபேசி தகவல் வந்தது
தாயும் சேயும் நலமென்று ஆறுதலாய்

-என்.விநாயக முருகன்

Comments

GS said…
அருமையான, மனதைப் பிசையும் கவிதை. ஸ்ரீதர்-சாமா