Skip to main content

Posts

Showing posts with the label நிலாரசிகன்

பிரிதலின் நிறங்கள் - மூன்று கவிதை

1. யாருமற்ற அறையில் மடியில் முகம் புதைத்த ஒருத்தியின் விசும்பல் சப்தம் கேட்கிறது. மெல்ல மெல்ல உருவம் பெறுகிறேன் நான். விசும்பலின் கரங்களை பற்றிக்கொண்டு கண்கள் மூடி லயித்திருந்த கணத்தில் கதவைத் திறந்து உள்நுழைகிறான் அந்நியனொருவன். விசும்பல் சப்தமும் உருவம் தொலைந்த நானும் காற்றில் கலந்து மறைந்து போகிறோம். தன் அறை அது என்றெண்ணியபடி உடை களைந்து சதைப்பசியுடன் நெருங்குகிறானவன் . 2. புழுதிகளால் நிறைந்திருக்கிறது நீ வசிக்கும் அறையின் கண்ணாடி சன்ன்ல்கள். தூர வானின் நீலம், வெளிச்சமற்ற அறையின் இருள், இரக்கமற்ற வார்த்தையின் சிவப்பு என உன் கண்ணீர் மூன்று நிறங்களின் கலவையாய் வழிந்தோடுகிறது. நீயோ சலனமின்றி சன்னல் புழுதியில் என் பெயரை எழுதிக்கொண்டிருக்கிறாய். 3. சாத்தானின் கைகளில் தேவதை உன்னை சேர்க்கிறார்கள். சில வருட தனிமைத்தவம் உடைத்து வெளிவருகிறேன் நான். சாத்தானும் தேவதையும் சொர்க்கத்தில் மிதப்பதை காண்கிறேன். சாத்தானை ஆசிர்வதித்து தேவதையை சபித்து கடவுளாகிறேன் நான்.

இரண்டு கவிதைகள்

1.கவிதையின்றி அலைதலின் அவஸ்தைகள் கவிதைகளை துறந்துவிட்டு சில காலமாய் திரிந்துகொண்டிருந்தேன். கற்பனைகள் தூர்ந்து, கனவுகள் தகர்ந்து, பாதாளத்தின் வாய்பிளந்து என்னை உள்ளிழுத்துக்கொண்டது. இருள் கவிந்திருந்த அவ்விடத்தில் தொலைந்த பேனாக்களை தேடிக்கொண்டிருந்தனர் எந்திரத்தனம் நிறைந்த என்னையொத்த மனிதர்கள் சிலர். 2. சுயத்தை எரித்தல் மிகுந்த வெம்மையாயிருந்தது ஒரு சொல். வெம்மையின் கதிர்கள் முதலில் நுழைந்தது செவியில். செவிக்குள் நுழைந்த அச்சொல்லின் வெட்பம் இதயத்திற்கு இடம்பெயர்ந்திருந்தது வலியின் நீட்சியில். இதயம் கருகி கண்ணீராய் வெளியேறுகையில் மறுசொல்லுக்காய் காத்திருக்க ஆரம்பித்தது சுயம்

தனலட்சுமி டாக்கீஸ்

இ டுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு குளக்கரை படிக்கட்டில் தன்னுடைய வேட்டியை துவைத்துக்கொண்டிருந்தார் கட்டையன். மொறத்தூர் கிராமத்திலிருக்கும் தனலட்சுமி டாக்கீஸில் டிக்கெட் கொடுப்பவர்தான் கட்டையன். அவரது சொந்தப்பெயரான நாராயணன் அவருக்கே மறந்துபோகும் அளவிற்கு கட்டையனென்றே அழைத்தனர் ஊர்மக்கள். கொஞ்சம் குள்ளம் என்பதால் வந்த காரணப்பெயர்தான் கட்டையன். உருவு கண்டு எள்ளாத ஊர் ஏது? துவைத்தெடுத்த வேட்டியை கடைசி சொட்டு தண்ணீர் வடியும்வரை பிழிந்துவிட்டு தோளில் தொங்கபோட்டுக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். வீடு செல்லும் வழியில்தான் "தனலட்சுமி டாக்கீஸ்" இருக்கிறது. அதைக்கடப்பதற்கு முன் ஒருநிமிடம் நின்றார் கட்டையன். அவரது வாய் எதையோ முணுமுணுத்தது. கன்னத்தில் போட்டுக்கொண்டு வீடு நோக்கி நடந்தார். கட்டயனுக்கு கோவில் அந்த திரையரங்கம்தான். இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு திரையரங்கம் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை நுழைவுச்சீட்டு கொடுக்கும் பணியில் இருக்கிறார். தினமும் மாலை ஐந்து மணிக்கும், இரவு எட்டு மணிக்கும் என மொத்தம் இருகாட்சிகள் மட்டுமே கொண்ட கிராமத்து திரையரங்கம் என்பதால் மாலை நான...