நகரம் தொலைத்த வானம் வானத்து நட்சத்திரங்களை பகலில் சூரியன் விழுங்கிக்கொள்கிறான். சாலை விளக்குகளும் குண்டு குழிகளும் சக ஊர்திகளும் இல்லத்திரைக் காட்சிகளும் மேல் வீட்டுக்காரனின் கட்டாந்தரையும் இரவில் மறைத்துக்கொள்கின்றன. இறுதி ஊர்வலம்... இதோ புறப்பட்டுவிட்டது இறுதி ஊர்வலம்... மகள் கதறி தரையில் அழுது புரள... மனைவி கடைசிக் கடைசியாய் முகம் பார்த்துத் தவிக்க... உறவினர்களல்லாத சஹ்ருதயர்களும் கண்களில் கரைமீறாமல் நீர் துளிர்க்க. வாரியிறைக்கப்படும் சில்லறைக் காசுகளை பொறுக்குபவன் குறுக்கிடும் கேபிள்களைத் தள்ளி வழியேற்படுத்தித் தருகிறான். தெருவோரப் பிச்சைக்காரி ஏனோ தன்குழந்தையின் முகத்தின் முன் துண்டுவிரித்து காட்சியை மறைக்கிறாள். இணையாக வந்த யாரோ இரு இளம்பெண்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு ஒதுங்கி நிற்கின்றனர். இரண்டு தெரு கடந்ததும் யாரோவாகிப்போன மனிதர்கள் சலனமற்று வேடிக்கைப் பார்க்கின்றனர். தெருவெங்கும் இறைக்கப்பட்ட சிவப்பு ரோஜாக்களைப் பார்க்கையில் ஊர்வலம் போய்க்கொண்டிருந்த ஒருவன் நினைவில் காதலி கூந்தலின் ஒற்றை ரோஜா நினைவுக்குவர அவசரமாய் நினைவை அழிக்கிறான். பிணத்தின் காலடியில் கட்டப்பட்ட மிரண்ட...