எதையுமே எப்படி வெற்றி கொள்ள முடியும் என்பதை சிலர் அறிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்திரன் படத்தின் விளம்பரத்தை நான் டிவியில் பார்த்தவுடன், உடனே அந்தப் படத்தைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே என்னிடம் எழவில்லை. இப்போதெல்லாம் சினிமாவை விழுந்து விழுந்து முன்பு மாதிரி பார்ப்பதில்லை. பார்க்காமலே கூட இருந்து விடுவேன். பின் படத்தைப் பார்த்துவிட்டு எந்தக் கருத்தையும் குறிப்பிடுவதில்லை. பொதுவாக சினிமாப் படங்களெல்லாம் அபத்தமாகத்தான் எனக்குத் தோன்றும். அதில் எந்த லாஜிக்கையும் கொண்டு வர முடியாது. நம்முடைய பொழுதுபோக்கிற்காகத்தான் அதைப் பார்க்கிறோம். சினிமாவில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், அதில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளிகள் என்றெல்லாம் பார்க்கும் போது, சினிமா என்பது ஒரு அசுரரின் உலகத்தைச் சார்ந்ததாகத் தோன்றும். இந்த அசுரர் உலகத்தில் நடப்பதை வெறும் பார்வையாளனாகத்தான் பார்க்கிறோம். இந்த சலன உலகத்தை நாமும் பார்த்து சலனமடைகிறோம். குருதத் படம் ஒன்றை என் நண்பர் பார்த்துவிட்டு கண் கலங்கியதை நினைத்து வியந்திருக்கிறேன். வேறு நண்பர் ஒருவர் சிவந்த மண் என்ற ஒரு படத்தை 8 தடவைகளுக்கு மேல் பார்த்த...