Skip to main content

ஏ,டி.எம் கொள்ளையன் ஹரியானாவில் சிக்கினான்

 

துளி - 205



அழகியசிங்கர்


இந்தத் தலைப்புச் செய்தியை நாள் ஒரு தினசரியில் படித்தேன்.  திகைப்பு அடைந்து விட்டேன்.  எப்படி யாருக்கும் தெரியாமல் பணத்தை எடுக்க முடியும்.  இந்தத் திருட்டில் ஏடிஎம் கருவிகளைக் கொள்ளையர்கள் உடைக்க வில்லை.

பத்தாண்டுகளுக்கு முன் நான் ஒரு தேசிய வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தேன்.  அங்கு ஒரு பெண் அலுவலர் நேர்மையானவர், பணி புரிவதில் நல்ல அனுபவமுள்ளவர் மீது ஒரு பழி.

அவர் எப்போதும் ஏடிஎம்மில் பணத்தை வைப்பவர்.  கிடிக்குப்பிடி அலுவலகப் பணிகளுக்கிடையே பணத்தையும் ஏடிஎம்மில் வைத்துவிட்டு வந்து விடுவார்.

அவருடைய செயலில்  எந்தத் தவறும், எப்போதும் ஏற்படாது.

அவர் ஒரு முறை வைத்து விட்டு வரும்போது 1லட்சம் ரூபாய் ஏடிஎம்மில் காணோம்

தலைமை அலுவலகத்திலிருந்து  கண்காணிப்புத் துறையினர் ஓடி வந்து அவரைப் பலவாறு கேள்விகள் கேட்டுக் குடைந்துகொண்டே இருந்தார்கள். காமெரா பொருதியிருந்ததால் காமெரா மூலம் பார்த்தார்கள்.  பின் பணம் பட்டுவாடா செய்த சிப்பந்தியைப் பார்த்தார்கள்.  ஒரு பலனும் இல்லை.  

பணம் எப்படிப் போனது என்று தெரியவில்லை.  எல்லோரையும் சந்தேகப் பட்டார்கள்.    

யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.  கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆயிற்று.  எப்படிக் கண்டுபிடிப்பது என்றே தெரியவில்லை.  

கடைசியாக ஒரு வழியாகத் தீர்மானம் ஆனது.  அந்தப் பெண் அலுவலர் இனிமேல் ஏடிஎம் ப்ககம் போகக் கூடாது என்று.

அந்தப் பெண் அலுவலர் இழந்த பணத்தைக் கட்டவேண்டுமென்றும், அவருக்கு வரக்கூடிய இன்க்ரிமென்ட்  ஒரு வருடம் கட் என்று தீர்ப்பளித்தார்கள்.

நேர்மையான அந்தப் பெண்மணிக்கு ஏற்பட்ட சோதனையை நினைத்து வருந்தி, கிளை மேலாளரும், துணை மேலாரும் அந்த அலுவலருக்கு தன்னால் முடிந்த பங்கைக் கொடுத்தார்கள்.

என்னால் இதை மறக்கவே முடியாது.  உடனே அந்த அலுவலரை அந்தக் கிளை அலுவலகத்திலிருந்து மாற்றி விட்டார்கள்.

ஒன்றுமே செய்யாத குற்றத்திற்கு அவருக்குக் தண்டனை கிடைத்தது.

நேற்று செய்தித்தாளில் இந்த நூதனமான முறையில் திருடிச் சென்றதைப் பார்க்கும்போது, அந்த அலுவலர் ஞாபகம்தான் வந்தது. 

பல ஆண்டுகளுக்கு முன்பே இதுமாதிரி திருட்டு நடந்திருக்கும் அது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிறதோ என்று தோன்றுகிறது.  









Comments

Popular posts from this blog