Skip to main content

Posts

Showing posts with the label கணேஷ்

சந்தை

    வீட்டில் செய்த பண்டங்களை விற்க கடைகடையாய் ஏறி இறங்கினேன். ஒரு கடைகாரனும் என் பண்டத்தை கடையில் வைத்து விற்க சம்மதிக்கவில்லை… பண்டங்களை நானே தின்று தீர்க்கவேண்டியதாகிவிட்டது. அடுத்த நாளும் பண்டங்களை செய்தேன்.. விற்பனை செய்ய தெருவெங்கும் கூவிச்சென்றேன். யார் வீட்டு கதவுகளும் திறக்கவில்லை காசு கொடுத்து வானொலியில் என் பண்டத்தின் பெயரை ஒலிக்கச்செய்தேன். ஒன்று கூட விற்கவில்லை. சுவரொட்டிகளும் விளம்பரங்களும் பத்திரிக்கைகளும் எதனாலும் கைகூடவில்லை விற்பனை. நடுத்தெருவில் வீசியெறிந்தேன் என் பண்டத்தை. வீதியெங்கும் சிதறிக்கிடந்தவற்றை என்னவென்று பார்த்து பின்னர் சுவைத்தனர் ஜனங்கள். அடுத்த நாள் பண்டத்தை சமைக்கத்துவங்கிய போது வாசலெங்கும் நுகர்வோர்களின் வரிசை.                              

வாசல்

        சிற்றூரில் வாழ்ந்திருந்த சிறுவயதில் விடியற்காலம் வாசற்படியில் நான் படிக்கும் சத்தத்தோடு விதவிதமான பறவைகளின் சத்தங்களும் சேரும் சேவலின் கூவல் காகங்களின் கரைச்சல் குருவி, மைனாக்கள், மற்றும் பெயர் தெரியா பறவைகள் பகலுக்காக ஆயத்தமாகும் சத்தங்கள் இப்போதெல்லாம் விடியற்காலத்தை சந்திப்பதேயில்லை பறவைகளின் சத்தமும் கேட்பதேயில்லை வாசல் மட்டும் இருக்கிறது…. பக்கத்து ஃப்ளாட்டின் செருப்புகள் சிதறி

நிழல் விமானம்

    வெண் திரைத்துனியில் கருஞ்சித்திரமாய் நகர்ந்து கொண்டிருந்தது நிழல் விமானம் பச்சை வயல்கள், மணற்பரப்புகள், தொழிற்சாலை கூரைகள்.. எல்லாவற்றின் மீதும் கருநாகம் போல ஊர்ந்து சென்றது. தந்தை கைப்பிடித்து குதித்து குதித்து நடக்கும் சிறுவனின் உற்சாகம்.   பிரம்மாண்டமானதொரு நீர்ப்பாசன கிணறொன்றில் பாய்ந்தபோது நிழல் விமானம் மறைந்துபோனது. சகபயணியொருவர் பயணத்தில் காணாமல்போனால் உண்டாகும் பதைப்புடன் பார்வையை சுழலவிட்டேன். கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. கதிரவன் ஒளிந்திருந்தான். போதுமான ஒளியின்மையால் நிழல் விமானத்தை தேட முடியவில்லை. மேகங்கள் விலகி சூரியன் மீண்டும் வெளிவந்த சில நொடிகளில் அதிர்வின்றி தரையை தொட்டது விமானம்.   முட்டிமோதி படியில் இறங்கி பேருந்தில் அமருமுன் நிழல் விமானத்தை மீண்டும் பார்த்தேன். எவ்வித அசைவுமின்றி ராட்சத அளவில் அமைதியுற்று  நிற்கும் விமானத்தின் அடியில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது நிழல் விமானம்.

அறையிருட்டு

எஞ்சியிருந்த மெழுகுவர்த்தி சுடரை காற்றின் உதவியுடன் புகையாக்கி ஒளியை விழுங்கியது அறையிருட்டு. மனிதவிழிகள் கூட தனது ஓட்டைகளை பார்க்க முடியாதென கர்வம் கொண்டது. தனது சுயசொரூபத்தை முழுக்க உணரும் வேட்கையில் சன்னலுக்கு வெளியே படர்ந்திருந்த பேரிருட்டின் அங்கமானது. பேரிருட்டு விரியும் திசைக்கு மாற்றுதிசையில் பேரிருட்டுப்பாதையினூடே விரைந்து பறந்தது. +++++ சில ஆயிரம் மைல்கள் தூரத்தில் பேரிருட்டின் எல்லை முடிந்தது. எலலையற்ற தன்மையை அனுபவமாய் உணரும் பேரார்வத்தில் சூரியவொளி ஆக்கிரமித்திருந்த நிலப்பரப்பில் நுழைந்தவுடன் அறையிருட்டின் ஒருபகுதி பஸ்மமானது. வந்த வழி உடன் திரும்பி பேரிருட்டின் பாதையூடெ அறைக்கு மீண்டு வர எத்தனிக்கையில், சூரியவொளியின் நீளும் கரங்களில் சிக்கி பேரிருட்டுடன் சேர்ந்து அறையிருட்டு கரைந்துபோனது. +++++ பேரிருட்டின் ஆவியுடல் சரண் புகுந்த ஏதொவோர் இடத்தினிலேயே அறையிருட்டின் ஆவியுடலும் அகதியானது. பேரொளியின் ஆட்சி ஒய்ந்தபின் மீண்டும் உயிர்க்கும் போது அறையிருட்டையும் உயிர்ப்பித்து அதன் அறையில் சேர்த்துவிடுவதாக பேரிருட்டு வாக்களித்தது.