Skip to main content

Posts

Showing posts with the label செல்வராஜ் ஜெகதீசன்

பூனைக்கும் மனிதனுக்கும் பொதுவான உணவு

பூனைக்கும் மனிதனுக்கும் பொதுவான உணவு செல்வராஜ் ஜெகதீசன் வாங்கிய பொருட்களின் கனம் தாங்காமல் கடை வாசலில் வைத்தேன் சற்றே இளைப்பாற. பாய்ந்து வந்து பைகளின் மேல் மோதிய பூனையொன்றை விரட்டியவன் வேகமாய் அவ்விடம் விட்டு அகன்றேன். பூனைக்கு உதவும் மனமில்லாமல் இல்லை. பூனைக்கும் மனிதனுக்கும் பொதுவான உணவொன்றும் பை - வசம் இல்லாததே காரணம்.

அகத்தின் அழகு

இன்னொரு   நாளின் தொடக்கம் . எல்லோருக்கும் கை அசைத்தபடி வந்து கொண்டிருந்த மகனின் மகிழ்ச்சி இழைகளால்   ஆன முகத்தை அணிந்தபடி சென்று கொண்டிருந்தேன் . இவனின்   கை   அசைப்பிற்கு எதிர்வினை   ஏதுமின்றி எதிர்ப்பட்ட முகமொன்றில்   அத்தனை   இறுக்கம்.   உற்றுப்   பார்க்கையில் சற்று முன் இறக்கி வைத்த என் முகம்.

கார்பொரேட் கூட்டங்களின் கடைசி நிமிடங்கள்

ஐயன்மீர் ! தொடக்கத்தில் திரையில் காட்டப்பட்ட    பாதுகாப்பு அட்டைகள் பற்றி எந்த ஆட்சேபமும் இல்லை எங்களுக்கு. அடுத்து முன்வைக்கப்பட்ட   வரவு செலவு கணக்கு பற்றியோ எதிர்கால திட்டங்கள் குறித்தோ நாங்கள் சொல்ல விரும்புவதும் ஏதுமில்லை. விடைபெறுவதற்கு முன் விருந்தோம்பல் சகிதம் திறக்கப்பட்ட மதுப் போத்தல்களைப் பற்றியே எங்களின்   இந்த தாழ்ந்த விண்ணப்பம். எங்களைப் போலவே உங்களின் வாகனங்களின் வருகைக்கும் காத்திருக்கும் எதிர்பார்ப்பின் கண்களுக்கு என்னவிதமான உத்திரவாதத்தை தரப் போகிறோம் நாம்.

எதிர் விளையாட்டு

இடைவேளை நேரங்களில் பள்ளியில் விளையாடும் ஒரு விளையாட்டின் பெயர் ‘ எதிர் விளையாட்டு ’ என்றான் மகன். ‘ சிரி என்றால் அழ வேண்டும் அழு   என்றால் சிரிக்க வேண்டும் உட்கார்   என்றால் எழ வேண்டும் எழுந்திரு என்றால் உட்கார வேண்டும். ’ அனேகமாய் எல்லா நேரங்களிலும் அவனே ஜெயிப்பதாய் அடிக்குறிப்பு வேறு. அட்டகாசம் என்று தட்டிக் கொடுத்தவன் அடியோடு அதை மறந்தே போனேன். அடுத்த நாள் வந்த ஸ்கூல் டைரியில் எழுதப்பட்டிருந்தது. ' பேசாதே என்றால் வகுப்பில் பேசிக் கொண்டே இருக்கிறான் ’ என்று.

உயிரோசை

உண்மையை உண்மையென்று உணர்த்த இத்தனை விவரங்களை ஈமெயிலில் நீ அனுப்பித் தந்த போதும் தொலைபேசியில் தெரிவித்த உன் குரல்வழி விளக்கமே போதுமானது எனக்கு. ஏனெனில் தொலைபேசியில் ஒலித்தது உன் உதடுகளின் ஓசையா? ஒரு உயிரின் ஓசை அல்லவா?

என்ன சொல்ல?

இனிமேல் பார்க்கவே கூடாதென்று  நினைத்திருந்த இடுங்கிச் சிரிக்கும் அந்த கண்களை இனம் மொழி தேசம் கடந்து இன்னொரு இடத்தில் காணச் செய்யு ம் இந்த இயற்கையை என்ன சொல்ல? o

சூடாப் பூ ...

பள்ளி விட்டு வந்ததும் தன் ஆஸ்தான இடத்தில் அமர்ந்திருப்பாள்  அம்மு. எல்லோரும் வீட்டிற்குப் போக  தான் மட்டும் அனுதினமும் அங்கு வருவது பற்றிய ஆரம்ப காலக் கேள்விகள் அவளை விட்டுப் போய்விட்டன. ஓலைக் குடிலின் ஓர் மூலையில் அமர்ந்து எல்.கே.ஜி பாடங்களை  படித்துக் கொண்டிருப்பதும் அம்மாவிடமிருந்து  பூ வாங்கிப்போவோருக்கு புன்னகை ஒன்றை இனாமாய்க் கொடுப்பதும் அவளின் அன்றாடக் கடமைகள். மீதமிருக்கும் பூக்களுடன் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் அம்முவிற்கு என்றைக்குமே புரிந்ததில்லை அம்மா ஏன் சூடிக் கொள்வதில்லை அவைகளில் ஏதொன்றையும் என்பது.

விமர்சனங்களைத் தாங்காத கலைஞன்

பெற்றோரைப் பேணாத பிள்ளையென்ன பிள்ளை? பேரிரைச்சல் இல்லாத அருவியென்ன அருவி? பேரின்பம் காணாத பிறவியென்ன பிறவி? சிற்றின்பம் துறக்காத துறவியென்ன துறவி? மனைவியர் மனசு நோகப்பண்ணும் கணவனென்ன கணவன்? மற்றெந்த உயிரையும் மதிக்காத மனிதனென்ன மனிதன்? மனதில் கல்மிஷம் கொண்டலையும் பிறப்பென்ன பிறப்பு? விமர்சனங்களைத் தாங்காத கலைஞன் என்ன கலைஞன்?

விநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்...!

காலை வணக்கத்தில் தனம் சங்கீதா முற்பகல் பேட்டியொன்றில் கேரளத்துப் பாவ்னா பிற்பகல் பேட்டியில் பேரிளம்பெண் நமீதா மாலைத் திரைப்படத்தில் மறுபடியும் நமீதா கும்கும் குமரிகளின் குளுகுளு பேட்டிகளும் குத்தாட்டப் பாட்டுக்களும் பிரம்மச்சாரி பிள்ளையார்க்கு பெருங்குஷிதான்! பேரின்பம்தான்!

இரண்டு கவிதைகள்

01 தொடர்பிலிருந்து நீ விலகிச் செல்லும் ஒவ்வொரு முறையும் பிறிதொரு மார்க்கத்தில் உன்னை பின்தொடர யத்தனிக் கும் வேளையில் நீயாகவே அழைத்துப் பேசி தொடரச் செய்கிறாய் இந்த விளையாட்டை இன்னுமோர் முறையும். O 02 புதிதாய் வந்து நின்றிருந்த காரின் முன்புறம் நெடுநேரம் விளையாடிக்கொண்டிருந்த இரண்டரை வயது மகனின் கையிலிருந்த கல்லொன்றை காண நேர்ந்த பொழுதுக்குள் வரைந்து தள்ளியிருந்தான் நிறைய கோட்டோவியங்களை. சுற்றியிருந்தோரிடமிருந்து ஏதும் சுடுசொல் வருவதற்குள் பட்டென்று சொல்லி ஓடிப்போனான் 'பெரிய ரப்பர் கொண்டு அழித்தால் போய்விடும் அப்பாவென்று.' o

அம்மா மாதிரி (சிறுகதை)#

01வரவர இந்த அப்பாவைப் பார்க்கவே பிடிக்கவில்லை. ஏன் அப்பா இப்படியெல்லாம் செய்கிறார்? என்ன செய்தாலும் என்னால் அதை தடுக்கவா முடியும்? பன்னிரண்டு வயது பையனால் என்ன செய்ய முடியும்? இவர் இப்படியெல்லாம் செய்வாரென்று தெரிந்துதான் அம்மா முன்னாடியே போய்விட்டாளா? அம்மாவை நினைத்ததும் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. அம்மாதான் எவ்வளவு அன்பாக இருந்தாள்? சாந்தமான அந்த முகம். எதைக் கேட்டாலும் வாங்கித் தரும் கனிவு. "அம்மா தாயே" என்று யாராவது பிச்சைக்காரர்கள் வந்தால் அவர்களுக்கு அரிசியோ, காசோ ஏதாவது கொடுத்தனுப்பும் அந்த பரிவு. அம்மா நிஜமாகவே ரொம்ப நல்லவள். அப்பா அப்போதெல்லாம் நன்றாகத்தான் இருந்தார். அம்மாவிடமும் எங்களிடமும் அன்பாக இருப்பார். அடிக்கடி எதையாவது சொல்லி சிரிப்பு வரவழைத்தபடி இருப்பார். எனக்கும் தம்பி தங்கச்சிக்கும் வெளியே எங்காவது போனால் கண்டிப்பாக ஐஸ்க்ரீம் வாங்கித் தருவார். அம்மா அப்பாவோடு நான் தம்பி தங்கச்சி எல்லோரும் சினிமா போவோம். சாயங்காலம் ஆனால் அம்மா எல்லோரையும் உட்காரச் சொல்லி படிக்கச் சொல்லுவாள். தங்கச்சி பாப்பாவுக்கு ஏ பி சி டி சொல்லிக் கொடுக்கும்போது அப்படியே...

முன் முடிவுகளற்று இருப்பது

எப்போதாவது என்றால் சரி. எங்காவது ஒருமுறை என்றால் சரி. யாராவது ஒருமுறை எனில் சரி நடைபெற்ற யாவற்றிலும் நாம் இருவருமே பங்கு பெற்றிருக்க பிரச்சினை என்றவுடன் பின்வாங்கி நிற்கும் உங் களிடம் பெரிதாய் வருத்தமேதுமில்லை எனக்கு. எதையுமே அறியாத தோற்றம் தரும் உங்களின் முக ம் குறித்தும் எனக்கு முழு சம்மதமே. எல்லாப் பிரச்சனைக்கும் என்னை நோக்கி நீளும் உங்கள் கைகளைப் பற்றிக் குலுக்க இப்பொழுதும் எனக்கு சம்மதம். ஆயினும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும் நான் இப்போது. முடிவொன்று தேவையா என்றாவது முடிவு செய்ய வேண்டும். முன் செய்த முடிவுகளெல்லாம் முடிவில் இப்படி எப்படியோ ஆகிக்கொண்டிருக்க முன் முடிவுகளற்று இருப்பதைப் பற்றி முழு மூச்சாய் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கியான் (சிறுகதை)

கியான் செத்துப் போனாளாம். விழாக் காலங்களில் மைக் செட் போடும் மதியழகன், பார்க்கும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். யாருமே அதை அவ்வளவு பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. அழகப்பர் தன் பெட்டிக்கடையில் உட்கார்ந்தபடி வருவோர் போவோரிடமெல்லாம் தன் பிள்ளைபற்றிய இழிபுராணதைப்பாடிக்கொண்டிருந்தார். டீக்கடை கோவிந்தன் சூடான பாலை டிகாக்சனில் கலப்பதிலேயே மும்முரமாய் இருந்தான். பார்பர்ஷாப் முருகன் வாடிக்கையாளர் முகத்தில் சோப்பை போட்டுக்கொண்டிருந்தான்.தெருவோர நாய் ஒன்று யாரையோ பார்த்து ஆக்ரோசமாய் குலைத்துக் கொண்டிருந்தது. மனிதர்கள் முதல் மிருகங்கள் வரை யாரையும் அந்த செய்தி பாதித்ததாய் தெரியவில்லை. கியான் அப்படி ஒன்றும் அத்தனை பிரபலமான ஆளில்லை. சிறுபிள்ளைகளுக்கு அவள் ஒரு விளையாட்டுப் பொருள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளுக்கு அவள் ஒரு பரிகாசப் பொருள். பெரியவர்களுக்கு அவளொரு பரிதாப ஜீவன். சுருங்கச் சொன்னால் கியான் ஒரு மனநிலை சரியில்லாதவள். ஊராரின் வார்த்தையில் 'பைத்தியம்'. கியான் மற்றவர்களைப் போலில்லை. திடீர் திடீரென்று சிரிக்கின்ற ரகமோ, கையில் கிடைத்ததை எடுத்து வீசுகின்ற ரகமோ இல்லை. எப்போதும்...

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில்

ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் நிறைய தொலைபேசி அழைப்புகள் நீங்கள் யாரென்னும் கேள்வியோடு நிராகரிக்கப்படலாம் நிலுவையில் இருக்கும்நிறைய வழக்குகள் தள்ளுபடி செய்யப்படலாம் நாளைய நம்பிக்கைககளின் வேர்கள் நடுக்கம் காணலாம். உறவுகளுக்குள்ளான உறுதிமொழிகள் உடனுக்குடன் ஆவணப்படுத்தப்படலாம். பிறந்த நாள் பிரிந்த நாள் உபசாரங்களெல்லாம் ஒடுங்கியோ அல்லது ஓய்ந்தோ போகலாம். அந்தந்த கணங்களில் வாழ அநேகம் பேர் ஆயத்தமாகலாம் நிகழ் கணங்களை உடனுக்குடன் பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் கவிதைகளுக்கு நேரலாம் ஞாபகங்கள் இல்லாது போகுமொரு நாளில் நிறைய துரோகங்கள் மன்னிக்கப்படலாம் அல்லது மறக்கப்படலாம்

இதையும்#

இன்னும் சற்று மேம்பட்டதாக இன்னும் சிறிது சுரத்துள்ளதாக இன்னும் கொஞ்சம் உவப்பானதாக இன்னும் எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம் என்கிறீர்கள். இந்த ஒரு சிறு வாழ்வில் இந்தளவாவது இயன்றதே என்கிறேன். இதையும் எப்படியாவது புரிந்து கொள்ளுங்கள் ஏனைய பிற யாவற்றையும் போல.o

விளம்பரங்களில்

விளம்பரங்களுக்கிடையில் வந்து போகின்றன விளம்பரதாரர் வழங்கும் நிகழ்ச்சிகள் நல்லது பயக்குமெனில் நல்லது கறையென்கின்றன இன்னுமதிக வெளுப்புக்கு இவையிவை என்ற அறிவிப்புகளோடு இலவசங்களுக்கான சீசன்களை எப்போதும் நினைவுறுத்திக்கொண்டு விளம்பரங்களில் வகுபட்டு பின்னமாகிக் கொண்டிருக்கிறது பொழுதுகள்

இன்று வரை

நிச்சயமாய் தெரியுமென்றாலும் நீண்டு கொண்டுதான் இருக்கிறது இன்று வரை. ஏதாவதொரு கையசைப்போ எதிர்கொண்டழைக்கும் முகமொன்றுக்கோ ஆன ஏக்கங்கள். O

விமான நிலைய வரவேற்பொன்றில்...

# பயணக் களைப்பாய் இருக்கலாம். போய்வரும் இடத்தில் நேர்ந்த உறவைப் பிரிந்ததால் இருக்கலாம். எதிர்கொண்டழைக்க எவருமற்று காணும் புது இடம் குறித்த மிரட்சியாய் இருக்கலாம். ஏக்கமும் சோகமும் கொண்டு எதிர்பட்டவனை நோக்கி இதழ்க்கோடியில் தவழ விட்டேன் புன்னைகையொன்றை. சற்றே சலனம் காட்டி பின் சமாளித்து போய்க்கொண்டிருந்தவன் நினைத்திருக்கக்கூடும் ஏதும் என்னைப் பற்றி. இறுக்கிப் பிடிக்கும் வாழ்க்கையில் இன்னொரு முகத்தின் சோகத்தை இம்மியாவது இடம்பெயர்க்க முடிந்ததென்ற நிம்மதி எனக்கு.

பதட்டம்..

சகபயணி ஒருவன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து எடுத்த மூக்குக்கண்ணாடியோடு மாட்டிக்கொண்டபடி வந்த பேனாவை மீண்டும் சரியாகப் பொருத்தவில்லை - தன் சட்டைப் பாக்கெட்டில். பதட்டம் கூடிக் கொண்டிருந்தது பார்த்துக்கொண்டிருந்த என்னுள்.

பேசும் மௌனங்கள்...

எப்போதும் பேசிக்கொண்டே இருக்கின்றன உன் மௌனங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறேன் உன் மௌனங்களோடு எப்போதாவது பேசிக்கொள்ளும் நம் மௌனங்கள் நம் இருவரையும் புறம் தள்ளி . 0